யோபு


யோபு
முன்னுரை

விவிலியத்தின் ஞான இலக்கியங்களுள் ‘யோபு’ என்னும் இந்நூல் தலைசிறந்தது. ஒரு காலத்தில் கடவுளுக்கு ஏற்ற நீதிமானாக ஒருவர் வாழ்ந்து வந்தார்; அவர் பெயர் யோபு. அவர் செல்வர்; கடவுளுக்கு அஞ்சி நடந்தவர். கடவுளின் அனுமதியுடன் சாத்தான் யோபைச் சோதித்தான். இதனால் யோபு மக்களை இழந்தார். சொத்து சுகத்தை இழந்தார்; உடல் நலத்தையும் இழந்தார். இருப்பினும், அவர் கடவுளைத் தூற்றினாரில்லை. அவருக்கு ஏற்புடையவராகவே வாழ்ந்து வந்தார். அவர் மனைவியும் நண்பர்களும் அவருடன் வாக்குவாதம் செய்து, இறைவனின் நீதியை விளக்க முயன்றனர்.

பழைய ஏற்பாட்டுப் பின்னணியின்படி, துன்பத்திற்குக் காரணம் ஒருவர் செய்யும் பாவமே. ஆகவே, யோபு படும் துன்பத்திற்குக் காரணம் அவர் செய்த பாவமே என்பது நண்பர்களின் கூற்று. தாம் அத்தகைய குற்றம் ஏதும் செய்யவில்லை என்பது யோபு கூறும் மறுப்பு. இவ்வாறு ‘நீதிமான் ஏன் துன்பப்பட வேண்டும்?’ என்ற வினாவிற்கு விடை காணும் போக்கில், நாடகம்போல் அமைந்துள்ளது இந்நூல்.

இந்நூலின் காலம் திட்டவட்டமாகத் தெரியவில்லை. பல அறிஞர்கள் இது பாபிலோனிய அடிமை வாழ்வுக்குப் பிற்பட்டது என்பர்.

நூலின் பிரிவுகள்


1. முகவுரை 1:1 - 2:13

2. யோபும் அவர்தம் நண்பர்களும் 3:1 - 31:40

அ) யோபின் முறையீடு 3:1 - 26

ஆ) முதல் உரையாடல் 4:1 - 14:22

இ) இரண்டாம் உரையாடல் 15:1 - 21:34

ஈ) மூன்றாம் உரையாடல் 22:1 - 27:23

உ) ஞானத்தின் மேன்மை 28:1 - 28

ஊ) யோபின் இறுதிப் பதிலுரை 29:1 - 31:40

3. எலிகூவின் உரைகள் 32:1 - 37:24

4. யோபுக்கு ஆண்டவரின் பதில் 38:1 - 42:6

5. முடிவுரை 42:7 -17


அதிகாரம் 1

சாத்தான் யோபைச் சோதித்தல்


1ஊசு என்ற நாட்டில் யோபு என்ற ஒருவர் இருந்தார். அவர் மாசற்றவரும் நேர்மையானவருமாய் இருந்தார். கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி வந்தார். 2அவருக்கு ஏழு புதல்வரும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். 3அவருடைய உடைமைகளாக ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்க் காளைகளும், ஐந்நூறு பெண் கழுதைகளும் இருந்தன. பணியாள்களும் மிகப் பலர் இருந்தனர். கீழை நாட்டு மக்கள் எல்லாரிலும் இவரே மிகப் பெரியராக இருந்தார். 4அவருடைய புதல்வர்கள் ஒவ்வொருவரும் தம் வீட்டில் தமக்குரிய நாளில் விருந்து தயாரித்து, தம் மூன்று சகோதரரிகளைத் தம்முடன் உண்டு குடிப்பதற்கு அழைப்பது வழக்கம். 5விருந்து நாள்களின் முறை முடிந்ததும், யோபு அவர்களை வரவழைத்துத் தூய்மைப்படுத்துவார். “என் பிள்ளைகள் ஒருவேளை பாவம் செய்து, உள்ளத்தில் கடவுளைத் தூற்றியிருக்கக்கூடும்” என்று யோபு நினைத்து, காலையில் எழுந்து அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எல்லார்க்காகவும் எரிபலியை ஒப்புக்கொடுப்பார். யோபு எப்பொழுதும் இவ்வாறு செய்வது வழக்கம். 6ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தான் அவர்கள் நடுவே வந்துநின்றான்.✠ 7ஆண்டவர் சாத்தானிடம், “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம் “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான். 8ஆண்டவர் சாத்தானிடம், “என் உழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப் போல் மாசற்றவனும், நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சி தீமையானதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனும் இல்லை” என்றார். 9மறுமொழியாக, சாத்தான் ஆண்டவரிடம் “ஒன்றுமில்லாமலா யோபு கடவுளுக்கு அஞ்சி நடக்கிறான்? 10அவனையும் அவன் வீட்டாரையும், அவனுக்குரிய அனைத்தையும் நீர் சூழ்ந்து “நின்று காக்கவில்லையா? அவன் கைவேலைகளுக்கு ஆசி வழங்கவில்லையா? அவன் மந்தைகளை நாட்டில் பெருகச் செய்யவில்லையா? 11ஆனால், உமது கையை நீட்டும்; அவனுக்குரியவற்றின்மீது கை வையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மைப் பழிப்பான்” என்றான். 12ஆண்டவர் சாத்தானிடம், “இதோ! அவனுக்குரியவையெல்லாம் உன் கையிலே; அவன்மீது மட்டும் கை வைக்காதே” என்றார். சாத்தானும் ஆண்டவர் முன்னிலையினின்று புறப்பட்டான்.


யோபு பிள்ளைகளையும் செல்வத்தையும் இழத்தல்


13ஒருநாள் யோபின் புதல்வரும் புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக் கொண்டிருந்தனர். 14அப்போது தூதன் ஒருவன் யோபிடம் வந்து, “எருதுகள் உழுதுகொண்டிருந்தன; கழுதைகளும் அவற்றிற்கு அருகில் மேய்ந்து கொண்டிருந்தன. 15அப்போது செபாயர் பாய்ந்து, அவற்றைக் கைப்பற்றினர். ஊழியரை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 16இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கடவுளின் நெருப்பு விண்ணிலிருந்து விழுந்து, ஆடுகளையும், வேலையாள்களையும் சுட்டெரித்துவிட்டது. நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 17இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “கல்தேயர் மூன்று கும்பலாக வந்து ஒட்டகங்கள் மேல் பாய்ந்து அவற்றைக் கைப்பற்றிக் கொண்டனர். ஊழியர்களை வாள் முனையில் வீழ்த்தினர். நான் ஒருவன் மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 18இதைச் சொல்லி முடிப்பதற்குள் இன்னொருவன் வந்து, “உம் புதல்வரும், புதல்வியரும் தம் மூத்த சகோதரன் வீட்டில் உண்டு திராட்சை இரசம் குடித்துக்கொண்டிருந்தனர். 19அப்போது திடீரெனப் பெருங்காற்று பாலை நிலத்திலிருந்து வீசி, வீட்டின் நான்கு மூலைகளிலும் தாக்கியது. வீடு இளைஞர்கள் மேல் இடிந்து விழ, அவர்களும் மடிந்துவிட்டனர். நான் ஒருவன்மட்டுமே தப்பி உம்மிடம் சொல்ல வந்தேன்” என்றான். 20யோபு எழுந்தார்; தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்; தம் தலையை மழித்துக்கொண்டார். பின்பு தரையில் விழுந்து வணங்கி,

21“என் தாயின் கருப்பையினின்று

பிறந்த மேனியனாய் யான் வந்தேன்;

அங்கே திரும்புகையில் பிறந்த

மேனியனாய் யான் செல்வேன்;

ஆண்டவர் அளித்தார்;

ஆண்டவர் எடுத்துக்கொண்டார்.

ஆண்டவரது பெயர்

போற்றப்பெறுக!” என்றார்.

22இவை அனைத்திலும் யோபு பாவம் செய்யவுமில்லை; கடவுள் மீது குற்றஞ்சாட்டவும் இல்லை.


1:6 தொநூ 6:2. 1:9-11 திவெ 12:10.


அதிகாரம் 2

சாத்தான் யோபை மீண்டும் சோதித்தல்


1ஒருநாள் தெய்வப் புதல்வர் ஆண்டவர் முன்னிலையில் ஒன்றுகூடினர். சாத்தானும் அவர்கள் நடுவே வந்து, ஆண்டவர்முன் நின்றான். 2ஆண்டவர் சாத்தானிடம் “எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டார். சாத்தான் ஆண்டவரிடம், “உலகைச் சுற்றி உலவி வருகிறேன்” என்றான். 3அப்போது ஆண்டவர் சாத்தானிடம், “என் ஊழியன் யோபைப் பார்த்தாயா? அவனைப்போல் மாசற்றவனும் நேர்மையானவனும், கடவுளுக்கு அஞ்சித் தீயதை விலக்கி நடப்பவனும் மண்ணுலகில் ஒருவனுமில்லை. காரணமின்றி அவனை அழிக்க நீ என்னை அவனுக்கு எதிராகத் தூண்டிவிட்ட போதிலும், அவன் தன் மாசின்மையில் உறுதியாக நிலைத்துள்ளான்” என்றார். 4சாத்தான் மறுமொழியாக ஆண்டவரிடம், “தோலுக்குத் தோல்; எவரும் தம் உயிருக்காகத் தமக்கு உள்ளதெல்லாம் கொடுப்பார். 5உமது கையை நீட்டி அவனுடைய எலும்பு, சதைமீது கைவையும். அப்போது அவன் உம் முகத்திற்கு நேராகவே உம்மை இழித்துரைப்பது உறுதி” என்றான். 6ஆண்டவர் சாத்தானை நோக்கி, “இதோ! அவன் உன் கையிலே! அவன் உயிரை மட்டும் விட்டுவை” என்றார். 7சாத்தானும் ஆண்டவரின் முன்னின்று புறப்பட்டுப் போனான். அவன் யோபை உள்ளங்கால் முதல் உச்சந்தலைவரை எரியும் புண்களால் வாட்டி வதைத்தான். 8ஓடொன்றை எடுத்துத் தம்மைச் சொறிந்து கொண்டு, யோபு சாம்பலில் உட்கார்ந்தார். 9அப்போது அவரின் மனைவி அவரிடம், “இன்னுமா மாசின்மையில் நிலைத்திருக்கிறீர்! கடவுளைப் பழித்து மடிவதுதானே?” என்றாள். 10ஆனால் அவர் அவளிடம், “நீ அறிவற்ற பெண்போல் பேசுகிறாய்! நன்மையைக் கடவுளிடமிருந்து பெற்ற நாம் ஏன் தீமையைப் பெறக்கூடாது?” என்றார். இவை அனைத்திலும் யோபு தம் வாயால் பாவம் செய்யவில்லை.

11அப்போது யோபின் நண்பர் மூவர், அவருக்கு நேர்ந்த இத்தீமை அனைத்தையும் பற்றிக் கேள்விப்பட்டனர். தேமாவைச் சார்ந்த எலிப்பாசு, சூகாவைச் சார்ந்த பில்தாது, நாமாவைச் சார்ந்த சோப்பார் ஆகியோர் தம்மிடமிருந்து கிளம்பி வந்து, அவரிடம் துக்கம் விசாரிக்கவும், அவருக்கு ஆறுதல் கூறவும் ஒன்றுகூடினர். 12தொலையிலிருந்தே கண்களை உயர்த்திப் பார்த்தபோது, அவரை அவர்களால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. அவர்கள் வாய் விட்டு அழுதார்கள்; ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்கள். வானத்தை நோக்கித் தங்கள் தலையில் புழுதியை வாரிப்போட்டுக் கொண்டார்கள். 13அவரோடு அவர்கள் ஏழு பகலும், ஏழு இரவும் தரையில் உட்கார்ந்திருந்தனர். அவருடைய துயரின் மிகுதியைக் கண்டு எவரும் ஒரு வார்த்தைகூட அவருடன் பேசவில்லை.


அதிகாரம் 3

யோபு தாம் பிறந்த நாளைச் சபித்தல்


1இதன்பிறகு யோபு வாய்திறந்து, தாம் பிறந்த நாளைப் பழிக்கத் தொடங்கினார். 2யோபு கூறியது: 3“ஒழிக நான் பிறந்த அந்த நாளே!

ஓர் ஆண்மகவு கருவுற்றதெனச்

சொல்லிய அந்த இரவே!

4அந்த நாள் இருளாகட்டும்;

மேலிருந்து கடவுள் அதை

நோக்காதிருக்கட்டும்; ஒளியும்

அதன்மேல் வீசாதிருக்கட்டும்.

5காரிருளும் சாவிருட்டும்

அதைக் கவ்விக்கொள்ளட்டும்;

கார்முகில் அதனை மூடிக் கொள்ளட்டும்;

பகலை இருளாக்குபவை

அதனை அச்சுறுத்தட்டும்.

6அவ்விரவைக் பேயிருட்டு பிடிப்பதாக!

ஆண்டின் நாள்கணக்கினின்று

அது அகற்றப்படுவதாக!

திங்கள் எண்ணிக்கையிலும்

அது சேரா தொழிக!

7அவ்விரவு வெறுமையுற்றுப் பாழாகட்டும்;

மகிழ்ச்சியொலி ஒன்றும்

அதில் எழாதிருக்கட்டும்;

8பகலைப் பழிப்போரும்

லிவியத்தானைக் தூண்டி எழுப்புவோரும்

அதனைப் பழிக்கட்டும்.

9அதன் விடியற்காலை விண்மீன்கள்

இருண்டு போகட்டும்;

அது விடியலொளிக்குக் காத்திருக்க

அதுவும் இல்லாமற்போகட்டும்;

அது வைகறையின் கண்விழிப்பைக்

காணாதிருக்கட்டும்.

10ஏனெனில் என் தாயின் கருப்பையை

அவ்விரவு அடைக்காமற்போயிற்றே!

என் கண்களினின்று வேதனையை

அது மறைக்காமற் போயிற்றே!

11கருப்பையிலேயே நான் இறந்திருக்கலாகாதா?

கருவறையினின்று வெளிப்பட்டவுடனே

நான் ஒழிந்திருக்கலாகாதா?

12என்னை ஏந்த முழங்கால்கள்

முன் வந்ததேன்?

நான் பாலுண்ண முலைகள் இருந்தேன்?

13இல்லாதிருந்திருந்தால்,

நான் வெறுமனே கிடந்து

துயில் கொண்டிருப்பேன்.

14பாழானவைகளைத்

தமக்குக் கட்டிக்கொண்ட

மாநிலத்து மன்னர்களோடும்

அமைச்சர்களோடும்

15அல்லது பொன்னை

மிகுதியிருக்கக் கொண்டு,

வெள்ளியால் தங்கள் இல்லங்களை நிரப்பின

உயர்குடி மக்களோடும்

நான் உறங்கியிருந்திருப்பேன்.

16அல்லது முழுமை பெறாக்

கருவைப் போலவும்

ஒளியைக் காணாக்

குழவியைப் போலவும் அழிந்திருப்பேன்.

17அங்குத் தீயவர் தீங்கு செய்வதை நிறுத்துவர்.

களைப்புற்றோரும் அங்கு இளைப்பாறுவர்.

18சிறைப்பட்டோர் அங்கு

நிம்மதியாகக் கூடியிருப்பர்;

ஒடுக்குவோரின் அதட்டலைக் கேளாதிருப்பர்.

19சிறியவரும் பெரியவரும் அங்கு இருப்பர்;

அடிமை தம் ஆண்டான் பிடியில் இரான்.

20உறுதுயர் உற்றோர்க்கு ஒளி தருவானேன்?

உள்ளம் கசந்தோர்க்கு

உயிர் கொடுப்பானேன்?

21சாவுக்கு அவர்கள் ஏங்குகிறார்கள்;

அதைப் புதையலினும் மேலாய்க்

கருதித் தேடுகிறார்கள்.

ஆனால் அதுவோ வந்த பாடில்லை.✠

22கல்லறை காணின் களிப்பெய்தி

அகமகிழ்வோர்க்கு,

வாழ்வு வழங்கப்படுவதேன்?

23எவருக்கு வழி மறைக்கப்பட்டுள்ளதோ,

எவரைச் சுற்றிலும் கடவுள்

தடைச்சுவர் எழுப்பியுள்ளாரோ,

அவருக்கு ஒளியால் என்ன பயன்?

24பெருமூச்சு எனக்கு உணவாயிற்று;

வேதனைக்கதறல் வெள்ளமாய் ஓடிற்று.

25ஏனெனில் நான் அஞ்சியது எதுவோ?

அதுவே எனக்கு நேர்ந்தது;

திகிலுற்றது எதுவோ

அதுவே என்மேல் விழுந்தது.

26எனக்கு நிம்மதி இல்லை; ஓய்வு இல்லை;

அமைதி இல்லை; அல்லலே வந்துற்றது.”


3:1-19 எரே 20:14-18. 3:21 திவெ 9:6.


அதிகாரம் 4

கடவுள் மீது நம்பிக்கை


(4:1-14:22)

1அதன்பின் தேமானியன் எலிப்பாக பேசத் தொடங்கினான்: 2“ஒன்று சொன்னால்

உமக்குப் பொறுக்குமோ?

சொல்லாமல் நிறுத்த யாரால்தான் முடியும்?

3பலர்க்கு அறிவுரை பகர்ந்தவர் நீர்!

தளர்ந்த கைகளைத் திடப்படுத்தியவர் நீர்!

4உம் சொற்கள், தடுக்கி விழுவோரைத்

தாங்கியுள்ளன; தள்ளாடும்

கால்களை உறுதியாக்கியுள்ளன.

5ஆனால் இப்பொழுதோ,

ஒன்று உமக்கு வந்துற்றதும்

வருந்துகின்றீர்; அது உம்மைத்

தாக்கியதும் கலங்குகின்றீர்.

6இறையச்சம் அல்லவா உமது உறுதி?

நம்பிக்கையல்லவா உமது நேரிய வழி?

7நினைத்துப்பாரும்! குற்றமற்றவர்

எவராவது அழிந்ததுண்டா?

நேர்மையானவர் எங்கேயாவது ஒழிந்ததுண்டா?

8நான் பார்த்த அளவில், தீவினையை உழுது,

தீங்கினை விதைத்தவர்

அறுப்பது அதையே!

9கடவுளின் மூச்சினால் அவர்கள் அழிவர்;

அவரின் கோபக் கனலால் எரிந்தொழிவர்.

10அரியின் முழக்கமும்

கொடுஞ்சிங்கத்தின் உறுமலும் அடங்கும்;

குருளையின் பற்களும் உடைபடும்.

11இறந்துபோம் சிங்கம் இரையில்லாமல்;

குலைந்துபோம்

பெண்சிங்கத்தின் குட்டிகள்.

12எனக்கொரு வார்த்தை

மறைவாய் வந்தது;

அதன் மெல்லிய ஓசை

என் செவிக்கு எட்டியது.

13ஆழ்ந்த உறக்கம் மனிதர்க்கு வருகையில்,

இரவுக் காட்சியின் சிந்தனைகளில்,✠

14அச்சமும் நடுக்கமும் எனை ஆட்கொள்ள,

என் எலும்புகள் பலவும் நெக்குவிட்டனவே.

15ஆவி ஒன்று என் முன்னே கடந்து சென்றது;

என் உடலின் மயிர் சிலிர்த்து நின்றது.

16ஆவி நின்றது; ஆனால்,

அதன் தோற்றம் எனக்குத் தெளிவில்லை;

உருவொன்று என் கண்முன் நின்றது;

அமைதி நிலவிற்று; குரலொன்றைக் கேட்டேன்.

17கடவுளைவிட மனிதர் நேர்மையாளரா?

படைத்தவரைவிட மானிடர் மாசற்றவரா?

18அவர் தம் தொண்டர்களிலே

நம்பிக்கை வைக்கவில்லையெனில்,

அவருடைய வான தூதரிடமே

அவர் குறைகாண்கின்றாரெனில்,

19புழுதியைக் கால்கோளாகக்கொண்டு,

மண் குடிசையில் வாழ்ந்து,

அந்துப்பூச்சிபோல் விரைவில் அழியும்

மனிதர் எம்மாத்திரம்?

20காலைமுதல் மாலைவரையில்

அவர்கள் ஒழிக்கப்டுவர்; ஈவு இன்றி

என்றென்றும் அழிக்கப்படுவர்.

21அவர்களின் கூடாரக் கயிறுகள் அறுபட,

அவர்கள் ஞானமின்றி மடிவதில்லையா?


4:13 யோபு 33:15.


அதிகாரம் 5

1இப்போது கூப்பிட்டுப்பாரும்!

யார் உமக்குப் பதிலுரைப்பார்?

எந்தத் தூயவரிடம் துணை தேடுவீர்?

2உண்மையில், அறிவிலியைத்தான்

எரிச்சல் கொல்லும்;

பேதையைத் தான் பொறாமை சாகடிக்கும்,

3அறிவிலி வேரூன்றுவதை

நானே கண்டேன்;

ஆனால் உடனே அவன் உறைவிடத்தில்

வெம்பழி விழுந்தது,

4அவனுடைய மக்களுக்குப்

பாதுகாப்பு இல்லை; ஊர்மன்றத்தில்

அவர்கள் நொறுக்கப்படுகின்றனர்;

மீட்பார் எவரும் அவர்க்கு இல்லாது போயினர்.

5அவனது அறுவடையைப் பசித்தவர் உண்பர்;

முள்ளுக்கு நடுவிலுள்ளதையும்

அவர்கள் பறிப்பர்; பேராசைக்காரர்

அவன் சொத்துக்காகத் துடிப்பர்.

6ஏனெனில், புழுதியினின்று இடுக்கண் எழாது;

மண்ணினின்று இன்னல் விளையாது.

7நெருப்புச்சுடர் மேல்நோக்கி எழுவதுபோல,

துன்பத்திற்கென்றே தோன்றினர் மனிதர்.

8ஆனால், நான் கடவுளையே நாடுவேன்;

அவரிடம் மட்டுமே என் வாழ்க்கை ஒப்புவிப்பேன்.

9ஆராய முடியாப் பெரியனவற்றையும்

எண்ணிலடங்கா வியக்கத்

தக்கனவற்றையும் செய்பவர் அவரே.

10மண் முகத்தே மழையைப் பொழிபவரும்

வயல் முகத்தே நீரைத் தருபவரும் அவரே.

11அவர் தாழ்ந்தோரை

மேலிடத்தில் அமர்த்துகின்றார்;

அழுவோரைக் காத்து உயர்த்துகின்றார்.

12வஞ்சகரின் திட்டங்களைத் தகர்க்கின்றார்;

அவர்களின் கைளோ ஒன்றையும் சாதிக்கமாட்டா.

13ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில்

சிக்க வைக்கின்றார்;

வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன;✠

14அவர்கள் பகலில் இருளைக் காண்கின்றனர்;

நண்பகலிலும் இரவில்போல்

தடுமாறுகின்றனர்.

15அவர் வறியவரை அவர்களின்

வாயெனும் வாளினின்று காக்கின்றார்;

எளியவரை வலியவரின்

கையினின்று மீட்கின்றார்.

16எனவே, நலிந்தவர்க்கு நம்பிக்கை உண்டு;

அநீதி தன் வாயைப் பொத்திக்கொள்ளும்.

17இதோ! கடவுள் திருத்தும் மனிதர்

பேறு பெற்றோர்; ஆகவே,

வல்லவரின் கண்டிப்பை வெறுக்காதீர்.✠

18காயப்படுத்தினாலும்

கட்டுப்போடுபவர் அவரே;

அடித்தாலும் ஆற்றுகின்ற கை அவரதே.✠

19ஆறு வகை அல்லல்களினின்றும்

அவர் உம்மை மீட்பார்;

ஏழாவதும் உமக்கு இன்னல் தராது.

20பஞ்சத்தில் சாவினின்றும்

சண்டையில் வாள் முனையினின்றும்

உம்மை விடுவிப்பார்.

21நாவின் சொல்லடியினின்றும்

நீர் மறைக்கப்படுவீர்;

நாசமே வந்து விழுந்தாலும் நடுங்கமாட்டீர்.

22அழிவிலும் பஞ்சத்திலும் நீர் நகுவீர்;

மண்ணக விலங்குகளுக்கு மருளீர்.

23வயல்வெளிக் கற்களோடு

உம் உடன்படிக்கை இருக்கும்;

காட்டு விலங்குகளோடும்

நீர் அமைதியில் வாழ்வீர்.

24உம் கூடாரத்தில் அமைதியைக் காண்பீர்;

உம் மந்தையைச் சென்று காண்கையில்

ஒன்றும் குறைவுபடாதிருக்கும்.

25உமது வித்து பெருகுவதையும்,

உமது வழிமரபினர் நிலத்துப்

புற்களைப் போன்றிருப்பதையும் அறிவீர்.

26பழுத்த வயதில் தளர்வின்றிக்

கல்லறை செல்வீர்,

பருவத்தே மேலோங்கும் கதிர்மணி போல்.

27இதுவே யாம் கண்டறிந்த உண்மை!

செவிகொடுப்பீர்; நீவிரே கண்டுண‌ர்வீர்.


5:13 1 கொரி 3:19. 5:17 நீமொ 3:11; எபி 12:5-6. 5:18 ஓசே 6:1.


அதிகாரம் 6

துன்புறுவோரே தம் துயர் அறிவார்


1யோபு கூறிய பதிலுரையாவது:

2ஓ! என் வேதனைகள்

உண்மையாகவே நிறுக்கப்பட்டு,

என் இன்னல்கள் அனைத்தும்

சீர்தூக்கப்படுமானால் நலமாயிருக்குமே!

3கடற்கரை மணலிலும் இப்போது அவை

கனமானவை; பதற்றமான என்

சொற்களுக்குக் காரணமும் அதுவே;

4எல்லாம் வல்லவரின் அம்புகள்

என்னில் தைத்துள்ளன; அவற்றின் நஞ்சு

என் உயிரைக் குடிக்கின்றது;

கடவுளின் அச்சுறுத்தல்கள்

எனக்கெதிராய் அணிவகுத்துள்ளன.

5காட்டுக் கழுதைக்குப் புல் இருக்க,

அது கனைக்குமா?

காளைக்குத் தீனி இருக்க, அது கத்துமா?

6சுவையற்றது உப்பின்றி உண்ணப்படுமா?

துப்பும் எச்சிலில் சுவை இருக்குமா?

7அவற்றைத் தொட என் நெஞ்சம் மறுக்கிறது;

அவை எனக்கு அருவருப்புத்தரும் உணவாமே!

8ஓ! என் வேண்டுதலுக்கு அருள்பவர் யார்?

நான் ஏங்குவதை

இறைவன் ஈந்திடமாட்டாரா?

9அவர் என்னை நசுக்கிவிடக்கூடாதா?

தம் கையை நீட்டி எனைத் துண்டித்திடலாகாதா?

10அதுவே எனக்கு ஆறுதலாகும்;

அழிக்கும் அல்லலிலும் அகமகிழ்வேன்;

தொடரும் துயரிலும் துள்ளி மகிழ்வேன்;

ஏனெனில் தூயவரின் சொற்களை

மறுத்தேனில்லை.

11நான் இன்னும் பொறுத்திருக்க வலிமை ஏது?

என நெஞ்சம் காத்திருக்க நோக்கமேது?

12என் வலிமை கல்லின் வலிமையோ?

என் சதை வெண்கலத்தாலானதோ?

13இதோ! என்னில் உதவி ஏதுமில்லை;

என்னிலிருந்து உரம் நீக்கப்பட்டது.

14அடுத்திருப்போர்க்கு கனிவு காட்டாதோர்

எல்லாம் வல்லவரையே புறக்கணிப்போர்.

15காய்ந்துவிடும் காட்டாற்றுக்

கண்ணிகள் போலும் சிற்றாறுகள்போலும்

வஞ்சினத்தனர் என் உறவின் முறையார்.

16அவற்றில் பனிக்கட்டி உருகிச் செல்லும்;

அவற்றின் மேற்பகுதியை

உறைபனி மூடி நிற்கும்.

17வெப்பக் காலத்திலோ அவை

உருகி மறைந்துபோம்; வெயில் காலத்திலோ

அவை இடந்தெரியாது ஒழியும்.

18வணிகர் கூட்டம் தம் வழியை மாற்றுகின்றது;

பாலையில் அலைந்து தொலைந்து மடிகின்றது.

19தேடி நிற்கின்றனர் தேமாவின் வணிகர்;

நாடி நிற்கின்றனர் சேபாவின் வழிப்போக்கர்.

20அவர்கள் நம்பியிருந்தனர்;

ஆனால், ஏமாற்றமடைகின்றனர்;

அங்கு வந்தடைந்தனர்;

ஆனால் திகைத்துப் போகின்றனர்.

21இப்போது நீங்களும் எனக்கு

அவ்வாறே ஆனீர்கள்;

என் அவலம் கண்டீர்கள்;

அஞ்சி நடுங்குகின்றீர்கள்.

22எனக்கு அன்பளிப்புத் தாரும் என்றோ,

உம் செல்வத்திலிருந்து

என் பொருட்டுக் கையூட்டுக் கொடும்

என்றோ சொன்னதுண்டா?

23எதிரியின் கையினின்று

என்னைக் காப்பாற்றும் என்றோ,

கொடியவர் பிடியினின்று

என்னை மீட்டருளும் என்றோ

நான் எப்போதுதாவது வேண்டியதுண்டா?

24அறிவு புகட்டுக! அமைதியடைவேன்;

என்ன தவறிழைத்தேன்? எடுத்துக்காட்டுக!

25நேர்மையான சொற்கள்

எத்துணை ஆற்றலுள்ளவை? ஆனால்,

நீர் மெய்ப்பிப்பது எதை மெய்ப்பிக்கிறது?

26என் வார்த்தைகளைக் கண்டிக்க

எண்ணலாமா? புலம்புவோரின்

சொற்கள் காற்றுக்கு நிகராமா?

27திக்கற்றோர் மீது சீட்டுப் போடுவீர்கள்;

நண்பர்மீதும் பேரம் பேசுவீர்கள்.

28பரிவாக இப்பொழுது என்னைப் பாருங்கள்;

உங்கள் முகத்திற்கெதிரே

உண்மையில் பொய் சொல்லேன்,

29போதும் நிறுத்துங்கள்;

அநீதி செய்ய வேண்டாம்!

பொறுங்கள்! நீதி இன்னும் என் பக்கமே;

30என் நாவில் அநீதி உள்ளதா? என்

அண்ணம் சுவையானதைப் பிரித்துணராதா?


அதிகாரம் 7

1மண்ணில் வாழ்வது

மனிதருக்குப் போரட்டந்தானே?

அவர்களின் நாள்கள் கூலியாள்களின்

நாள்களைப் போன்றவைதாமே?

2நிழலுக்கு ஏங்கும் அடிமை போலவும்,

கூலிக்குக் காத்திருக்கும்

வேலையாள் போலவும்,

3வெறுமையான திங்கள்கள்

எனக்கு வாய்த்தன;

இன்னல்மிகு இரவுகள் எனக்குப் பங்காயின.

4படுக்கும்போது எப்போது எழலாம் என்பேன்!

இரவோ நீண்டிருக்கும்;

விடியும்வரை புரண்டு உழல்வேன்,

5புழுவும் புழுதிப்படலமும் போர்த்தின

என் உடலை; வெடித்தது என் தோல்;

வடிந்தது சீழ்.

6என் நாள்கள் தறியின் ஓடுகட்டையினும்

விரைந்தோடுகின்றன; அவை

நம்பிக்கையின்றி முடிவடைகின்றன.

7என் உயிர் வெறுங்காற்றே என்பதை

நினைவுகூர்வீர்; என் கண்கள்

மீண்டும் நன்மையைக் காணா.

8என்னைக் காணும் கண்

இனி என்னைப் பார்க்காது.

என் மேல் உம் கண்கள் இருக்கும்;

நானோ இரேன்.

9கார்முகில் கலைந்து மறைவதுபோல்

பாதாளம் செல்வோர் ஏறி வாரார்.

10இனி அவர்கள் தம் இல்லம் திரும்பார்;

அவர்களது இருப்பிடம்

அவர்களை அறியாது.

11ஆகையால், நான் என் வாயை அடக்கமாட்டேன்;

என் மனத்தின் வேதனையை

எடுத்துரைப்பேன்;

உள்ளக் கசப்பில் முறையிடுவேன்.

12கடலா நான்? அல்லது கடலின் பெருநாகமா?

காவல் என்மீது வைக்கலானீர்!

13“என் படுக்கை ஆறுதல் அளிக்கும்;

என் மெத்தை முறையீட்டைத்

தணிக்கும்” என்பேனாகில்,

14கனவுகளால் என்னைக்

கலங்க வைக்கின்றீர்;

காட்சிகளால் என்னைத்

திகிலடையச் செய்கின்றீர்.

15ஆதலால் நான் குரல்வளை

நெரிக்கப்படுவதையும்

வேதனையைவிடச் சாவதையும்

விரும்புகின்றேன்.

16வெறுத்துப்போயிற்று; என்றென்றும்

நான் வாழப்போவதில்லை;

என்னைவிட்டுவிடும். ஏனெனில்

என் வாழ்நாள்கள் காற்றுப்போன்றனவே.

17மனிதர் எம்மாத்திரம், நீர் அவர்களை

ஒரு பொருட்டாய் எண்ண?

உமது இதயத்தை அவர்கள்மேல் வைக்க?✠

18காலைதோறும் நீர் அவர்களைச் ஆய்ந்தறிய?

மணித்துளிதோறும் அவர்களைச் சோதிக்க?

19எவ்வளவு காலம் என்மேல்

வைத்த கண்ணை எடுக்காதிருப்பீர்?

என் எச்சிலை விழுங்குமளவுக்குக் கூட

என்னை விடமாட்டீரா?

20மானிடரின் காவலரே!

நான் பாவம் இழைத்துவிட்டேனா?

உமக்கு நான் செய்ததென்னவோ?

என்னை உம் இலக்காக ஆக்கியதேன்?

உமக்கு நான் சுமையாய்ப் போனதேன்?

21என் மீறலை மன்னியாதது ஏன்?

என் அக்கிரமங்களை அகற்றாதது ஏன்?

இப்பொழுதோ நான் மண்ணுக்குள்

உறங்கப் போகின்றேன்;

நீர் என்னைத் தேடுவீர்; நான் இல்லாதுபோவேன்.


7:17 திபா 8:4; 144:3.


அதிகாரம் 8

கடவுளின் மாறாத நீதி


1அதற்குச் சூகாயனான பில்தாது

கூறிய பதில்:

2எதுவரை இவ்வாறே பேசிக் கொண்டிருப்பீர்?

உம் வாய்ச்சொற்கள்

புயல்காற்றைப் போல் இருக்கின்றன.

3இறைவனே நீதியைப் புரட்டுவாரா?

எல்லாம் வல்லவரே நேர்மை பிறழ்வாரா?

4உம் புதல்வர்கள் அவருக்கெதிராயப் பாவம் செய்ததால், குற்றப்பழியின் ஆற்றலிடம் அவர்களைக் கையளித்தார்.

5ஆனால், நீர் இறைவனை

ஆர்வத்துடன் நாடினால்,

எல்லாம் வல்லவரிடம் இறைஞ்சினால்,

6நீர் மாசற்றவரும் நேர்மையானவருமாய்

இருந்தால் இப்பொழுது கூட

அவர் உம்பொருட்டு எழுந்திடுவார்,

உமக்குரிய உறையுளை மீண்டும் ஈந்திடுவார்.

7உம்முடைய தொடக்கம்

எளிமையாக இருப்பினும்,

உம் வருங்காலம் வளமைமிகக் கொழிக்கும்.

8முன்னோரின் தலைமுறையைக்

கேட்டுப்பாரும்;

அன்னாரின் தந்தையர் ஆய்ந்ததை அறியும்.

9நேற்றுத் தோன்றிய நாம் ஒன்றும் அறியோம்;

நிலமிசை நம் வாழ்நாள் நிழலைப் போன்றது,

10அவர்களன்றோ உமக்கு

அறிவித்து உணர்த்துவர்!

புரிந்த வார்த்தைகளை

உமக்குப் புகட்டுவர்!

11சேறின்றி நாணல் தழைக்குமா?

நீரின்றிக் கோரை வளருமா?

12இன்னும் பசுமையாக வெட்டாது இருக்கையிலே

எல்லாப் புற்களுக்கு முன்னே அவை வாடிடும்.

13இறைவனை மறப்போரின் கதி இதுவே;

இறைப்பற்றில்லாரின் நம்பிக்கை இடிந்துபோம்;

14அவர்களின் நம்பிக்கை முறிந்துபோம்;

அவர்கள் சார்ந்திருப்பது சிலந்திக் கூட்டையே.

15யாராவது அவ்வீட்டின்மீது சாய்ந்தால்,

அது நில்லாதுபோம்; யாராவது அதைப்

பற்றி பிடித்தால், அது நிலைத்திராது.

16பகலவன்முன் பசுஞ்செடி போன்றோர் அவர்கள்;

படரும் தோட்டமெங்கும்

அவர்களின் கிளைகள்.

17கற்குவியலில் பின்னிடும் அவர்களின் வேர்கள்

கற்களிடையே இடம் தேடும்.

18அவர்கள் தம் இடத்திலிருந்து எடுபட்டால்,

‘உங்களை நான் கண்டதேயில்லை’ என

உதறிவிடும் அவ்விடம்.

19பார்! அவர்கள் தம் வாழ்வில்

கண்ட இன்பம் இதுவே:

மண்ணினின்று மற்றவர் முளைத்தெழுவர்.

20இதோ! கறையிலாதவரை

இறைவன் கைவிடுவதில்லை;

காதகர்க்கு அவர் கைகொடுப்பதுமில்லை.

21இருப்பினும், உம் வாயைச் சிரிப்பாலும்,

இதழ்களை மகிழ்வொலியாலும் நிரப்புவார்.

22உம்மைப் பகைப்பவ‌ர்

வெட்கத்தால் உடுத்தப்படுவர்;

தீயோர் கூடாரம் இல்லாது போகும்.


அதிகாரம் 9

கடவுளது நீதியின் மேன்மை


1யோபு அதற்கு உரைத்த பதில்:

2உண்மையில் இது இவ்வாறு

என்று அறிவேன்; ஆனால், மனிதர்

இறைவன்முன் நேர்மையாய் இருப்பதெப்படி?✠

3ஒருவர் அவருடன் வழக்காட விரும்பினால்,

ஆயிரத்தில் ஒன்றுக்கேனும்

அம்மனிதரால் பதிலளிக்க முடியுமா?

4இறைவன் உள்ளத்தில் ஞானமுள்ளவர்;

ஆற்றலில் வல்லவர்;

அவர்க்கு எதிராய்த் தம்மைக் கடினப்படுத்தி,

வளமுடன் வாழ்ந்தவர் யார்?

5அவர் மலைகளை அகற்றுவார்;

அவை அதை அறியா; அவர் சீற்றத்தில்

அவைகளைத் தலைகீழாக்குவார்.

6அசைப்பார் அவர் நிலத்தை

அதனிடத்தினின்று;

அதிரும் அதனுடைய தூண்கள்.

7அவர் கட்டளையிடுவார்;

கதிரவன் தோன்றான்;

அவர் மறைத்திடுவார் விண்மீன்களை.

8தாமே தனியாய் வானை விரித்தவர்,

ஆழியின் முதுகை மிதித்து நடந்தவர்.

9வடமீன் குழுவையும், மிருகசீரிடத்தையும்,

கார்த்திகை விண்மீன்களையும்,

தென்திசை விண்மீன் குழுக்களையும்

அமைத்தவர் அவரே.✠

10உணர்ந்திட இயலாப் பெருஞ்செயல்களையும்,

கணக்கிட முடியா அருஞ்செயல்களையும்

ஆற்றுநர் அவரே.

11இதோ! என் அருகே அவர் கடந்து செல்கையில்

நான் பார்க்க முடியவில்லை; நழுவிச்

செல்கையில் நான் உணர முடியவில்லை.

12இதோ! அவர் பறிப்பாரானால்,

அவரை மறிப்பார் யார்? யாது செய்கின்றீர்

என அவரைத் கேட்பார் யார்?

13கடவுள் தம் சீற்றத்தைத் தணிக்கமாட்டார்;

அவரடி பணிந்தனர்

இராகாபின் துணைவர்கள்.✠

14இப்படியிருக்க, எப்படி அவருக்குப்

பதிலுரைப்பேன்? எதிர்நின்று

அவரோடு எச்சொல் தொடுப்பேன்?

15நான் நேர்மையாக இருந்தாலும்

அவருக்குப் பதிலுரைக்க இயலேன்;

என் நீதிபதியிடம் நான்

இரக்கத்தையே கெஞ்சுவேன்.

16நான் கூப்பிட அவர் பதிலுரைப்பினும்,

என் வேண்டுதலுக்கு அவர்

செவிகொடுப்பார் என்று நம்புவதற்கில்லை.

17புயலினால் என்னை நொறுக்குவார்;

காரணமின்றி என் காயங்களைப்

பெருக்குவார்.

18அவர் என்னை மூச்சிழுக்கவும் விடாது,

கசப்பினால் என்னை நிரப்புகின்றார்.

19வலிமையில் அவருக்கு நிகர் அவரே!

அவர்மேல் வழக்குத் தொடுப்பவர் யார்?

20நான் நேர்மையாக இருந்தாலும்,

என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்;

நான் குற்றமற்றவனாக இருந்தாலும்,

மாறுபட்டவனாக அது என்னைத் தீர்ப்பிடும்.

21குற்றமற்றவன் நான்;

என்னைப்பற்றிக் கவலையில்லை;

என் வாழ்க்கையையே வெறுக்கின்றேன்.

22எல்லாம் ஒன்றுதான்; எனவேதான்

சொல்கின்றேன்; “அவர் நல்லாரையும்

பொல்லாரையும் ஒருங்கே அழிக்கின்றார்’.

23பேரிடர் சாவைத் திடீரெனத் தரும்போது,

அவர் மாசற்றவரின்

நெருக்கடி கண்டு நகைப்பார்.

24வையகம் கொடியோர் கையில்

கொடுக்கப்படுகின்றது; அதன் நீதிபதிகளின்

கண்களை அவர் கட்டுகின்றார்.

அவரேயன்றி வேறு யார் இதைச் செய்வார்?

25ஓடுபவரைவிட விரைந்து செல்கின்றன

என் வாழ்நாள்கள்;

அவை பறந்து செல்கின்றன;

நன்மையொன்றும் அவை காண்பதில்லை.

26நாணற் படகுபோல் அவை விரைந்தோடும்;

இரைமேல் பாயும் ஒரு கழுகைப்போல் ஆகும்.

27‘நான் துயர் மறப்பேன்;

முகமலர்ச்சி கொள்வேன்;

புன்முறுவல் பூப்பேன், எனப் புகல்வேனாயினும்,

28என் இடுக்கண் கண்டு நடுக்கமுறுகின்றேன்,

ஏனெனில், அவர் என்னைக்

குற்றமற்றவனாய்க் கொள்ளார் என அறிவேன்.

29நான்தான் குற்றவாளி எனில்,

வீணே ஏன் நான் போராடவேண்டும்?

30பனிநீரில் நான் என்னைக் கழுவினும்,

சவர்க்காரத்தினால்

என் கைகளைத் தூய்மையாக்கினும்,

31குழியில் என்னை அவர் அமிழ்த்திடுவார்;

என் உடையே என்னை வெறுத்திடுமே!

32ஏனெனில், அவரோடு நான் வழக்காடவும்,

வழக்கு மன்றத்தில் எதிர்க்கவும்

என்னைப்போல் அவர் மனிதர் இல்லை.

33இருவர்மீதும் தம் கையை வைக்க,

ஒரு நடுவர்கூட எம் நடுவே இல்லையே.

34அகற்றப்படுக அவர் கோல் என்னிடமிருந்து!

அப்போது மிரட்டாது என்னை

அவரைப்பற்றிய அச்சம்!

35அவரிடம் அச்சமின்றிப் பேசுவேன் அப்போது;

அப்படிப் பேசும் நிலையில்

நான் இல்லையே இப்போது.


9:2 யோபு 4:17. 9:9 யோபு 38:31; ஆமோ 5:8. 9:13 இராகாபு = தீங்கை விளைவிக்கும் ஒரு நீர்வாழ் விலங்கு.


அதிகாரம் 10

1என் உள்ளம் என் வாழ்வை

அருவருக்கின்றது; என் ஆற்றாமையைத்

தாராளமாய்க் கொட்டித் தீர்ப்பேன்;

உள்ளத்தில் கசப்பினை

நான் உரைத்திடுவேன்.

2நான் கடவுளிடம் சொல்வேன்;

என்னைக் கண்டனம் செய்யாதீர்;

என் மீது நீர் சாட்டும் குற்றத்தின் காரணம்

என்னவெனச் சாற்றுவீர்.

3என்னை ஒடுக்குவதும்

உமது கையின் படைப்பை இகழ்வதும்

உலுத்தர் சூழ்ச்சியில் உளம் மகிழ்வதும்

உமக்கு அழகாமோ?

4ஊனக் கண்களா உமக்கு உள்ளன?

உண்மையில்,

மானிடப்பார்வையா உமது பார்வை?

5மானிட நாள்கள் போன்றவோ உம் நாள்கள்?

மனிதரின் வாழ்நாள் அனையவோ

உம் ஆண்டுகள்?

6பின், ஏன் என் குற்றங்களைத்

துருவிப் பார்க்கிறீர்? ஏன்

என் பாவங்களைக் கிளறுகின்றீர்?

7நான் குற்றமற்றவன் என நீர் அறிந்தாலும்,

உம் கையினின்று என்னைத்

தப்புவிப்பவர் ஒருவருமில்லை.

8என்னை வனைந்து வடிவமைத்து

உண்டாக்கின உம் கைகள்; இருப்பினும்,

நீரே என்னை அழிக்கின்றீர்.

9தயைகூர்ந்து நினைத்துப் பாரும்!

களிமண்போல் என்னை வனைந்தீர்;

அந்த மண்ணுக்கே என்னைத்

திரும்பச் செய்வீரோ?

10பால்போல் என்னை நீர் வார்க்கவில்லையா?

தயிர்போல் என்னை நீர்

உறைவிக்கவில்லையா?✠

11எலும்பும் தசைநாரும் கொண்டு

என்னைப் பின்னினீர்;

தோலும் சதையும் கொண்டு

என்னை உடுத்தினீர்.

12வாழ்வையும் இரக்கத்தையும்

எனக்கு வழங்கினீர்; என் உயிர் மூச்சை

உம் கரிசனை காத்தது.

13எனினும், இவற்றை உம் உள்ளத்தில்

ஒளித்திருந்தீர்; இதுவே உம் மனத்துள்

இருந்ததென நான் அறிவேன்.

14நான் பாவம் செய்தால்,

என்னைக் கவனிக்கிறீர்;

என் குற்றத்தை எனக்குச்

சுட்டிக்காட்டாது விடமாட்டீர்;

நான் குற்றம் புரிந்தால்

அதை என்மீது சுமத்தாது விடீர்.

15நான் தீங்கு செய்தால், ஐயோ ஒழிந்தேன்!

நான் நேர்மையாக இருந்தாலும்

தலைதூக்க முடியவில்லை; ஏனெனில்,

வெட்கம் நிறைந்தாலும்

வேதனையில் உள்ளேன்.

16தலைநிமிர்ந்தால் அரிமாபோல்

என்னை வேட்டையாடுவீர்;

உம் வியத்தகு செயல்களை

எனக்கெதிராய்க் காட்டுவீர்;

17எனக்கெதிராய்ச் சான்றுகளைப்

புதுப்பிக்கிறீர்; என்மீது

உமது சீற்றத்தைப் பெருக்குகிறீர்;

எனக்கெதிராய்ப் போராட்டத்தைப்

புதிதாக எழுப்புகிறீர்.

18கருப்பையிலிருந்து என்னை

ஏன் வெளிக் கொணர்ந்தீர்?

கண் ஏதும் என்னைக் காணுமுன்பே

நான் இறந்திருக்கலாகாதா?

19உருவாகாதவன் போலவே

இருந்திருக்கக்கூடாதா?

கருவறையிலிருந்தே

கல்லறைக்குப் போயிருப்பேனே;

20என்னுடைய நாள்கள் சிலமட்டுமே;

என்னிடமிருந்து எட்டி நிற்பீரானால்,

மணித்துளி நேரமாவது மகிழ்ந்திருப்பேன்;

21பின்னர், இருளும் இறப்பின் நிழலும் சூழ்ந்த

திரும்ப இயலாத நாட்டிற்குப் போவேன்.

22அது காரிருளும் சாவின் நிழலும் சூழ்ந்த

இருண்ட நாடு; அங்கு ஒழுங்கில்லை;

ஒளியும் இருள்போல் இருக்கும்.


10:10 மனிதன் கருவாகி, தாய் வயிற்றில் வளரும் நிகழ்ச்சியை இவ்வசனம் வருணிக்கிறது.


அதிகாரம் 11

கடவுளின் ஞானத்தை ஏற்றுக்கொள்ள யோபு தூண்டப்படல்


1அதற்கு நாமாவியனான

சோப்பார் சொன்ன மறுமொழி:

2திரளான சொற்கள் பதிலின்றிப் போகலாமா?

மிகுதியாகப் பேசுவதால்,

ஒருவர் நேர்மையாளர் ஆகிவிடுவாரோ?

3உம் வீண் வார்த்தைகள் மனிதரை

வாயடைத்திடுமோ? நீர் நகையாடும் போது

உம்மை யாரும் நையாண்டி செய்யாரோ?

4“என் அறிவுரை தூயது; நானும்

என் கண்களுக்கு மாசற்றவன்” என்கின்றீர்.

5ஆனால், “கடவுளே பேசட்டும்; தம் இதழ்களை

உமக்கெதிராயத் திறக்கட்டும்” என

யாரேனும் அவரை வேண்டாரோ!

6அவரே ஞானத்தின் மறைபொருளை

உமக்கு அறிவிக்கட்டும்;

அவர் இரட்டிப்பான அறிவும் திறனுமுடையவர்;

கடவுள் உம் தீமைகளில் சிலவற்றை

மறந்தார் என்பதை அறிக!

7கடவுளின் ஆழ்ந்த உண்மைகளை

நீர் அறிய முடியுமா? எல்லாம் வல்லவரின்

எல்லையைக் கண்டுணர முடியுமா?

8அவை வானங்களை விட உயர்ந்தவை;

நீர் என்ன செய்வீர்?

அவை பாதாளத்தைவிட ஆழமானவை;

நீர் என்ன அறிவீர்?

9அதன் அளவு பாருலகைவிடப் பரந்தது;

ஆழ்கடலைவிட அகலமானது.

10அவர் இழுத்து வந்து அடைத்துப் போட்டாலும்,

அவைமுன் நிறுத்தினாலும்

அவரைத் தடுப்பார் யார்?

11ஏனெனில், அவர் மனிதரின்

ஒன்றுமில்லாமையை அறிவார்;

தீமையைக் காண்கின்றார்; ஆனால்,

அதை ஒருபொருட்டாகக் கருதுவதில்லை.

12காட்டுக்கழுதைக்குட்டி

மனிதனாகப் பிறந்தால்,

அறிவிலியும் அறிவு பெறுவான்.

13உம்முடைய உள்ளத்தை

நீர் ஒழுங்குபடுத்தினால்,

உம்முடைய கைகளை

அவரை நோக்கி நீட்டுவீராக!

14உம் கையில் கறையிருக்குமாயின்

அப்புறப்படுத்தும்; உம் கூடாரத்தில்

தீமை குடிகொள்ளாதிருக்கட்டும்.

15அப்போது உண்மையாகவே நாணமின்றி

உம் முகத்தை ஏறெடுப்பீர்;

நிலைநிறுத்தப்படுவீர்; அஞ்சமாட்டீர்.

16உம் துயரை நீர் மறந்துபோவீர்;

கடந்துபோன வெள்ளம்போல்

அதை நினைகூர்வீர்.

17உம் வாழ்வுக்காலம் நண்பகலைவிட ஒளிரும்;

காரிருளால் மூடப்பட்டிருந்தாலும்

காலைபோல் ஆவீர்;

18நம்பிக்கை இருப்பதனால் உறுதிகொள்வீர்;

சுற்றிலும் நோக்கிப் பாதுகாப்பில் ஓய்வீர்;

19ஓய்ந்து படுப்பீர்; ஒருவரும் உம்மை அச்சுறுத்தார்;

உம் முகம்தேடிப் பலர் உம் தயவை நாடுவர்;

20தீயோரின் கண்கள் மங்கிப்போம்;

அனைத்துப் புகலிடமும் அவர்க்கு அழிந்துபோம்;

உயிர்பிரிதலே அவர்தம் நம்பிக்கை!


அதிகாரம் 12

வலிமைமிகு செயல்களில் தெரியும் கடவுளின் ஞானம்


1அதற்கு யோபு உரைத்த மறுமொழி:

2உண்மையிலும் உண்மை;

நீங்கள்தாம் எல்லாம் தெரிந்தவர்கள்.

உங்களோடு ஞானமும் ஒழிந்துவிடும்!

3உங்களைப்போல அறிவு எனக்கும் உண்டு;

உங்களுக்கு நான் தாழ்ந்தவன் அல்லன்;

இத்தகையவற்றை யார்தான் அறியார்?

4கடவுளை மன்றாடி மறுமொழி பெற்ற நான்,

என் நண்பர்க்கு நகைப்புப் பொருள் ஆனேன்.

குற்றமற்ற நேர்மையாளனாகிய நான்

நகைப்புப் பொருள் ஆனேன்.

5இன்பத்தில் திளைத்திருக்கும் நீங்கள்

என்னை ஏளனம் செய்கின்றீர்கள்;

அடிசறுக்கிய என்னைத் தாக்குகின்றீர்கள்.

6கொள்ளையரின் கூடாரங்கள்

கொழிக்கின்றன!

இறைவனைச் சினந்தெழச் செய்வோரும்

கடவுளுக்குச் சவால் விடுப்போரும்

பாதுகாப்பாய் உள்ளனர்!

7இருப்பினும், விலங்கிடம் வினவுக;

உமக்கு அது கற்றுக்கொடுக்கும்;

வானத்துப் பறவை உமக்கு அறிவுறுத்தும்.

8அல்லது மண்ணில் ஊர்வனவற்றிடம் பேசுக;

அவை உமக்குக் கற்பிக்கும்.

ஆழியின் மீன்கள் உமக்கு அறிவிக்கும்.

9இவற்றில் ஆண்டவரை அறியாதது எது?

அவரது கைதான் இதைச் செய்தது என

எது அறியாது?

10அவர் கையில்தான்

அனைத்துப் படைப்புகளின் உயிரும்

மனித இனத்தின் மூச்சும் உள்ளன.

11செவி, சொற்களைப்

பிரித்து உணர்வதில்லையா?

நாக்கு, உணவைச்

சுவைத்து அறிவதில்லையா?

12முதியோரிடம் ஞானமுண்டு;

ஆயுள் நீண்டோரிடம் அறிவுண்டு.

13ஞானமும் வலிமையும் அவரிடமே உள்ளன!

ஆலோசனையும் அறிவும் அவர்க்கே உரியன!

14இதோ! அவர் இடித்திடுவதை

எழுப்பிட இயலாது;

அவர் அடைத்திடுபவரை விடுவித்திட முடியாது.

15இதோ; அவர் மழையைத் தடுப்பாரெனில்,

அனைத்தும் வறண்டுபோம்;

வெளியே அதை வரவிடுவாரெனில்,

நிலத்தையே மூழ்கடிக்கும்.

16வல்லமையும் மதிநுட்பமும்

அவருக்கே உரியன;

ஏமாற்றுவோரும் ஏமாறுவோரும்

அவருடையோரே!

17அமைச்சர்களை அறிவிழக்கச் செய்கின்றார்;

நடுவர்களை மடையர்கள் ஆக்குகின்றார்.

18அரசர்களின் அரைக்கச்சையை

அவிழ்க்கின்றார்;

அவர்களின் இடையில்

கந்தையைக் கட்டுகின்றார்;

19குருக்களைத் தம் நிலையிலிருந்து

விழச் செய்கின்றார்;

நிலைபெற்ற வலியோரைக்

கவிழ்த்து வீழ்த்துகின்றார்;

20வாய்மையாளரின் வாயை அடைக்கின்றார்;

முதியோரின் பகுத்துணர்

மதியைப் பறிக்கின்றார்;

21உயர்குடி மக்கள் மீது

வெறுப்பினைப் பொழிகின்றார்;

வலியோரின் கச்சை

கழன்றுபோகச் செய்கின்றார்;

22புரியாப் புதிர்களை

இருளினின்று இலங்கச் செய்கின்றார்

. காரிருளை ஒளிக்குக் கடத்திவருகின்றார்.

23மக்களினங்களைப் பெருகச் செய்கின்றார்;

பின்பு அழிக்கின்றார்;

மக்களினங்களைப் பரவச் செய்கின்றார்;

பின், குறையச் செய்கின்றார்.

24மண்ணக மக்களின் தலைவர்

தம் அறிவாற்றலை அழிக்கின்றார்.

வழியிலாப் பாழ்வெளியில்

அவர்களை அலையச் செய்கின்றார்.

25இருளில் ஒளியிலாது தடவுகின்றார்கள்; குடித்தவர்போல் அவர்களைத் தடுமாற வைக்கின்றார்.

அதிகாரம் 13

1இதோ! இவை என் கண்களே கண்டவை;

என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.

2நீங்கள் அறிந்திருப்பதை

நானும் அறிந்திருக்கின்றேன்;

நான் உங்களுக்கு

எதிலும் இளைத்தவன் இல்லை.

3ஆனால் நான் எல்லாம் வல்லவரோடு

சொல்லாடுவேன்;

கடவுளோடு வழக்காட விழைகின்றேன்,

4நீங்களோ பொய்யினால் மழுப்புகின்றவர்கள்;

நீங்கள் எல்லாருமே பயனற்ற மருத்துவர்கள்.

5ஐயோ! பேசாது

அனைவரும் அமைதியாக இருங்கள்;

அதுவே உங்களுக்கு ஞானமாகும்.

6இப்பொழுது என் வழக்கினைக் கேளுங்கள்;

என் இதழின் முறையீட்டைக் கவனியுங்கள்.

7இறைவன் பொருட்டு

முறைகேடாய்ப் பேசுவீர்களா?

அவர்பொருட்டு வஞ்சகமாய்ப் பேசுவீர்களா?

8கடவுள் பொருட்டு

ஒரு சார்பாகப் பேசுவீர்களா? அல்லது

அவர்க்காக வாதாடுவீர்களா?

9அவர் உங்களை ஆராய்ந்தால்

உங்களில் நல்லதைக் காண்பாரா?

அல்லது மனிதரை வஞ்சிப்பதுபோல,

அவரையும் வஞ்சிப்பீர்களா?

10நீங்கள் மறைவாக ஓரவஞ்சனை காட்டினால்

உங்களை உறுதியாக அவர் கண்டிப்பார்.

11அவருடைய மாட்சி உங்களை மருளவைக்காதா?

அவருடைய அச்சுறுத்தல்

உங்கள் மீது விழாதா?

12உங்களுடைய மூதுரைகள்

சாம்பலையொத்த முதுமொழிகள்;

உங்கள் எதிர்வாதங்கள் உண்மையில்

களிமண்ணையொத்த வாதங்கள்.

13பேசாதிருங்கள்; என்னைப் பேசவிடுங்கள்;

எனக்கு எது வந்தாலும் வரட்டும்.

14என் சதையை என் பற்களிடையே

ஏன் வைத்துக்கொள்ளவேண்டும்?

என் உயிரை என் கைகளால்

ஏன் பிடித்துக்கொள்ளவேண்டும்? 15அவர் என்னைக்

கொன்றாலும் கொல்லட்டும்;

இருப்பினும், என் வழிகள் குற்றமற்றவை என

எடுத்துரைப்பதில் நான் தளரேன்.

16இதுவே எனக்கு மீட்பு ஆகலாம்;

ஏனெனில், இறைப்பற்றில்லாதார்

அவர்முன் வர முடியாது.

17என் வார்த்தையைக் கவனித்துக்கேளுங்கள்;

என் கூற்று உங்கள் செவிகளில் ஏறட்டும்.

18இதோ! இப்பொழுது என் வழக்கை

வகைப்படுத்தி வைத்தேன்;

குற்றமற்றவன் என

மெய்ப்பிக்கப்படுவேன் என்று அறிவேன்.

19இறைவா! நீர்தாமோ

எனக்கெதிராய் வழக்காடுவது?

அவ்வாறாயின், இப்போதே

வாய்பொத்தி உயிர் நீப்பேன்.

20எனக்கு இரண்டு

செயல்களை மட்டும் செய்யும்;

அப்போது உமது முகத்திலிருந்து

ஒளியமாட்டேன்.

21உமது கையை

என்னிடமிருந்து எடுத்துவிடும்;

உம்மைப்பற்றிய திகில்

என்னைக் கலங்கடிக்காதிருக்கட்டும்.

22பின்னர் என்னைக் கூப்பிடும்;

நான் விடையளிப்பேன்;

அல்லது என்னைப் பேசவிடும்;

பின் நீர் மறுமொழி அருளும்.

23என்னுடைய குற்றங்கள், தீமைகள் எத்தனை?

என் மீறுதலையும் தீமையையும்

எனக்குணர்த்தும்.

24உம் முகத்தை ஏன் மறைக்கின்றீர்?

பகைவனாய் என்னை ஏன் கருதுகின்றீர்?

25காற்றடித்த சருகைப்

பறக்கடிப்பீரோ?

காய்ந்த கூளத்தைக் கடிது விரட்டுவீரோ?

26கசப்பானவற்றை

எனக்கெதிராய் எழுதுகின்றீர்;

என் இளமையின் குற்றங்களை

எனக்கு உடைமையாக்குகின்றீர்.

27என் கால்களைத் தொழுவில் மாட்டினீர்;

கண் வைத்தீர் என் பாதை எல்லாம்;

காலடிக்கு எல்லை குறித்துக்

குழிதோண்டினீர்.✠

28மனிதர் உளுத்தமரம்போல்

விழுந்து விடுகின்றனர்; அந்துப்பூச்சி

அரிக்கும் ஆடைபோல் ஆகின்றனர்.


13:27 யோபு 33:11.


அதிகாரம் 14

1பெண்ணிடம் பிறந்த மனிதருக்கு

வாழ்நாளோ குறைவு;

வருத்தமோ மிகுதி.

2மலர்போல் பூத்து

அவர்கள் உலர்ந்து போகின்றனர்

; நிழல்போல் ஓடி

அவர்கள் நிலையற்றுப் போகின்றனர்.

3இத்தகையோர்மீதா உம் கண்களை வைப்பீர்?

தீர்ப்பிட அவர்களை உம்மிடம் கொணர்வீர்?

4அழுக்குற்றதினின்று

அழுக்கற்றதைக் கொணர முடியுமா?

யாராலும் முடியவே முடியாது.

5அவர்களுடைய நாள்கள்

உண்மையாகவே கணிக்கப்பட்டுள்ளன.

அவர்களுடைய திங்கள்களின் எண்ணிக்கை

உம்மிடம் உள்ளது;

அவர்கள் கடக்க இயலாத

எல்லையைக் குறித்தீர்.

6எனவே அவர்களிடமிருந்து

உம் பார்வையைத் திருப்பும்;

அப்பொழுது, கூலியாள்கள்

தம் நாள் முடிவில் இருப்பது போல்,

அவர்கள் ஓய்ந்து மகிழ்வர்.

7மரத்திற்காவது நம்பிக்கையுண்டு;

அது தறிக்கப்பட்டால் மீண்டும் துளிர்க்கும்;

அதன் குருத்துகள் விடாது துளிர்க்கும்.

8அதன் வேர் மண்ணில் பழமை அடைந்தாலும்,

அதன் அடிமரம் நிலத்தில் பட்டுப்போனாலும்,

9தண்ணீர் மணம் பட்டதும் அது துளிர்க்கும்;

இளஞ்செடிபோல் கிளைகள் விடும்.

10ஆனால், மனிதர் மடிகின்றனர்;

மண்ணில் மறைகின்றனர்;

உயிர் போனபின் எங்கே அவர்கள்?

11ஏரியில் தண்ணீர் இல்லாது போம்;

ஆறும் வறண்டு காய்ந்துபோம்.

12மனிதர் படுப்பர்; எழுந்திருக்கமாட்டார்;

வானங்கள் அழியும்வரை

அவர்கள் எழுவதில்லை;

அவர்கள் துயிலிலிருந்து எழுப்பப்படுவதில்லை.

13ஓ! என்னைப் பாதாளத்தில்

ஒளித்து வைக்கமாட்டீரா?

உமது சீற்றம் தணியும்வரை

மறைத்து வைக்கமாட்டீரா?

என்னை நினைக்க ஒருநேரம்

குறிக்கமாட்டீரா?

14மனிதர் மாண்டால், மறுபடியும் வாழ்வரா?

எனக்கு விடிவு வரும்வரை,

என் போராட்ட நாள்களெல்லாம்

பொறுத்திருப்பேன்.

15நீர் அழைப்பீர்; உமக்கு நான் பதிலளிப்பேன்;

உம் கைவினையாம் என்னைக்

காண விழைவீர்.

16அப்பொழுது, என் காலடிகளைக்

கணக்கிடுவீர்;

என் தீமைகளைத் துருவிப் பார்க்கமாட்டீர்.

17என் மீறுதலைப் பையிலிட்டு முத்திரையிட்டீர்;

என் குற்றத்தை மூடி மறைத்தீர்.

18ஆனால் மலை விழுந்து நொறுங்கும்;ம்

பாறையும் தன் இடம்விட்டுப் பெயரும்.

19கற்களைத் தண்ணீர் தேய்த்துக் கரைக்கும்;

நிலத்தின் மண்ணை வெள்ளம்

அடித்துப்போகும்; இவ்வாறே

ஒரு மனிதனின் நம்பிக்கையை அழிப்பீர்.

20ஒடுக்குவீர் அவனை எப்பொழுதும்;

ஒழிந்துபோவான் அவனும்;

அவனது முகத்தை உருக்குலைத்து,

விரட்டியடிப்பீர்.

21புதல்வர்கள் புகழ்பெறினும்

அவன் அறிந்தான் இல்லை; கதியிழந்தாலும்

அதை அவன் கண்டான் இல்லை.

22அவன் உணர்வது தன் ஊனின் வலியையே;

அவன் புலம்புவது தன் பொருட்டே.


அதிகாரம் 15

யோபின் சொற்களே அவர்க்குத் தீர்ப்பிடல்


(15:1-21:34)

1அதற்குத் தேமானியனான எலிப்பாசு

சொன்னான்:

2வெற்று அறிவினால் ஞானி

விடையளிக்கக்கூடுமோ?

வறண்ட கீழ்க்காற்றினால்

வயிற்றை அவன் நிரப்பவோ?

3பயனிலாச் சொற்களாலோ,

பொருளிலாப் பொழிவினாலோ

அவன் வழக்காடத் தகுமோ?

4ஆனால், நீர் இறையச்சத்தை இழந்துவிட்டீர்;

இறைச்சிந்தனை இல்லாது போனீர்.

5உம் குற்றம் உம் வாயை உந்துகின்றது;

வஞ்சக நாவை நீர் தேர்ந்துகொண்டீர்.

6கண்டனம் செய்தது உம் வாயே;

நானல்ல; உம் உதடே

உமக்கு எதிராய்ச் சான்றுரைக்கின்றது.

7மாந்தரில் முதல்பிறவி நீர்தாமோ?

மலைகளுக்கு முன்பே உதித்தவர் நீர்தாமோ?

8கடவுளின் மன்றத்தில் கவனித்துக் கேட்டீரோ?

ஞானம் உமக்கு மட்டுமே உரியதோ?

9எங்களுக்குத் தெரியாத எது உமக்குத் தெரியும்?

எங்களுக்குப் புரியாத எது உமக்குப் புரியும்?

10நரைமுடியும் நிறைவயதும்கொண்டு,

நாள்களில் உம் தந்தைக்கு மூத்தோர்

எங்களிடை உள்ளனர்.

11கடவுளின் ஆறுதலும், கனிவான சொல்லும்

உமக்கு அற்பமாயினவோ?

12மனம்போன போக்கில் நீர் செல்வது ஏன்?

உம் கண்கள் திருதிருவென விழிப்பது ஏன்?

13அதனால், இறைவனுக்கு எதிராய்

உம் கோபத்தைத் திருப்புகின்றீர்;

வாயில் வந்தபடி

வார்த்தைகளைக் கொட்டுகின்றீர்.

14மாசற்றவராய் இருக்க மானிடர் எம்மாத்திரம்?

நேர்மையாளராய் இருக்கப்

பெண்ணிடம் பிறந்தவர் எம்மாத்திரம்?

15வான தூதரில் இறைவன் நம்பிக்கை வையார்;

வானங்களும் அவர்தம் கண்முன்

தூயவையல்ல;

16தீமையை தண்ணீர் போல் குடிக்கும்

அருவருப்பும் ஒழுங்கீனமும் நிறைந்த மாந்தர்

எத்துணை இழிந்தோர் ஆவர்?

17கேளும்! நான் உமக்கு விளக்குகின்றேன்;

நான் பார்த்த இதனை நவில்கின்றேன்;

18ஞானிகள் உரைத்தவை அவை!

அவர்கள் தந்தையர் மறைக்காதவை அவை!

19அவர்களுக்கே நாடு வழங்கப்பட்டது;

அன்னியர் அவர்களிடையே நடமாடியதில்லை.

20துடிக்கின்றனர் துன்பத்தில் மூர்க்கர்

தம் நாளெல்லாம்; துன்பத்தின் ஆண்டுகள்

கொடியோர்க்குக் கூட்டப்பட்டுள்ளன.

21திகிலளிக்கும் ஒலி

அவர்களின் செவிகளில் கேட்கும்;

நலமான காலத்தில் அழிப்பவர் தாக்கலாம்.

22அவர்கள் இருளினின்று தப்பிக்கும் நம்பிக்கை இழப்பர்;

வாளுக்கு இரையாகக் குறிக்கப்பட்டனர்.

23எங்கே உணவு என்று ஏங்கி அலைவர்;

இருள்சூழ்நாள்

அண்மையில் உள்ளதென்று அறிவர்.

24இன்னலும் இடுக்கணும்

அவர்களை நடுங்க வைக்கும்;

போருக்குப் புறப்படும் அரசன்போல்

அவை அவர்களை மேற்கொள்ளும்.

25ஏனெனில், இறைவனுக்கு எதிராக

அவர்கள் கையை ஓங்கினர்;

எல்லாம் வல்லவரை எதிர்த்து வீரம் பேசினர்.

26வணங்காக் கழுத்தோடும்

வலுவான பெரிய கேடயத்தோடும்,

அவரை எதிர்த்து வந்தனர்.

27ஏனெனில், அவர்களின் முகத்தைக்

கொழுப்பு மூடியுள்ளது;

அவர்களின் தொந்தி பருத்துள்ளது.

28பாழான பட்டணங்களிலும்,

எவரும் உறைய இயலா இல்லங்களிலும்,

இடிபாடுகளுக்குரிய வீடுகளிலும்

அவர்கள் குடியிருப்பர்.

29அவர்கள் செல்வர் ஆகார்;

அவர்களின் சொத்தும் நில்லாது;

அவர்களது உடைமை மண்ணில் பெருகாது.

30இருளுக்கு அவர்கள் தப்புவதில்லை;

அவர்களது தளிரை அனல் வாட்டும்.

அவர்களது மலர்

காற்றில் அடித்துப்போகப்படும்.✠

31வீணானதை நம்பி ஏமாந்து போகவேண்டாம்;

ஏனெனில், வெறுமையே

அவர்களது செயலுக்கு வெகுமதியாகும்.

32அவர்களது வாழ்நாள் முடியுமுன்பே

அது நடக்கும்;

அவர்களது தளிர் உலர்ந்துவிடும்;

33பிஞ்சுகளை உதிர்க்கும்

திராட்சைச் செடிபோன்றும்

பூக்களை உகுக்கும் ஒலிவமரம் போன்றும்

அவர்கள் இருப்பர்.

34ஏனெனில், இறையச்சமிலாரின் கூட்டம்

கருகிப்போம்; கையூட்டு வாங்குவோரின்

கூடாரம் எரியுண்ணும்.

35இன்னலைக் கருவுற்று அவர்கள்

இடுக்கண் ஈன்றெடுப்பர்;

வஞ்சகம் அவர்களது வயிற்றில் வளரும்.


15:14-16 யோபு 25:4-6. 15:30 ‘அவர்தம் வாயின் ஊதுதலால் வாரிப்போகப்படுவான்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 16

கடவுளின் நீதியும் மனிதனின் அநீதியும்


1அதற்கு யோபு உரைத்த மறுமொழி;

2இதைப்போன்ற பலவற்றை

நான் கேட்டதுண்டு;

“புண்படுத்தும் தேற்றுவோர்” நீவிர் எல்லாம்.

3உங்களின் வெற்று உரைக்கு முடிவில்லையா?

வாதாட இன்னும் உம்மை உந்துவது எதுவோ?

4என்னாலும் உங்களைப்போல் பேச இயலும்;

என்னுடைய நிலையில் நீவிர் இருந்தால்,

உங்களுக்கெதிராய்ச் சொற்சரம் தொடுத்து,

உங்களை நோக்கித் தலையசைக்கவும் முடியும்.

5ஆயினும், என் சொற்களால்

உங்களை வலுப்படுத்துவேன்;

என் உதட்டின் ஆறுதல்

உங்கள் வலியைக் குறைக்குமே!

6நான் பேசினாலும் என் வலி குறையாது;

அடக்கி வைப்பினும் அதில் ஏதும் அகலாது.

7உண்மையில், கடவுளே!

இப்போது என்னை உளுத்திட வைத்தீர்;

என் சுற்றம் முற்றும் இற்றிடச் செய்தீர்.

8நீர் என்னை இளைக்கச் செய்தீர்;

அதுவே எனக்கு எதிர்ச்சான்று ஆயிற்று;

என் மெலிவு எழுந்து

எனக்கு எதிராகச் சான்று பகர்ந்தது.

9அவர் என்னை வெறுத்தார்;

வெஞ்சினத்தில் கீறிப்போட்டார்;

என்னை நோக்கிப் பல்லைக் கடித்தார்;

என் எதிரியும் என்னை முறைத்துப் பார்த்தான்.

10மக்கள் எனக்கெதிராய் வாயைத் திறந்தார்கள்;

ஏளனமாய் என் கன்னத்தில் அறைந்தார்கள்;

எனக்கெதிராய் அவர்கள் திரண்டனர்.

11இறைவன் என்னைக் கயவரிடம் ஒப்புவித்தார்.

கொடியவர் கையில் என்னைச் சிக்கவைத்தார்;

12நலமுடன் இருந்தேன் நான்;

தகர்த்தெறிந்தார் என்னை அவர்;

பிடரியைப் பிடிந்து என்னை நொறுக்கினார்;

என்னையே தம் இலக்காக ஆக்கினார்.

13அவர் தம் வில்வீரர்

என்னை வளைத்துக் கொண்டனர்;

என் ஈரலை அவர் பிளந்து விட்டார்;

ஈவு இரக்கமின்றி என் ஈரலின் பித்தை

மண்ணில் சிந்தினார்.

14முகத்தில் அடியடியென்று

என்னை அடித்தார்;

போர்வீரன்போல் என்மீது பாய்ந்தார்.

15சாக்கு உடையை நான் என் உடலுக்குத்

தைத்துக் கொண்டேன்;

புழுதியில் என் மேன்மையைப் புதைத்தேன்.

16அழுதழுது என் முகம் சிவந்தது;

என் கண்களும் இருண்டு போயின,

17இருப்பினும், வன்செயல்

என் கையில் இல்லை;

மாசு என் மன்றாட்டில் இல்லை.

18மண்ணே! என் குருதியை மறைக்காதே;

என் கூக்குரலைப் புதைக்காதே.

19இப்பொழுதும் இதோ!

என் சான்று விண்ணில் உள்ளது;

எனக்காக வழக்காடுபவர் வானில் உள்ளார்.✠

20என்னை நகைப்பவர்கள் என் நண்பர்களே!

கடவுளிடமே கண்ணீர் வடிக்கின்றேன்.

21ஒருவன் தன் நண்பனுக்காகப் பேசுவதுபோல்,

அவர் மனிதர் சார்பாகக்

கடவுளிடம் பரிந்து பேசுவார்.

22இன்னும் சில ஆண்டுகளே உள்ளன;

பிறகு திரும்ப வரவியலா

வழியில் செல்வேன்.


16:19 யோபு 19:25.


அதிகாரம் 17

1என் உயிர் ஊசலாடுகின்றது;

என் நாள்கள் முடிந்துவிட்டன;

கல்லறை எனக்குக் காத்திருக்கின்றது.

2உண்மையாகவே, எள்ளி நகைப்போர்

என்னைச் சூழ்ந்துள்ளனர்; என் கண்முன்

அவர்தம் பகைமையே நிற்கின்றது.

3நீரே எனக்குப் பணையமாய் இருப்பீராக!

வேறுயார் எனக்குக்

கையடித்து உறுதியளிப்பார்?

4அறியமுடியாதபடி

அவர்கள் உள்ளத்தை அடைத்துப் போட்டீர்;

அதனால் அவர்கள்

மேன்மையடைய விடமாட்டீர்.

5கைம்மாறு கருதி

நண்பர்க்கு எதிராயப் புறங்கூறுவோரின்

பிள்ளைகளின் கண்களும் ஒளியிழந்துபோம்.

6என் இனத்தார்க்கு அவர்

என்னைப் பழிச் சொல்லாக்கியுள்ளார்;

என்னைக் காண்போர் என்முன் துப்புகின்றனர்.

7கடுந்துயரால் என் கண்கள் மங்குகின்றன;

என் உறுப்புகளெல்லாம் நிழல்போலாகின்றன.

8இதைக்கண்டு நேர்மையானவர்

திகைக்கின்றனர்; குற்றமற்றோர்

இறைப்பற்று இல்லார் மேல்

சீற்றமடைகின்றனர்.

9நேர்மையாளர் தம் நெறியைக் கடைப்பிடிப்பர்;

கறையற்ற கையினர்

இன்னும் வலிமை அடைவர்.

10ஆனால், இப்பொழுது

நீங்கள் எல்லாரும் திரும்பி வாருங்கள்.

வந்தாலும் ஞானமுள்ள எவரையும்

உங்களில் காணமாட்டேன்.

11கடந்தன என் நாள்கள்;

தகர்ந்தன என் திட்டங்கள்;

அவ்வாறே ஆயின என் இதய நாட்டங்கள்.

12அவர்கள் இரவைப் பகலாகத் திரிக்கின்றனர்;

ஒளி இருளுக்கு அண்மையில் உளது

என்கின்றனர்.

13இருள் உலகையே

என் இல்லமென எதிர்பார்ப்பேனாகில்,

என் படுக்கையை இருளிலே விரிப்பேனாகில்,

14படுகுழியை நோக்கி “என் தந்தையே” என்றும்,

புழுவை நோக்கி “என் தாயே,

என் தமக்கையே” என்றும் புகல்வேனாகில்,

15பின் எங்கே என் நம்பிக்கை?

என் நம்பிக்கையைக் காணப்போவது யார்?

16நாம் ஒன்றாய்ப் புழுதிக்குப் போகும் போது,

இருள் உலகில் வாயில்வரை அது இறங்குமா?


அதிகாரம் 18

தீயோரின் தவிர்க்க முடியாத முடிவு


1அதற்குச் சூகாவியனான பில்தாது

சொன்ன பதில்:

2எப்பொழுது உமது சூழ்ச்சியுள்ள

சொற்பொழிவை முடிக்கப் போகிறீர்?

சிந்தித்திப் பாரும்; பின்னர் நாம் பேசுவோம்.

3மாக்களாக நாங்கள் கருதப்படுவது ஏன்?

மதியீனர்களோ நாங்கள் உம் கண்களுக்கு?

4சீற்றத்தில் உம்மையே நீர்

கீறிக்கொள்வதனால், உம்பொருட்டு

உலகம் கைவிடப்பட வேண்டுமா?

பாறையும் தன் இடம்விட்டு

நகர்த்தப்படவேண்டுமா?

5தீயவரின் ஒளி அணைந்துபோம்;

அவர்களது தீக்கொழுந்து எரியாதுபோம்.

6அவர்களின் கூடாரத்தில் ஒளி இருளாகும்;

அவர்கள்மீது ஒளிரும் விளக்கு

அணைந்துபோம்.

7அவர்களின் பீடுநடை தளர்ந்துபோம்;

அவர்களின் திட்டமே

அவர்களைக் கவிழ்க்கும்.

8அவர்களின் கால்களே

அவர்களை வலைக்குள் தள்ளும்;

அவர்கள் நடப்பதோ கண்ணிகள் நடுவில்தான்.

9கண்ணி அவர்களின் குதிகாலைச்

சிக்கிப்பிடிக்கும்;

சுருக்கு அவர்களை மாட்டி இழுக்கும்.

10மண்மீது அவர்களுக்குச் சுருக்கும், பாதையில் அவர்களுக்குப் பொறியும் மறைந்துள்ளன.

11எப்பக்கமும் திகில்

அவர்களை நடுங்க வைக்கும்;

கால் செல்லும் வழியில் துரத்தி விரட்டும்.

12பட்டினி அவர்களின் வலிமையை

விழுங்கிடும்; தீங்கு அவர்களின்

வீழ்ச்சிக்குக் காத்திருக்கும்.

13நோய் அவர்களின் தோலைத் தின்னும்;

சாவின் தலைப்பேறு

அவர்களின் உறுப்புகளை விழுங்கும்.

14அவர்கள் நம்பியிருந்த கூடாரத்தினின்று

பிடுங்கப்படுவர்; அச்சம்தரும்

அரசன்முன் கொணரப்படுவர்.

15அவர்களின் கூடாரங்களில் எதுவும் தங்காது;

அவர்களின் உறைவிடங்களில்

கந்தகம் தூவப்படுகின்றது.

16கீழே அவர்களின் வேர்கள் காய்ந்துபோம்;

மேலே அவர்களின் கிளைகள் பட்டுப்போம்.

17அவர்களின் நினைவே அவனியில்

இல்லாதுபோம்; மண்ணின் முகத்தே

அவனுக்குப் பெயரே இல்லாது போம்.

18ஒளியிலிருந்து இருளுக்குள்

அவர்கள் தள்ளப்படுவர்; உலகிலிருந்தே

அவர்கள் துரத்தப்படுவர்.

19அவர்களின் இனத்தாரிடையே

அவர்களுக்கு வழிமரபும்

வழித்தோன்றலுமில்லை;

அவர்கள் வாழ்ந்த இடத்தில்

அவர்கள்வழி எஞ்சினோர் யாருமில்லை.

20அவர்கள் கதி கண்டு திடுக்கிட்டது

மேற்றிசை; திகிலுற்றது கீழ்த்திசை.

21கொடியவரின் குடியிருப்பெல்லாம்

இத்தகையதே; இறைவனை

அறியாதவரின் நிலையும் இதுவே.


18:5-6 யோபு 21:17.


அதிகாரம் 19

பற்றுறுதியின் வெற்றி


1பின் யோபு உரைத்த மறுமொழி:

2என் உள்ளத்தை எவ்வளவு காலத்திற்குப் புண்படுத்துவீர்?

என்னை வார்த்தையால் நொறுக்குவீர்?

3பன்முறை என்னைப் பழித்துரைத்தீர்;

வெட்கமின்றி என்னைத் தாக்கிப் பேசினீர்.

4உண்மையாகவே

நான் பிழை செய்திருந்தாலும்

என்னுடன் அன்றோ அந்தப் பிழை இருக்கும்?

5எனக்கு எதிராய் நீங்களே உங்களைப்

பெருமைப்படுத்திக் கொள்வீர்களாகில்,

என் இழிநிலையை

எனக்கு விரோதமாய்க் காட்டுவீராகில்,

6கடவுள்தான் என்னை

நெருக்கடிக்குள் செலுத்தினார் என்றும்,

வலைவீசி என்னை வளைத்தார் என்றும்

அறிந்துகொள்க!

7இதோ! ‘கொடுமை’ எனக்

கூக்குரலிட்டாலும் கேட்பாரில்லை;

நான் ஓலமிட்டாலும் தீர்ப்பாரில்லை.

8நான் கடந்துபோகாவண்ணம்,

கடவுள் என் வழியை அடைத்தார்;

என் பாதையை இருளாக்கினார்.

9என் மாண்பினை அவர் களைந்தார்;

மணிமுடியை என் தலையினின்று அகற்றினார்.

10எல்லாப் பக்கமும் என்னை

இடித்துக் தகர்த்தார்;

நான் தொலைந்தேன்;

மரம்போலும் என் நம்பிக்கையை

வேரோடு பிடுங்கினார்.

11அவர்தம் கோபக்கனல் எனக்கெதிராய்த்

தெறித்தது; அவர் எதிரிகளில் ஒருவனாய்

என்னையும் எண்ணுகின்றார்.

12அவர்தம் படைகள் ஒன்றாக எழுந்தன;

அவர்கள் எனக்கெதிராய் முற்றுகை இட்டனர்;

என் கூடாரத்தைச் சுற்றிப்

பாசறை அமைத்தனர்.

13என் உடன் பிறந்தவரை

என்னிடமிருந்து அகற்றினார்;

எனக்கு அறிமுகமானவரை

முற்றிலும் விலக்கினார்;

14என் உற்றார் என்னை ஒதுக்கினர்;

என் நண்பர்கள் என்னை மறந்தனர்.

15என் வீட்டு விருந்தினரும்

என் பணிப்பெண்களும்

என்னை அன்னியனாகக் கருதினர்;

அவர்கள் கண்களுக்குமுன்

நான் அயலானானேன்.

16என் அடிமையை அழைப்பேன்;

மறுமொழி கொடான்; என் வாயால்

அவனைக் கெஞ்ச வேண்டியிருக்கிறது.

17என் மனைவிக்கு என் மூச்சு வீச்சம் ஆயிற்று;

என் தாயின் பிள்ளைகளுக்கு

நாற்றம் ஆனேன்.

18குழந்தைகளும் என்னைக்

கேலி செய்கின்றனர்;

நான் எழுந்தால் கூட ஏளனம் செய்கின்றனர்.

19என் உயிர் நண்பர் எல்லாரும்

என்னை வெறுத்தனர்;

என் அன்புக்குரியவராய் இருந்தோரும்

எனக்கெதிராக மாறினர்.

20நான் வெறும் எலும்பும் தோலும் ஆனேன்;

நான் பற்களின் ஈறோடு தப்பினேன்.

21என் மேல் இரங்குங்கள்;

என் நண்பர்காள்! என் மேல்

இரக்கம் கொள்ளுங்கள்; ஏனெனில்

கடவுளின் கை என்னைத் தண்டித்தது.

22இறைவனைப் போல்

நீங்களும் என்னை விரட்டுவது ஏன்?

என் சதையை நீங்கள் குதறியது போதாதா?

23ஓ! என் வார்த்தைகள் இப்பொழுது

வரையப்படலாகாதா? ஓ! அவை

ஏட்டுச் சுருளில் எழுதப்படலாகாதா?

24இரும்புக்கருவியாலும் ஈயத்தாலும்

என்றென்றும் அவை

பாறையில் பொறிக்கப்பட வேண்டும்.

25ஏனெனில், என் மீட்பர்

வாழ்கின்றார் என்றும்

இறுதியில் மண்மேல் எழுவார் என்றும்

நான் அறிவேன்.

26என் தோல் இவ்வாறு அழிக்கப்பட்ட பின்,

நான் சதையோடு இருக்கும் போதே

கடவுளைக் காண்பேன்.

27நானே, அவர் என் பக்கத்தில்

நிற்கக் காண்பேன்; என் கண்களே காணும்;

வேறு கண்கள் அல்ல;

என் நெஞ்சம் அதற்காக ஏங்குகின்றது.

28ஆனால், நீங்கள் பேசிக்கொள்கின்றீர்கள்;

‘அவனை எப்படி நாம் வதைப்பது?

அவனிடம் அடிப்படைக் காரணத்தை

எவ்வாறு கண்டுபிடிப்பது?’

29மாறாக — வாளுக்கு நீங்களே

அஞ்சவேண்டும்; ஏனெனில்,

சீற்றம் வாளின் தண்டனையைக் கொணரும்;

அப்போது, நீதித் தீர்ப்பு உண்டு என்பதை

அறிந்துகொள்வீர்கள்.


அதிகாரம் 20

நீதிக்கு விதிவிலக்கு இல்லை


1அதற்கு நாமாயனான சோப்பார்

கூறின பதில்:

2என்னுள் இருக்கும் துடிப்பின் பொருட்டு,

என் எண்ணங்கள்

பதில் சொல்ல வைக்கின்றன.

3என்னை வெட்கமடையச் செய்யும்

குத்தல்மொழி கேட்டேன்;

நான் புரிந்து கொண்டதிலிருந்து

விடை அளிக்க

மனம் என்னை உந்துகிறது.

4மாந்தர் மண்ணில் தோன்றியதிலிருந்து,

தொன்றுதொட்டு நடக்குமிது

உமக்குத் தெரியாதா?

5கொடியவரின் மகிழ்ச்சி நொடிப் பொழுதே!

கடவுளுக்கு அஞ்சாதவரின் களிப்பு

கணப்பொழுதே!

6அவர்களின் பெருமை

விசும்பு மட்டும் உயர்ந்தாலும்,

அவர்களின் தலை

முகிலை முட்டுமளவு இருந்தாலும்,

7அவர்கள் தங்களின் சொந்த மலம் போன்று

என்றைக்கும் ஒழிந்திடுவர்;

அவர்களைக் கண்டவர்,

எங்கே அவர்கள்? என்பர்.

8கனவுபோல் கலைந்திடுவர்; காணப்படார்;

இரவு நேரக் காட்சிபோல் மறைந்திடுவர்.

9பார்த்த கண் இனி அவர்களைப் பார்க்காது;

வாழ்ந்த இடம், அவர்களை என்றும் காணாது.

10ஏழைகளின் தயவை

அவர்களின் குழந்தைகள் நாடுவர்;

அவர்களின் கைகளே

அவர்களின் செல்வத்தைத் திரும்ப அளிக்கும்.

11எலும்புகளை நிரப்பிய

அவர்களின் இளமைத் துடிப்பு,

மண்ணில் அவர்களோடு மறைந்துவிடும்.

12தீங்கு அவர்களின் வாயில்

இனிப்பாய் இருப்பினும், நாவின் அடியில்

அதை அவர்கள் மறைத்து வைப்பினும்,

13இழந்து போகாமல்

அதை அவர்கள் இருத்தி வைத்தாலும்,

அண்ணத்தின் நடுவே

அதை அடைத்து வைத்தாலும்,

14யிற்றிலே அவர்களின் உணவு

மாற்றமடைந்து, அவர்களுக்கு

விரியன் பாம்பின் நஞ்சாகிவிடுமே;

15செல்வத்தை விழுங்கினர்;

அதை அவர்களே கக்குவர்;

இறைவன் அவர்களின் வயிற்றிலிருந்து

அதை வெளியேற்றுவார்.

16விரியன் பாம்பின் நஞ்சை

அவர்கள் உறிஞ்சுவர்;

கட்டு விரியனின் நாக்கு

அவர்களைக் கொன்றுபோடும்.

17ஓலிவ எண்ணெய்க் கால்வாய்களிலும்

, தேன், வெண்ணெய் ஆறுகளிலும்

அவர்கள் இன்பம் காணார்.

18தங்களின் உழைப்பின் பயனை

அவர்கள் திரும்ப அளிப்பர்;

அதை அவர்கள் உண்ணமாட்டார்;

வணிகத்தின் வருவாயில் இன்புறார்.

19ஏனெனில், அவர்கள் ஏழைகளை ஒடுக்கி,

இல்லாதவராக்கினர்;

தாங்கள் கட்டாத வீட்டை

அவர்கள் அபகரித்துக் கொண்டனர்.

20அவர்களின் ஆசைக்கோர் அளவேயில்லை;

ஆதலால், அவர்கள் இச்சித்த செல்வத்தில்

மிச்சத்தைக் காணார்.

21அவர்கள் தின்றபின்

எஞ்சியது எதுவும் இல்லை; எனவே

அவர்களது செழுமை நின்று நிலைக்காது.

22நிறைந்த செல்வத்திடை

அவர்களுக்கு நெருக்கடி ஏற்படும்;

அவலத்தின் பளுவெல்லாம்

அவர்கள்மேல் விழும்.

23அவர்கள் வயிறு புடைக்க உண்ணும்போது,

இறைவன் தம் கோபக்கனலை

அவர்கள்மேல் கொட்டுவார்; அதையே

அவர்களுக்கு உணவாகப் பொழிவார்.

24அவர்கள் இரும்பு ஆயுதத்திற்கு

அஞ்சி ஓடுவர்; ஆனால், வெண்கல வில்

அவர்களை வீழ்த்திடுமே!

25அவர்கள் அதைப் பின்புறமாக இழுப்பர்;

மின்னும் அம்புமுனை பிச்சியிலிருந்து வெளிவரும்;

அச்சம் அவர்கள் மேல் விழும்.

26காரிருள் அவர்களது கருவூலத்திற்குக்

காத்திருக்கும்; மூட்டாத தீ

அதனைச் சுட்டெரிக்கும்; அவர்களின்

கூடாரத்தில் எஞ்சியதை விழுங்கும்.

27விண்ணகம் அவர்களின் பழியை

வெளியாக்கும்; மண்ணகம் அவர்களை

மறுத்திட எழுந்து நிற்கும்.

28அவர்களது இல்லத்தின் செல்வம்

சூறையாடப்படும்; இறைவனின்

வெஞ்சின நாளில் அது அடித்துப்போகப்படும்.

29இதுவே பொல்லார்க்குக்

கடவுள் அளிக்கும் பங்கு; அவர்களுக்கு

இறைவன் குறிக்கும் உரிமைச் சொத்து.


அதிகாரம் 21

நிகழ்வன எதிர்மாறாய் இருத்தல்


1அதற்கு யோபு கூறிய மறுமொழி:

2நான் கூறுவதைக் கவனமாய்க்

கேளுங்கள்; இதுவே நீங்கள்

எனக்கு அளிக்கும் ஆறுதலாயிருக்கும்.

3பொறுங்கள்! என்னைப் பேசவிடுங்கள்;

நான் பேசிய பிறகு கேலி செய்யுங்கள்.

4என்னைப் பொறுத்த மட்டில்,

நான் முறையிடுவது மனிதரை எதிர்த்தா?

இல்லையேல் நான் ஏன்

பொறுமை இழக்கக்கூடாது?

5என்னை உற்றுப்பாருங்கள்; பதறுங்கள்;

கையால் வாயில் அடித்துக்கொள்ளுங்கள்.

6இதை நான் நினைக்கும்பொழுது

திகிலடைகிறேன்;

நடுக்கம் என் சதையை ஆட்டுகிறது.

7தீயோர் வாழ்வதேன்?

நீண்ட ஆயுள் பெறுவதேன்?

. வலியோராய் வளர்வதேன்?

8அவர்களின் வழிமரபினர்

அவர்கள்முன் நிலைபெறுகின்றனர்;

அவர்களின் வழித்தோன்றல்கள்

அவர்கள் கண்முன் நிலைத்திருக்கின்றனர்.

9அவர்களின் இல்லங்களில்

அச்சமற்ற அமைதி நிலவுகின்றது.

கடவுளின் தண்டனை

அவர்கள்மேல் விழவில்லை.

10அவர்களின் காளைகள் பொலிகின்றன.

ஆனால் பிசகுவதில்லை;

அவர்களின் பசுக்கள் கருவுறும்;

ஆனால் கரு கலைவதில்லை.

11மந்தைபோல அவர்கள் தம் மழலைகளை

வெளியனுப்புகின்றனர்; அவர்களின்

குழந்தைகள் குதித்தாடுகின்றனர்.

12அவர்கள் தம்புரு, சுரமண்டலம் இசைத்துப்

பாடுகின்றனர்; குழல் ஊதி மகிழ்ந்திடுகின்றனர்.

13அவர்கள் மகிழ்வில்

தம் நாள்களைக் கழிக்கின்றனர்;

அமைதியில் பாதாளம் இறங்குகின்றனர்.

14அவர்கள் இறைவனிடம் இயம்புகின்றனர்;

‘எம்மை விட்டு அகலும்; ஏனெனில்,

உமது வழிகளை அறிந்து கொள்ள

நாங்கள் விரும்பவில்லை;’

15எல்லாம் வல்லவர் யார் நாங்கள் பணி புரிய?

அவரை நோக்கி நாங்கள்

மன்றாடுவதால் என்ன பயன்?

16இதோ! அவர்களின் வளமை

அவர்களின் கையில் இல்லை;

எனவே, தீயோரின் ஆலோசனை

எனக்குத் தொலையிலிருப்பதாக!

17எத்தனைமுறை தீயோரின் ஒளி

அணைகின்றது? அழிவு

அவர்கள்மேல் வருகின்றது?

கடவுள் தம் சீற்றத்தில்

வேதனையைப் பங்கிட்டு அளிக்கின்றார்.

18அவர்கள் காற்றுக்குமுன் துரும்பு போன்றோர்;

சூறாவளி அடித்துப் போகும் பதர் போன்றோர்.

19அவர்களின் தீங்கைக் கடவுள் அவர்களின்

பிள்ளைகளுக்கா சேர்த்து வைக்கின்றார்?

அவர்களுக்கே அவர் திரும்பக் கொடுக்கின்றார்;

அவர்களும் அதை உணர்வர்.

20அவர்களின் அழிவை அவர்களின்

கண்களே காணட்டும்;

எல்லாம் வல்லவரின் வெஞ்சினத்தை

அவர்கள் குடிக்கட்டும்.

21அவருடைய நாள்கள் எண்ணப்பட்டபின்,

அவர்களது இல்லத்தில்

அவர்கள் கொள்ளும் அக்கறை என்ன?

22இறைவனுக்கு அறிவைக் கற்பிப்போர் யார்?

ஏனெனில், அவரே

உயர்ந்தோரைத் தீர்ப்பிடுகின்றார்.

23சிலர் வளமையோடும் வலிமையோடும்

நிறைவோடும் முழு அமைதியோடும்

சாகின்றனர்.

24அவர்களின் தொடைகள்

கொழுப்பேறி உள்ளன; அவர்களின்

எலும்புகளின் சோறு உலரவில்லை.

25வேறு சிலர், கசந்த உள்ளத்துடன்

இனிமையைச் சுவைக்காதவராய்ச் சாகின்றனர்;

26புழுதியில் இருசாராரும் ஒன்றாய்த் துஞ்சுவர்;

புழுக்கள் அவர்களைப் போர்த்தி நிற்குமே.

27இதோ! உம் எண்ணங்களையும்

எனக்கெதிராய்த் தீட்டும் திட்டங்களையும்

நான் அறிவேன்.

28ஏனெனில், நீங்கள் கூறுகின்றீர்கள்;

‘கொடுங்கோலனின் இல்லம் எங்கே?

கொடியவன் குடியிருக்கும் கூடாரம் எங்கே?’

29வழிப்போக்கர்களை நீங்கள் வினவவில்லையா?

அவர்கள் அறிவித்ததை

நீங்கள் கேட்கவில்லையா?

30தீயோர் அழிவின் நாளுக்கென

விடப்பட்டுள்ளனர்; வெஞ்சின நாளில்

அவர்கள் விடுவிக்கப்படுவாரா?

31யார் அவர்களின் முகத்துக்கு எதிரே

அவர்களின் போக்கை உரைப்பார்?

யார் அவர்களின் செயலுக்கேற்ப கொடுப்பார்?

32இருப்பினும், கல்லறைக்கு

அவர்கள் கொண்டுவரப்படுவர்;

அவர்களின் சமாதிக்குக்

காவல் வைக்கப்படும்.

33பள்ளத்தாக்கின் மண் அவர்களுக்கு

இனிமையாய் இருக்கும்;

மாந்தர் அனைவரும் அவர்களைப்

பின்தொடர்வர்; அவர்களின்

முன் செல்வோர்க்குக் கணக்கில்லை.

34அப்படியிருக்க, வெற்றுமொழியால்

நீர் என்னைத் தேற்றுவதெப்படி?

உமது மறுமொழி முற்றிலும் பொய்யே!


அதிகாரம் 22

கடவுளோடு ஒப்புரவாகும் வழி


(22:1-27:23)

1பின்னர் தேமானியனான எலிப்பாசு

பேசத் தொடங்கினான்:

2மனிதரால் இறைவனுக்குப் பயன் உண்டா?

மதிநுட்பம் உடையவரால்

அவருக்குப் பயன் உண்டா?

3நீர் நேர்மையாக இருப்பது

எல்லாம் வல்லவர்க்கு இன்பம் பயக்குமா?

நீர் உமது வழியைச் செம்மைப்படுத்துவது

அவர்க்கு நன்மை பயக்குமா?

4நீர் அவரை அஞ்சி மதிப்பதாலா

அவர் உம்மைக் கண்டிக்கிறார்?

அதனை முன்னிட்டா

உம்மைத் தீர்ப்பிடுகிறார்?

5உமது தீமை பெரிதல்லவா?

உமது கொடுமைக்கு முடிவில்லையா?

6ஏனெனில், அற்பமானவற்றுக்கும்

உம் உறவின்முறையாரிடம் அடகு வாங்கினீர்;

ஏழைகளின் உடையை உரிந்து விட்டீர்!

7தாகமுள்ளோர்க்குக்

குடிக்கத் தண்ணீர் தரவில்லை;

பசித்தோர்க்கு உணவு கொடுக்க

முன்வரவில்லை.

8வலிய மனிதராகிய உமக்கு

வையகம் சொந்தமாயிற்று;.

உம் தயவு பெற்றவர்க்கே

அது குடியிருப்பாயிற்று.

9விதவைகளை நீர்

வெறுங்கையராய் விரட்டினீர்;

.அனாதைகளின் கைகளை முறித்துப் போட்டீர்.

10ஆகையால்,

கண்ணிகள் உம்மைச் சூழ்ந்துள்ளன;

கிலி உம்மைத் திடீரென ஆட்கொள்ளும்.

11நீர் காணாவண்ணம் காரிருள் சூழ்ந்தது;

நீர்ப்பெருக்கு உம்மை மூழ்கடித்தது.

12உயரத்தே விண்ணகத்தில்

கடவுள் இல்லையா?

வானிலிருக்கும் விண்மீன்களைப் பாரும்!

அவை எவ்வளவு உயரத்திலுள்ளன!

13ஆனால், நீர் சொல்கின்றீர்;

‘இறைவனுக்கு என்ன தெரியும்?

கார்முகிலை ஊடுருவிப் பார்த்து

அவரால் தீர்ப்பிட முடியுமா?

14அவர் பார்க்காவண்ணம் முகில் மறைக்கின்றது;

அவர் வான்தளத்தில் உலவுகின்றார்’.

15 நீரும் செல்ல விழைகின்றீரோ!

16நேரம் வருமுன்பே அவர்கள் பிடிப்பட்டனர்;

அவர்கள் அடித்தளத்தை

வெள்ளம் அடித்துச் சென்றது.

17அவர்கள் இறைவனிடம்,

‘எங்களைவிட்டு அகலும்; எல்லாம் வல்லவர்

எங்களுக்கு என்ன செய்ய முடியும்?’ என்பர்.

18இருப்பினும், அவரே அவர்களின் இல்லத்தை

நம்மையினால் நிரப்பினார்; .

எனினும், தீயவரின் திட்டம்

எனக்குத் தொலைவாயிருப்பதாக!

19நேர்மையுள்ளோர் அதைக் கண்டு

மனம் மகிழ்கின்றனர்; மாசற்றோர்

அவர்களை எள்ளி நகையாடுகின்றனர்;

20‘இதோ! நம் பகைவர் வீழ்த்தப்பட்டனர்;

அவர்களின் சேமிப்பு

தீயால் விழுங்கப்பட்டது’

என்கின்றனர்.

21இணங்குக இறைவனுக்கு;எய்துக அமைதி;

அதனால் உமக்கு நன்மை வந்தடையும்.

22அவர் வாயினின்று அறிவுரை பெறுக;

அவர்தம் மொழிகளை

உம் நெஞ்சில் பொறித்திடுக;

23நீர் எல்லாம் வல்லவரிடம்

திரும்பி வருவீராகில்,

நீர் கட்டியெழுப்பப்படுவீர்; தீயவற்றை

உம் கூடாரத்திலிருந்து அகற்றி விடும்!

24பொன்னைப் புழுதியிலே எறிந்து,

ஓபீர்த் தங்கத்தை ஓடைக் கற்களிடை வீசிவிடும்!

25எல்லாம் வல்லவரே உமக்குப் பொன்னாகவும்,

வெள்ளியாகவும், வலிமையாகவும் திகழ்வார்.

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்

26அப்போது எல்லாம் வல்லவரில்

நீர் நம்பிக்கை கொள்வீர்.

கடவுளைப் பார்த்து

உம் முகத்தை நிமிர்த்திடுவீர்.

27நீர் அவரிடம் மன்றாடுவீர்;

அவரும் உமக்குச் செவி கொடுப்பார்.

28நீர் நினைப்பது கைகூடும்;

உம் வழிகள் ஒளிமயமாகும்.

29ஏனெனில், அவர் செருக்குற்றோரின்

ஆணவத்தை அழிக்கின்றார்;

தாழ்வாகக் கருதப்பட்டோரை மீட்கின்றார்.✠

30குற்றவாளிகளையும் அவர் விடுவிப்பார்;

அவர்கள் உம் கைகளின்

தூய்மையால் மீட்கப்படுவர்.


22:2-3 யோபு 35:6-8. 22:29 ‘ஏனெனில் அவர்கள் தாழ்த்தப்படும்போது,அவர்களை உயர்த்தும், என்பீர்; அவரும் அவர்களைத் தாழ்நிலையினின்று விடுவிப்பார்’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 23

1யோபு அதற்கு உரைத்த மறுமொழி:

2இன்றுகூட என் முறைப்பாடு

கசப்பாயுள்ளது;

நான் வேதனைக் குரல் எழுப்பியும்,

என் மேல் அவரது⁕ கை பளுவாயுள்ளது.

3அவரை எங்கே கண்டுபிடிக்கலாமென

நான் அறிய யாராவது உதவுவாரானால்,

நான் அவர் இருக்கையை அணுகுவேன்.

4என் வழக்கை அவர்முன் எடுத்துரைப்பேன்;

என் வாயை வழக்குரைகளால் நிரப்புவேன்.

5அவர் எனக்கு என்ன வார்த்தை கூறுவார் என

அறிந்து கொள்வேன்; அவர் எனக்கு

என்ன சொல்வார் என்பதையும்

நான் புரிந்து கொள்வேன்.

6மாபெரும் வல்லமையுடன்

அவர் என்னோடு வழக்காடுவாரா?

இல்லை; அவர் கண்டிப்பாக

எனக்குச் செவி கொடுப்பார்.

7அங்கே நேர்மையானவன்

அவரோடு வழக்காடலாம்;

நானும் என் நடுவரால்

முழுமையாக விடுவிக்கப்படுவேன்.

8கிழக்கே நான் சென்றாலும்

அவர் அங்கில்லை;

மேற்கேயும் நான் அவரைக் காண்கிலேன்.

9இடப்புறம் தேடினும்

செயல்படுகிற அவரைக் காணேன்;

வலப்புறம் திரும்பினும்

நான் அவரைப் பார்த்தேனில்லை.

10ஆயினும் நான் போகும் வழியை

அவர் அறிவார்; என்னை அவர் புடமிட்டால்,

நான் பொன்போல் துலங்கிடுவேன்.

11அவர் அடிச்சுவடுகளை

என் கால்கள் பின்பற்றின;

அவர் நெறியில் நடந்தேன்; பிறழவில்லை.

12அவர் நா உரைத்த ஆணையினின்று

நான் விலகவில்லை;

அவர்தம் வாய்மொழிகளை

அரும்பொருளின் மேலாகப் போற்றினேன்.

13ஆனால், அவர் ஒரு முடிவை எடுத்தால்,

யாரால் மாற்ற முடியும்? ஏனெனில்,

எதை அவர் விரும்புகிறாரோ

அதை அவர் செய்கிறார்.

14ஏனெனில் எனக்கு அவர் குறித்துள்ளதை

அவர் நிறைவேற்றுவார்;

இத்தகையன பல அவர் உள்ளத்தில் உள்ளன.

15ஆகையால், அவர்முன் நடுங்குகின்றேன்;

அவரைப்பற்றி நினைக்கையில்

திகிலடைகின்றேன்.

16இறைவன் எனை உளம் குன்றச் செய்தார்;

எல்லாம் வல்லவர் என்னைக்

கலங்கச் செய்தார்.

17ஏனெனில் இருள் என்னை மறைக்கிறது;

காரிருள் என் முகத்தைக் கவ்வுகிறது.


23:2 ‘எனது’ என்பது எபிரேய பாடம்.


அதிகாரம் 24

1குறித்த காலத்தை எல்லாம் வல்லவர்

ஏன் வெளிப்படுத்தவில்லை?

அவரை அறிந்தோரும்

ஏன் அவர் தம் நாள்களைக் காணவில்லை?

2தீயோர் எல்லைக்கல்லை

எடுத்துப்போடுகின்றனர். மந்தையைக்

கொள்ளையிட்டு மேய்கின்றனர்.

3அனாதையின் கழுதையை

ஓட்டிச் செல்கின்றனர்.

விதவையின் எருதை

அடகாய்க் கொள்கின்றனர்.

4ஏழையை வழியினின்று தள்ளுகின்றனர்.

நாட்டின் வறியோர்

ஒன்றாக ஒளிந்து கொள்கின்றனர்.

5ஏழைகள் உணவுதேடும் வேலையாய்க்

காட்டுக் கழுதையெனப்

பாலைநிலத்தில் அலைகின்றனர்;

பாலைநிலத்தில் கிடைப்பதே

அவர்கள் பிள்ளைகளுக்கு உணவாகும்.

6கயவரின் கழனியில் அவர்கள்

சேகரிக்கின்றனர்;

பொல்லாரின் திராட்சைத் தோட்டத்தில்

அவர்கள் பொறுக்குகின்றனர்.

7ஆடையின்றி இரவில்

வெற்று உடலாய்க் கிடக்கின்றனர்;

வாடையில் போர்த்திக் கொள்ளப்

போர்வையின்றி இருக்கின்றனர்;

8மலையில் பொழியும் மழையால் நனைகின்றனர்;

உறைவிடமின்றிப் பாறையில் ஒண்டுகின்றனர்;

9தந்தையிலாக் குழந்தையைத்

தாயினின்று பறிக்கின்றனர்;

ஏழையின் குழந்தையை அடகு வைக்கின்றனர்.

10 ஆறாப்பசியுடன் அரிக்கட்டைத் தூக்குகின்றனர்.

11ஒலிவத் தோட்டத்தில்

எண்ணெய் ஆட்டுகின்றனர்;

திராட்சை பிழிந்தும்

தாகத்தோடு இருக்கின்றனர்.

12நகரில் இறப்போர் முனகல் கேட்கின்றது;

காயமடைந்தோர் உள்ளம்

உதவிக்குக் கதறுகின்றது; கடவுளோ

அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.

13இன்னும் உள்ளனர் ஒளியை எதிர்ப்போர்;

இவர்கள் அதன் வழியை அறியார்;

இவர்கள் அதன் நெறியில் நில்லார்.

14எழுவான் கொலைஞன் புலரும் முன்பே;

ஏழை எளியோரைக் கொன்று குவிக்க;

இரவில் திரிவான் திருடன் போல.

15காமுகனின் கண்

கருக்கலுக்காய்க் காத்திருக்கும்;

கண்ணெதுவும் என்னைக் காணாது

என்றெண்ணி;

முகத்தை அவனோ மூடிக் கொள்வான்!

16இருட்டில் வீடுகளில் கன்னம் இடுவர்;

பகலில் இவர்கள் பதுங்கிக் கிடப்பர்;

ஒளியினை இவர்கள் அறியாதவரே!

17ஏனென்றால் இவர்களுக்கு நிழல்

காலைபோன்றது; சாவின் திகில்

இவர்களுக்குப் பழக்கமானதே!

18வெள்ளத்தில் விரைந்தோடும்

வைக்கோல் அவர்கள்;

பார்மேல் அவர்கள் பங்கு சபிக்கப்பட்டது;

அவர்தம் திராட்சைத் தோட்டத்தை

எவரும் அணுகார்.

19வறட்சியும் வெம்மையும் பனிநீரைத் தீய்க்கும்;

தீமை செய்வோரைப் பாதாளம் விழுங்கும்.

20தாங்கிய கருப்பையே அவர்களை மறக்கும்;

புழு அவர்களைச் சுவைத்துத் தின்னும்.

அவர்கள் கொடுமை மரம்போல் முறிந்துபோம்.

21ஏனெனில், மகவிலா மலடியை

இழிவாய் நடத்தினர்; கைம்பெண்ணுக்கு

நன்மையைக் கருதினாரில்லை.

22இருப்பினும், கடவுள் தம் வலிமையால்

வலியோரின் வாழ்வை நீட்டிக்கிறார்;

அவர்கள் தம் வாழ்வில்

நம்பிக்கையோடு இருந்தாலும்

நிலைக்கமாட்டார்கள்.

23அவர் அவர்களைப்

பாதுகாப்புடன் வாழவிடுகிறார்;

அவர்களும் அதில் ஊன்றி நிற்கிறார்கள்;

இருப்பினும் அவரது கண்

அவர்கள் நடத்தைமேல் உள்ளது.

24அவர்கள் உயர்த்தப்பட்டனர்;

அது ஒரு நொடிப்பொழுதே;

அதன்பின் இல்லாமற் போயினர்;

எல்லோரையும் போல் தாழ்த்தப்பட்டனர்;

கதிர் நுனிபோல் கிள்ளி எறியப்பட்டனர்.

25இப்படி இல்லையெனில்,

என்னைப் பொய்யன் என்றோ,

என் மொழி தவறு என்றோ,

எண்பிப்பவன் எவன்?


அதிகாரம் 25

கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்


1பிறகு சூகாவியனான பில்தாது பேசினான்:

2ஆட்சியும் மாட்சியும் கடவுளுக்கே உரியன;

அமைதியை உன்னதங்களில்

அவரே நிலைநாட்டுவார்.

3அளவிட முடியுமா அவர்தம் படைகளை?

எவர்மேல் அவரொளி வீசாதிருக்கும்?

4அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன்

நேரியவராய் இருக்க முடியும்? அல்லது

பெண்ணிடம் பிறந்தவர்

எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?

5இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே!

விண்மீனும் அவர்தம் பார்வையில்

தூய்மையற்றதே!

6அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர்

எத்துணைத் தாழ்ந்தவர்!

பூச்சி போன்ற மானிடர்

எவ்வளவு குறைந்தவர்!


அதிகாரம் 26

‘பில்தாத்தின் சொற்கள் வீணே’


1அதற்கு யோபு கூறிய பதில்:

2என்போன்ற வலிமையற்றவர்க்கு

எத்துணைப் துணைபுரிந்தீர்!

ஆற்றலற்ற தோளுக்கு

எவ்வளவு துணைநின்றீர்!

3என் போன்ற அறிவற்றவர்க்கு

எவ்வளவு அறிவுரை கூறினீர்!

நன்னெறிகளை நிறையக் காட்டீனீர்!

4எவர் துணைகொண்டு

இயம்பினீர் இம்மொழிகளை?

எவர்தம் ஏவுதல்

உம்மிடமிருந்து வெளிப்பட்டது?

5கீழ்உலகின் ஆவிகள் நடுங்குகின்றன;

நீர்த் திரள்களும் அவற்றில் வாழ்வனவும்

அஞ்சுகின்றன.

6பாதாளம் கடவுள்முன் திறந்து கிடக்கிறது;

படுகுழி அவர்முன் மூடப்படவில்லை.

7வெற்றிடத்தில் வடபுறத்தை அவர் விரித்தார்;

காற்றிடையே உலகைத் தொங்கவிட்டார்.

8நீரினை மேகத்துள் பொதித்துள்ளார்;

அதன் நிறைவால் முகிலும் கிழிவதில்லை.

9தம் அரியணையின் முகத்தை மூடுகின்றார்;

முகிலை அதன்மேல் பரப்புகின்றார்.

10நீர்ப்பரப்பின் மீது வட்டம் வரைந்து,

இருளுக்கும் ஒளிக்குமிடையில்

எல்லை அமைத்தார்.

11விண்ணின் தூண்கள் அதிர்கின்றன;

அவர் அதட்டலில் அதிர்ச்சியடைகின்றன.

12ஆழியைத் தம் ஆற்றலால் அடக்கினார்;

இராகாபை அழித்தார் அறிவுக்கூர்மையால்.

13தம் மூச்சால் வான்வெளியை ஒளிர்வித்தார்;

தம் கையால் விரைந்தோடும் பாம்பை

ஊடுருவக் குத்தினார்.

14ஓ! இவையாவும்

அவர்தம் செயல்களின் விளிம்புகளே!

எத்துணை மென்குரல் அவற்றில் கேட்கின்றது.

அவர்தம் வல்லமையின் இடிமுழக்கத்தை அறிய

யாரால் இயலும்?


அதிகாரம் 27

கடவுளின் ஆற்றலும் யோபின் மாசின்மையும்


1யோபு தமது உரையைத்

தொடர்ந்து கூறியது:

2என்றுமுள்ள இறைவன்மேல் ஆணை!

அவர் எனக்கு உரிமை வழங்க மறுத்தார்;

எல்லாம் வல்லவர் எனக்கு

வாழ்வைக் கசப்பாக்கினார்.

3என் உடலில் உயிர் இருக்கும்வரை,

என் மூக்கில் கடவுளின் மூச்சு இருக்கும்வரை,

4என் உதடுகள் வஞ்சகம் உரையா;

என் நாவும் பொய்யைப் புகலாது.

5நீங்கள் சொல்வது சரியென

ஒருகாலும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

சாகும்வரையில்

என்வாய்மையைக் கைவிடவும் மாட்டேன்.

6என் நேர்மையை நான் பற்றிக் கொண்டேன்;

விடவே மாட்டேன்; என் வாழ்நாளில்

எதைக் குறித்தும் என் உள்ளம் உறுத்தவில்லை.

7என் பகைவர் தீயோராக எண்ணப்படட்டும்;

என் எதிரிகள்

நேர்மையற்றோராகக் கருதப்படட்டும்.

8கடவுள் இறைப்பற்றில்லாதோரை அழித்து,

அவர்களின் உயிரைப் பறிக்கும்போது,

அவர்களுக்கு என்ன நம்பிக்கை?

9அவர்கள்மேல் கேடுவிழும்போது

இறைவன் அவர்களின் கூக்குரலைக் கேட்பாரா?

10எல்லாம் வல்லவர் தரும் மகிழ்ச்சியை

அவர்கள் நாடுவார்களா?

கடவுளைக் காலமெல்லாம் அழைப்பார்களா?

11இறைவனின் கைத்திறனை

நான் உங்களுக்குக் கற்பிப்பேன்;

எல்லாம் வல்லவரின் திட்டங்களை

மறைக்கமாட்டேன்.

12இதோ! நீங்கள் யாவருமே

இதைக் கண்டிருக்கின்றீர்கள்;

பின், ஏன் வறட்டு வாதம் பேசுகின்றீர்கள்?

13இதுவே கொடிய மனிதர்

இறைவனிடமிருந்து பெறும் பங்கு;

பொல்லாதவர்

எல்லாம் வல்லவரிடம் பெறும் சொத்து.

14அவர்களின் பிள்ளைகள் பெருகினும்

வாளால் மடிவர்; அவர்களின் வழிமரபினர்

உண்டு நிறைவடையார்.

15அவர்களின் எஞ்சியோர் நோயால் மடிவர்;

அவர்களின் கைம்பெண்கள் புலம்ப மாட்டார்.

16மணல்போல் அவர்கள் வெள்ளியைக் குவிப்பர்;

அடுக்கடுக்காய் ஆடைகளைச் சேர்ப்பர்.

17ஆனால் நேர்மையாளர் ஆடைகளை அணிவர்;

மாசற்றவர் வெள்ளியைப் பங்கிடுவர்.

18சிலந்தி கூடு கட்டுவதுபோலும்,

காவற்காரன் குடில் போடுவதுபோலும்

அவர்கள் வீடு கட்டுகின்றனர்.

19படுக்கைக்குப் போகின்றனர் பணக்காரராய்;

ஆனால் இனி அவ்வாறு இராது;

கண் திறந்து பார்க்கின்றனர்;

செல்வம் காணாமற் போயிற்று.

20திகில் வெள்ளம்போல் அவர்களை அமிழ்த்தும்;

சுழற்காற்று இரவில்

அவர்களைத் தூக்கிச் செல்லும்.

21கீழைக் காற்று

அவர்களை அடித்துச் செல்லும்;

அவர்களின் இடத்திலிருந்து

அவர்களைப் பெயர்த்துச் செல்லும்;

22ஈவு இரக்கமின்றி அவர்களை விரட்டும்;

அதன் பிடியிலிருந்து தலைதெறிக்க ஓடுவர்.

23அவர்களைப் பார்த்து

அது கைகொட்டி நகைக்கும்;

அதன் இடத்திலிருந்து அவர்கள்மேல் சீறிவிழும்.


அதிகாரம் 28

‘ஞானத்தின் மேன்மை’


1வெள்ளிக்கு விளைநிலம் உண்டு;

பொன்னுக்குப் புடமிடும் இடமுண்டு.

2மண்ணிலிருந்து இரும்பு எடுக்கப்படுகின்றது;

கல்லிலிருந்து செம்பு உருக்கப்படுகின்றது.

3மனிதர் இருளுக்கு இறுதி கண்டு,

எட்டின மட்டும் தோண்டி,

இருட்டிலும் சாவின் இருளிலும்

கனிமப் பொருளைத் தேடுகின்றனர்.

4மக்கள் குடியிருப்புக்குத் தொலையில்

சுரங்கத்தைத் தோண்டுவர்;

வழிநடப்போரால் அவர்கள் மறக்கப்படுவர்;

மனிதரிடமிருந்து கீழே இறங்கி

ஊசலாடி வேலை செய்வர்.

5மேலே நிலத்தில் உணவு விளைகின்றது;

கீழே அது நெருப்புக் குழம்பாய் மாறுகின்றது.

6நீலமணிகள் அதன் கற்களில் கிட்டும்;

பொன்துகளும் அதில் கிடைக்கும்.

7அதற்குச் செல்லும் பாதையை,

ஊன் உண்ணும் பறவையும் அறியாது;

கழுகின் கண்களும் அதைக் கண்டதில்லை.

8வீறுகொண்ட விலங்குகள்

அதன் மேல் சென்றதில்லை;

சிங்கமும் அவ்வழி நடந்து கடந்ததில்லை.

9கடின பாறையிலும் அவர்கள் கைவைப்பர்;

மலைகளின் அடித்தளத்தையே

பெயர்த்துப் புரட்டிடுவர்.

10பாறைகள் நடுவே

சுரங்க வழிகளை வெட்டுகின்றனர்;

விலையுயர் பொருளையே

அவர்களது கண் தேடும்.

11ஒழுகும் ஊற்றுகளைத்

தடுத்து நிறுத்துகின்றனர்;

மறைவாய் இருப்பதை

ஒளிக்குக் கொணர்கின்றனர்.

12ஆனால், ஞானம்

எங்கே கண்டெடுக்கப்படும்?

அறிவின் உறைவிடம் எங்கேயுள்ளது?

13மனிதர் அதன் மதிப்பை உணரார்;

வாழ்வோர் உலகிலும் அது காணப்படாது.

14‘என்னுள் இல்லை’ என உரைக்கும் ஆழ்கடல்;

‘என்னிடம் இல்லை’ என இயம்பும் பெருங்கடல்.

15தங்கத்தைக் கொடுத்து

அதைப் பெறமுடியாது; வெள்ளியால்

அதன் விலையை நிறுக்க இயலாது.

16ஓபீர்த் தங்கமும் கோமேதகமும்

அரிய நீலமணியும் அதற்கு மதிப்பாகா!

17பொன்னும் பளிங்கும் அதற்கு நிகராகா;

பசும்பொன் கலன்களும் பண்டமாற்றாகா.

18மணியும் பவளமும் அதற்கு இணையில்லை;

மதிப்பினில் முத்தினை ஞானம் விஞ்சும்.

19எத்தியோப்பிய புட்பராகம்

அதற்கு இணையல்ல;

பத்தரை மாற்றுத் தங்கமும் அதற்கு நிகரல்ல.

20அவ்வாறாயின், எங்கிருந்து வருகிறது ஞானம்?

எங்குள்ளது அறிவின் உறைவிடம்?

21வாழ்வோர் அனைவர்தம் கண்களுக்கும்

ஒளிந்துள்ளது;

வானத்துப் பறவைகளுக்கும்

மறைவாய் உள்ளது.

22படுகுழியும் சாவும் பகர்கின்றன;

அதைப்பற்றிய பேச்சு காதில் விழுந்தது;

23அதன் வழியைத் தெரிந்தவர் கடவுள்;

அதன் இடத்தை அறிந்தவரும் அவரே!

24ஏனெனில், வையகத்தின் எல்லை வரை

அவர் காண்கின்றார்;

வானத்தின்கீழ் உள்ளவற்றைப் பார்க்கின்றார்.

25காற்றுக்கு எடையைக் கடவுள் கணித்தபோது,

நீரினை அளவையால் அளந்தபோது,

26மழைக்கு அவர் கட்டளை இட்டபொழுது,

இடி மின்னலுக்கு வழியை வகுத்த பொழுது,

27அவர் ஞானத்தைக் கண்டார்;

அதைப்பற்றி அறிவித்தார்;

அதை நிலைநாட்டினார்;

இன்னும் அதை ஆய்ந்தறிந்தார்.

28அவர் மானிடர்க்குக் கூறினார்;

ஆண்டவர்க்கு அஞ்சுங்கள்; அதுவே ஞானம்;

தீமையை விட்டு விலகுங்கள்; அதுவே அறிவு.✠


28:28 திபா 111:10; நீமொ 1:7; 9:10.


அதிகாரம் 29

யோபின் முன்னைய இன்பநிலை


1யோபு இன்னும் தொடர்ந்து

பேசிய உரை:

2காண்பேனா முன்னைய திங்கள்களை;

கடவுள் என்னைக் கண்காணித்த நாள்களை!

3அப்போது அவர் விளக்கு

என் தலைமீது ஒளிவீசிற்று;

அவரது ஒளியால் இருளில் நான் நடந்தேன்.

4அப்போது என் இளமையின் நாள்களில்

நான் இருந்தேன்; கடவுளின் கருணை

என் குடிசை மீது இருந்தது.

5அன்று வல்லவர் என்னோடு இருந்தார்;

என் மக்கள் என்னைச் சூழ்ந்திருந்தனர்.

6அப்போது என் காலடிகள் நெய்யில் குளித்தன;

பாறையிலிருந்து எனக்கு எண்ணெய் ஆறாய்ப் பாய்ந்தது.

7நகர வாயிலுக்கு நான் செல்கையிலும்,

பொது மன்றத்தில்

என் இருக்கையில் அமர்கையிலும்,

8என்னைக் கண்டதும்

இளைஞர் ஒதுங்கிக்கொள்வர்;

முதிர்ந்த வயதினர் எழுந்து நிற்பர்.

9உயர்குடி மக்கள் தம் பேச்சை நிறுத்துவர்;

கைகட்டி, வாய்பொத்தி வாளாவிருப்பர்.

10தலைவர்தம் குரல் அடங்கிப்போம்;

அவர் நா அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்.

11என்னைக் கேட்ட செவி,

என்னை வாழ்த்தியது;

என்னைப் பார்த்த கண்

எனக்குச் சான்று பகர்ந்தது.

12ஏனெனில், கதறிய ஏழைகளை

நான் காப்பாற்றினேன்;

தந்தை இல்லார்க்கு உதவினேன்.

13அழிய இருந்தோர் எனக்கு ஆசி வழங்கினர்;

கைம்பெண்டிர்தம் உள்ளத்தைக்

களிப்பால் பாடச் செய்தேன்.

14அறத்தை அணிந்தேன்;

அது என் ஆடையாயிற்று.

நீதி எனக்கு மேலாடையும் பாகையும் ஆயிற்று.

15பார்வையற்றோர்க்குக் கண் ஆனேன்;

காலூனமுற்றோர்க்குக் கால் ஆனேன்.

16ஏழைகளுக்கு நான் தந்தையாக இருந்தேன்;

அறிமுகமற்றோரின் வழக்குகளுக்காக

வாதிட்டேன்.

17கொடியவரின் பற்களை உடைத்தேன்;

அவரின் பற்களுக்கு இரையானவரை

விடுவித்தேன்.

18நான் எண்ணினேன்;

‘மணல் மணியைப்போல்

நிறைந்த நாள் உடையவனாய்

என் இல்லத்தில் சாவேன்.

19என் வேர் நீர்வரை ஓடிப் பரவும்;

இரவெல்லாம் என் கிளையில் பனி இறங்கும்.

20என் புகழ் என்றும் ஓங்கும்;

என் வில் வளைதிறன் கொண்டது.’

21எனக்குச் செவிகொடுக்க

மக்கள் காத்திருந்தனர்;

என் அறிவுரைக்காக அமைதி காத்தனர்.

22என் சொல்லுக்கு மறுசொல்

அவர்கள் கூறவில்லை;

என் மொழிகள் அவர்களில் தங்கின.

23மழைக்கென அவர்கள்

எனக்காய்க் காத்திருந்தனர்;

மாரிக்கெனத் தங்கள் வாயைத் திறந்தனர்.

24நம்பிக்கை இழந்தோரை

என் புன்முறவல் தேற்றியது;

என் முகப்பொலிவு உரமூட்டியது.

25நானே அவர்களுக்கு வழியைக் காட்டினேன்;

தலைவனாய்த் திகழ்ந்தேன்;

வீரர் நடுவே வேந்தனைப்போல் வாழ்ந்தேன்;

அழுகின்றவர்க்கு

ஆறுதல் அளிப்பவன் போல் இருந்தேன்.


அதிகாரம் 30

யோபின் தற்போதைய துன்பநிலை


1ஆனால், இன்று என்னை,

என்னைவிட இளையோர்

ஏளனம் செய்கின்றனர்;

அவர்களின் தந்தையரை என் மந்தையின்

நாய்களோடு இருத்தவும் உடன் பட்டிரேன்.

2எனக்கு அவர்களின் கைவன்மையால்

என்ன பயன்? அவர்கள்தாம்

ஆற்றல் இழந்து போயினரே?

3அவர்கள் பட்டினியாலும் பசியாலும்

மெலிந்தனர்; வறண்டு, இருண்டு

அழிந்த பாலைக்கு ஓடினர்.

4அவர்கள் உப்புக்கீரையைப்

புதரிடையே பறித்தார்கள்;

காட்டுப் பூண்டின் வேரே அவர்களின் உணவு.

5மக்கள் அவர்களைத்

தம்மிடமிருந்து விரட்டினர்;

கள்வரைப் பிடிக்கத் கத்துவதுபோல்

அவர்களுக்குச் செய்தனர்.

6ஓடைகளின் உடைப்புகளிலும்

நிலவெடிப்புகளிலும் பாறைப்பிளவுகளிலும்

அவர்கள் வாழ்ந்தனர்.

7புதர்களின் நடுவில் அவர்கள் கத்துவர்;

முட்செடியின் அடியில் முடங்கிக் கிடப்பர்.

8மடையனின் மக்கள் பெயரில்லாப் பிள்ளைகள்;

அவர்கள் நாட்டிலிருந்து விரட்டப்பட்டனர்.

9இப்பொழுதோ, அவர்களுக்கு நான்

வசைப்பாட்டு ஆனேன்;

அவர்களுக்கு நான் பழமொழியானேன்.

10என்னை அவர்கள் அருவருக்கின்றனர்;

என்னைவிட்டு விலகிப் போகின்றனர்;

என்முன் காறித் துப்பவும்

அவர்கள் தயங்கவில்லை.

11என் வில்லின் நாணைக் கடவுள் தளர்த்தி,

என்னைத் தாழ்த்தியதால்,

என்முன் அவர்கள் கடிவாளம் அற்றவராயினர்.

12என் வலப்பக்கம் கும்பல் கூடுகின்றது;

என்னை நெட்டித் தள்ளுகின்றது;

அழிவுக்கான வழிகளை

எனக்கெதிராய் வகுத்தது.

13எனக்கு அவர்கள் குழி தோண்டுகின்றனர்;

என் அழிவை விரைவுபடுத்துகின்றனர்;

அவர்களைத் தடுப்பார் யாருமில்லை.

14அகன்ற உடைப்பில் நுழைவது போலப்

பாய்கின்றனர்; இடிபாடுகளுக்கு இடையில்

அலைபோல் வருகின்றனர்.

15பெருந்திகில் மீண்டும் என்னைப் பிடித்தது;

என் பெருமை காற்றோடு போயிற்று;

முகிலென மறைந்தது என் சொத்து.

16இப்பொழுதோ, என் உயிர்

போய்க்கொண்டே இருக்கின்றது;

இன்னலின் நாள்கள் என்னை இறுக்குகின்றன.

17இரவு என் எலும்புகளை உருக்குகின்றது;

என்னை வாட்டும் வேதனை ஓய்வதில்லை.

18நோயின் கொடுமை என்னை உருக்குலைத்தது;

கழுத்துப்பட்டை போல்

என்னை ஒட்டிக்கொண்டது.

19கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்;

புழுதியும் சாம்பலும்போல் ஆனேன்.

20நான் உம்மை நோக்கி மன்றாடினேன்.

ஆனால், நீர் எனக்குப் பதில் அளிக்கவில்லை,

நான் உம்முன் நின்றேன்;

நீர் என்னைக் கண்ணோக்கவில்லை.

21கொடுமையுள்ளவராய் என்மட்டில் மாறினீர்;

உம் கை வல்லமையால்

என்னைத் துன்புறுத்துகின்றீர்;

22என்னைத் தூக்கிக் காற்றில் பறக்கவிட்டீர்;

புயலின் சீற்றத்தால் என்னை அலைக்கழித்தீர்.

23ஏனெனில், சாவுக்கும்,

வாழ்வோர் அனைவரும் கூடுமிடத்திற்கும்

என்னைக் கொணர்வீர் என அறிவேன்.

24இருப்பினும், அழிவின் நடுவில்

ஒருவர் உதவிக்கு அலறும்பொழுது,

அவல நிலையில் அவர் இருக்கும்பொழுது,

எவர் அவருக்கு எதிராகக்

கையை உயர்த்துவார்?

25அவதிபட்டவருக்காக நான் அழவில்லையா?

ஏழைக்காக என் உள்ளம் இளகவில்லையா?

26நன்மையை எதிர்பார்த்தேன்; தீமை வந்தது.

ஒளிக்குக் காத்திருந்தேன்; இருளே வந்தது.

27என் குலை நடுங்குகிறது, அடங்கவில்லை;

இன்னலின் நாள்கள்

எனை எதிர்கொண்டு வருகின்றன.

28கதிரோன் இன்றியும்

நான் கருகித் திரிகிறேன்; எழுகிறேன்;

மன்றத்தில் அழுகிறேன் உதவிக்கு.

29குள்ள நரிக்கு உடன்பிறப்பானேன்;

நெருப்புக் கோழிக்குத் தோழனும் ஆனேன்.

30என் தோல் கருகி உரிகின்றது;

என் எலும்புகள் வெப்பத்தால் தீய்கின்றன.

31என் யாழின் ஓசை புலம்பலாயிற்று;

என் குழலின் ஒலி அழுகையாயிற்று.


அதிகாரம் 31

தாம் குற்றமற்றவர் என்பதை யோபு விளக்குதல்


1கண்களோடு நான் உடன்படிக்கை

செய்துகொண்டேன்; பின்பு,

கன்னி ஒருத்தியை எப்படி நோக்குவேன்?

2வானின்று கடவுள் வழங்கும் பங்கென்ன?



விசும்பினின்று எல்லாம் வல்லவர்

விதிக்கும் உரிமையென்ன?

3தீயோர்க்கு வருவது கேடு அல்லவா?

கொடியோர்க்கு வருவது அழிவு அல்லவா?

4என் வழிகளை அவர் பார்ப்பதில்லையா?

என் காலடிகளை அவர்

கணக்கிடுவதில்லையா?

5பொய்ம்மையை நோக்கி நான் போயிருந்தால்,

வஞ்சகத்தை நோக்கி

என் காலடி விரைந்திருந்தால்,

6சீர்தூக்கும் கோலில் எனை அவர்

நிறுக்கட்டும்; இவ்வாறு கடவுள்

என் நேர்மையை அறியட்டும்.

7நெறிதவறி என் காலடி போயிருந்தால்,

கண்ணில் பட்டதையெல்லாம்

என் உள்ளம் நாடியிருந்தால்,

என் கைகளில் கறையேதும் படிந்திருந்தால்,

8நான் விதைக்க,

இன்னொருவர் அதனை உண்ணட்டும்;

எனக்கென வளர்பவை

வேரொடு பிடுங்கப்படட்டும்.

9பெண்ணில் என் மனம்

மயங்கியிருந்திருந்தால்;

பிறரின் கதவருகில் காத்துக்கிடந்திருந்தால்,

10என் மனைவி

மற்றொருவனுக்கு மாவரைக்கட்டும்;

மற்றவர்கள் அவளோடு படுக்கட்டும்.

11ஏனெனில், அது தீச்செயல்;

நடுவரின் தண்டனைக்குரிய பாதகம்.

12ஏனெனில் படுகுழிவரை சுட்டெரிக்கும்

நெருப்பு அது; வருவாய் அனைத்தையும்

அடியோடு அழிக்கும் தீ அது.

13என் வேலைக்காரனோ, வேலைக்காரியோ

எனக்கெதிராய் வழக்குக் கொணரும்போது

நான் அதைத் தட்டிக் கழித்திருந்தால்,

14இறைவன் எனக்கெதிராய் எழும்போது

நான் என்ன செய்வேன்?

அவர் என்னிடம் கணக்குக் கேட்டால்

நான் என்ன பதிலளிப்பேன்?

15கருப்பையில் என்னை உருவாக்கியவர்தாமே

அவனையும் உருவாக்கினார்.

கருப்பையில் எங்களுக்கு வடிவளித்தவர்

அவர் ஒருவரே அல்லவோ?

16ஏழையர் விரும்பியதை ஈய

இணங்காது இருந்தேனா?

கைப்பெண்டிரின் கண்கள்

பூத்துப்போகச் செய்தேனா?

17என் உணவை நானே தனித்து உண்டேனா?

தாய் தந்தையற்றோர்

அதில் உண்ணாமல் போயினரா?

18ஏனெனில், குழந்தைப் பருவமுதல்

அவர் என்னைத் தந்தைபோல் வளர்த்தார்

; என் தாய்வயிற்றிலிருந்து என்னை வழி நடத்தினார்.

19ஆடையில்லாமல் எவராவது அழிவதையோ

போர்வையின்றி ஏழை எவராவது இருந்ததையோ

பார்த்துக்கொண்டு இருந்தேனா?

20என் ஆட்டுமுடிக் கம்பளியினால்

குளிர்போக்கப்பட்டு, அவர்களின் உடல்

என்னைப் பாராட்டவில்லையா?

21எனக்கு மன்றத்தில் செல்வாக்கு உண்டு

எனக்கண்டு, தாய் தந்தையற்றோர்க்கு

எதிராகக் கைஓங்கினேனா?

22அப்படியிருந்திருந்தால், என் தோள்மூட்டு

தோளிலிருந்து நெகிழ்வதாக!

முழங்கை மூட்டு முறிந்து கழல்வதாக!

23ஏனெனில், இறைவன் அனுப்பும் இடர்

எனக்குப் பேரச்சம்; அவர் மாட்சிக்குமுன்

என்னால் எதுவும் இயலாது.

24தங்கத்தில் நான் நம்பிக்கை வைத்திருந்தேனாகில்,

‘பசும்பொன் என்உறுதுணை ‘ என்று பகர்ந்திருப்பேனாகில்,

25செல்வப் பெருக்கினால், அல்லது

கை நிறையப் பெற்றதால்

. நான் மகிழ்திருப்பேனாகில்,

26சுடர்விடும் கதிரவனையும்

ஒளியில் தவழும் திங்களையும் நான் கண்டு,

27என் உள்ளம் மறைவாக மயங்கியிருந்தால்,

அல்லது, என் வாயில் கை வைத்து

முத்தமிட்டிருந்தால்,

28அதுவும் நடுவர் தீர்ப்புக்குரிய.

பழியாய் இருக்கும்; ஏனெனில்,

அது உன்னத இறைவனை நான் மறுப்பதாகும்.

29என்னை வெறுப்போரின் அழிவில்

நான் மகிழ்ந்ததுண்டா? அல்லது

அவர்கள் இடர்படும் போது இன்புற்றதுண்டா?

30சாகும்படி அவர்களைச் சபித்து,

என் வாய் பாவம் செய்ய நான் விடவில்லை.

31‘இறைச்சி உண்டு நிறைவு அடையாதவர்

யாரேனும் உண்டோ?’ என்று

என் வீட்டார் வினவாமல் இருந்ததுண்டா?

32வீதியில் வேற்றார் உறங்கியதில்லை;

ஏனெனில், வழிப்போக்கருக்கு

என் வாயிலைத் திறந்து விட்டேன்.

33என் தீச்செயலை உள்ளத்தில் புதைத்து,

என் குற்றங்களை மானிடர்போல்

மறைத்ததுண்டா?

34பெருங்கும்பலைக் கண்டு நடுங்கி,

உறவினர் இகழ்ச்சிக்கு அஞ்சி,

நான் வாளாவிருந்ததுண்டா?

கதவுக்கு வெளியே வராதிருந்தது உண்டா?

35என் வழக்கைக் கேட்க ஒருவர் இருந்தால்

எத்துணை நன்று! இதோ!

என் கையொப்பம்; எல்லாம் வல்லவர்

எனக்குப் பதில் அளிக்கட்டும்!

என் எதிராளி வழக்கை எழுதட்டும்.

36உண்மையாகவே அதை

என் தோள்மேல் தூக்கிச்செல்வேன்!

எனக்கு மணி முடியாகச் சூட்டிக்கொள்வேன்.

37என் நடத்தை முழுவதையுமே

அவருக்கு எடுத்துரைப்பேன்;

இளவரசனைப்போல்

அவரை அணுகிச் செல்வேன்.

38எனது நிலம் எனக்கெதிராயக் கதறினால்,

அதன் படைச்சால்கள் ஒன்றாக அழுதால்,

39விலைகொடாமல்

அதன் விளைச்சலை உண்டிருந்தால்,

அதன் உரிமையாளரின்



உயிரைப் போக்கியிருந்தால்,

40கோதுமைக்குப் பதில் முட்களும்,

வாற்கோதுமைக்கு பதில்

களையும் வளரட்டும்.

யோபின் மொழிகள் முடிவுற்றன.


அதிகாரம் 32

எலிகூவின் முதல் சொற்பொழிவு


(32:1-37:24)


1யோபு தம்மை நேர்மையாளராகக் கருதியதால் இந்த மூன்று மனிதர்களும் அவருடன் சொல்லாடுவதை நிறுத்திவிட்டார்கள். 2அப்பொழுது பூசியனும், இராமின் வீட்டைச் சார்ந்த பாரக்கேலின் புதல்வனுமான எலிகூ சீற்றம் அடைந்தான். 3யோபு கடவுளைவிடத் தம்மை நேர்மையாளராய்க் கருதியதால் அவர்மீது சினம் கொண்டான். மூன்று நண்பர்கள்மீதும் அவன் கோபப்பட்டான். ஏனெனில் யோபின் மீது அவர்கள் குற்றம் சாட்டினார்களேயன்றி, அதற்கான ஆதாரத்தை எடுத்துக் கூறவில்லை. 4எலிகூ யோபிடம் பேச இதுவரை காத்திருந்தான். ஏனெனில், அவனை விட அவர்கள் வயதில் முதிர்ந்தவர்கள். 5அந்த மூவரும் தகுந்த மறுமொழி தரவில்லை எனக் கண்ட எலிகூ இன்னும் ஆத்திரம் அடைந்தான். 6ஆகவே பூசியனும் பாரக்கேலின் புதல்வனுமான

எலிகூ பேசத் தொடங்கினான்;

நான் வயதில் சிறியவன்;

நீங்களோ பெரியவர். ஆகவே,

என் கருத்தை உங்களிடம் உரைக்கத்

தயங்கினேன்; அஞ்சினேன்.

7நான் நினைத்தேன்; ‘முதுமை பேசட்டும்;

வயதானோர் ஞானத்தை உணர்த்தட்டும்.’

8ஆனால், உண்மையில்

எல்லாம் வல்லவரின் மூச்சே,

மனிதரில் இருக்கும் அந்த ஆவியே

உய்த்துணர்வை அளிக்கின்றது.

9வயதானோர் எல்லாம் ஞானிகள் இல்லை;

முதியோர் நீதியை அறிந்தவரும் இல்லை.

10ஆகையால் நான் சொல்கின்றேன்;

எனக்குச் செவி கொடுத்தருள்க!

நானும் என் கருத்தைச் சொல்கின்றேன்.

11இதோ! உம் சொற்களுக்காகக்

காத்திருந்தேன்,

நீங்கள் ஆய்ந்து கூறிய வார்த்தைகளை,

அறிவார்ந்த கூற்றை நான் கேட்டேன்.

12உங்களைக் கவனித்துக் கேட்டேன்;

உங்களுள் எவரும் யோபின் கூற்று

தவறென எண்பிக்கவில்லை.

அவர் சொற்களுக்கு தக்க

பதில் அளிக்கவுமில்லை.

13எச்சரிக்கை! ‘நாங்கள் ஞானத்தைக்

கண்டு கொண்டோம்;

இறைவனே அவர்மீது வெற்றி கொள்ளட்டும்;

மனிதரால் முடியாது’ என்று சொல்லாதீர்கள்!

14என்னை நோக்கி யோபு

தம்மொழிகளைக் கூறவில்லை;

உங்கள் சொற்களில் அவருக்கு நான் பதிலளிக்கமாட்டேன்.

15அவர்கள் மலைத்துப் போயினர்;

மீண்டும் மறுமொழி உரையார்;

அவர்கள் ஒரு வார்த்தையும்

சொல்வதற்கில்லை.

16அவர்கள் பேசவில்லை;

நின்று கொண்டிருந்தாலும்

பதில் சொல்லவில்லை;

நான் இன்னும் காத்திருக்க வேண்டுமா?

17நானும் எனது பதிலைக் கூறுவேன்;

நானும் எனது கருத்தை நவில்வேன்.

18ஏனெனில், சொல்லவேண்டியவை

என்னிடம் நிறையவுள்ளன;

என் உள்ளத்தில் ஆவி என்னை உந்துகின்றது.

19இதோ! என் நெஞ்சம்

அடைபட்ட திராட்சை இரசம் போல் உள்ளது;

வெடிக்கும் புது இரசத் துருத்தி போல் உள்ளது.

20நான் பேசுவேன்; என் நெஞ்சை

ஆற்றிக் கொள்வேன்; வாய்திறந்து

நான் பதில் அளிக்க வேண்டும்.

21நான் யாரிடமும்

ஒருதலைச் சார்பாய் இருக்கமாட்டேன்;

நான் யாரையும் பொய்யாகப் புகழ மாட்டேன்.

22ஏனெனில், பசப்பிப் புகழ எனக்குத் தெரியாது;

இல்லையேல், படைத்தவரே

விரைவில் என்னை அழித்திடுவார்.


அதிகாரம் 33

யோபின் மட்டுமீறிய நம்பிக்கை


1ஆனால் இப்பொழுது, யோபே! எனக்குச் செவிகொடும்;

என் எல்லா வார்த்தைகளையும் கேளும்.

2இதோ! நான் வாய் திறந்துவிட்டேன்;

என் நாவினால் பேசுகிறேன்.

3என் உள்ளத்தின் நேர்மையை

என் சொற்கள் விளம்பும்;

அறிந்ததை உண்மையாய் இயம்பும் என் உதடுகள்.

4இறைவனின் ஆவி என்னைப் படைத்தது;

எல்லாம் வல்லவரின் மூச்சு

என்னை வாழ்விக்கின்றது.

5உம்மால் முடிந்தால் எனக்குப் பதில் சொல்லும்;

என்னோடு வழக்காட எழுந்து நில்லும்.

6இதோ! இறைவன் முன்னிலையில்

நானும் நீவிரும் ஒன்றே;

உம்மைப்போல் நானும்

களிமண்ணிலிருந்து செய்யப்பட்டவனே!

7இதோ! நீர் எனக்கு

அஞ்சி நடுங்க வேண்டியதில்லை;

நான் வலுவாக உம்மைத் தாக்கமாட்டேன்.

8உண்மையாகவே என் காதுகளில் விழ

நீர் கூறினீர்; நானும்

அம்மொழிகளின் ஒலியைக் கேட்டேன்;

9‘குற்றமில்லாத் தூயவன் நான்;

மாசற்ற வெண் மனத்தான் யான்.

10இதோ! அவர் என்னில்

குற்றம்காணப் பார்க்கின்றார்;

அவர் என்னை எதிரியாக எண்ணுகின்றார்.

11மரத் துளையில் என் கால்களை மாட்டுகின்றார்;

என் காலடிகளையெல்லாம் கவனிக்கின்றார்’.✠

12இதோ! இது சரியென்று;

பதில் உமக்குக் கூறுகிறேன்;

கடவுள் மனிதரைவிடப் பெரியவர்.

13‘என் சொல் எதற்கும்

அவர் பதில் கூறுவதில்லை’ என

ஏன் அவரோடு வழக்காடுகின்றீர்?

14ஏனெனில், இறைவன் முதலில்

ஒருவகையில் இயம்புகின்றார்;

இரண்டாவது வேறுவகையில் விளம்புகின்றார்;

அதை யாரும் உணர்வதில்லை.

15கனவில், இரவின் காட்சியில்

ஆழ்துயில் மனிதரை ஆட்கொள்கையில்;

படுக்கையில் அவர்கள் அயர்ந்து உறங்குகையில்,✠

16அவர் மனிதரின் காதைத் திறக்கின்றார்;

எச்சரிக்கை மூலம் அச்சுறுத்துகின்றார்.

17இவ்வாறு மாந்தரிடமிருந்து

தீவினையை நீக்குகின்றார்;

மனிதரிடமிருந்து

ஆணவத்தை அகற்றுகின்றார்.

18அவர்களின் ஆன்மாவைக் குழியிலிருந்தும்,

உயிரை வாளின் அழிவிலிருந்தும்

காக்கின்றார்.

19படுக்கையில் படும் வேதனையினாலும்

எலும்பில் வரும் தீரா வலியினாலும்

அவர்கள் கண்டித்துத்

திருத்தப்படுகின்றார்கள்.

20அப்போது அவர்களின் உயிர் உணவையும்,

அவர்களின் ஆன்மா அறுசுவை

உண்டியையும் அருவருக்கும்.

21அவர்களின் சதை கரைந்து மறையும்;

காணப்படா அவர்களின் எலும்புகள்

வெளியே தெரியும்.

22அவர்களின் ஆன்மா குழியினையும்

அவர்களின் உயிர் அழிப்போரையும் அணுகும்.

23மனிதர் சார்பாக இருந்து,

அவர்களுக்கு நேர்மையானதைக் கற்பிக்கும்

ஓர் ஆயிரத்தவராகிய வானதூதர்

24அவர்களின் மீது இரங்கி, “குழியில் விழாமல்

இவர்களைக் காப்பாற்றும்;

ஏனெனில், இவர்களுக்கான

மீட்டுத் தொகை என்னிடமுள்ளது;

25இவர்களின் மேனி

இளைஞனதைப்போல் ஆகட்டும்;

இவர்கள் இளமையின்

நாள்களுக்குத் திரும்பட்டும்”

26என்று கடவுளிடம் மன்றாடினால்,

அவர் அவர்களை ஏற்றுக் கொள்வார்;

அவர்தம் முகத்தை மகிழ்ச்சியோடு

அவர்கள் காணச் செய்வார்;

அவர்களுக்குத் தம் மீட்பை மீண்டும் அளிப்பார்.

27அவர்கள் மனிதர் முன்

இவ்வாறு அறிக்கையிடுவர்;

‘நாங்கள் பாவம் செய்தோம்;

நேரியதைக் கோணலாக்கினோம்;

இருப்பினும் அதற்கேற்ப

நாங்கள் தண்டிக்கப்படவில்லை;

28எங்கள் ஆன்மாவைக்

குழியில் விழாது அவர் காத்தார்;

எங்கள் உயிர் ஒளியைக் காணும்.’

29இதோ இறைவன் இவற்றையெல்லாம்

மனிதர்க்கு மீண்டும் மீண்டும் செய்கிறார்.

30இவ்வாறு குழியிலிருந்து

அவர்களின் ஆன்மாவைக் காப்பாற்றுகின்றார்;

வாழ்வோரின் ஒளியை

அவர்கள் காணச் செய்கின்றார்.

31யோபே! கவனியும்! எனக்குச் செவிகொடும்;

பேசாதிரும்; நான் பேசுவேன்.

32சொல்வதற்கு இருந்தால்,

எனக்குப் பதில் சொல்லும்; பேசுக!

உம்மை நேர்மையுள்ளவரெனக் காட்டவே

நான் விழைகின்றேன்.

33இல்லையெனில், நீர் எனக்குச் செவி சாயும்;

பேசாதிரும்; நான் உமக்கு

ஞானத்தைக் கற்பிப்பேன்.


33:11 யோபு 13:27. 33:15 யோபு 4:13.


அதிகாரம் 34

எலிகூவின் இரண்டாம் சொற்பொழிவு


(32:1- 37:24)


1எலிகூ தொடர்ந்து கூறினான்:

2ஞானிகளே!

என் சொற்களைக் கேளுங்கள்;

அறிஞர்களே! எனக்குச் செவிகொடுங்கள்.

3நாக்கு உணவைச் சுவைத்து அறிவதுபோல,

காது சொற்களைப் பகுத்துணர்கின்றது.✠

4நேர்மை எதுவோ அதை நமக்கு

நாமே தேர்ந்துகொள்வோம்;

நல்லது எதுவோ அதை

நமக்குள்ளேயே முடிவு செய்வோம்.

5ஆனால் யோபு சொல்லியுள்ளார்;

“நான் நேர்மையானவன்; ஆனால்

இறைவன் என் உரிமையைப்

பறித்துக் கொண்டார்,

6நான் நேர்மையாக இருந்தும்

என்னைப் பொய்யனாக்கினார்;

நான் குற்றமில்லாதிருந்தும்

என் புண் ஆறாததாயிற்று.’

7யோபைப் போன்று இருக்கும் மனிதர் யார்?

நீர்குடிப்பதுபோல்

அவர் இறைவனை இகழ்கின்றார்;

8தீங்கு செய்வாரோடு தோழமை கொள்கின்றார்;

கொடியவருடன் கூடிப் பழகுகின்றார்.

9ஏனெனில், அவர் சொல்லியுள்ளார்;

‘கடவுளுக்கு இனியவராய் நடப்பதானால்

எந்த மனிதருக்கும் எப்பயனுமில்லை.’

10ஆகையால், அறிந்துணரும்

உள்ளம் உடையவர்களே! செவிகொடுங்கள்!

தீங்கிழைப்பது இறைவனுக்கும்,

தவறு செய்வது எல்லாம் வல்லவருக்கும்

தொலைவாய் இருப்பதாக!

11ஏனெனில், ஒருவரின் செயலுக்கேற்ப

அவர் கைம்மாறு செய்கின்றார்;

அவரது நடத்தைக்கேற்ப நிகழச்செய்கின்றார்.✠

12உண்மையாகவே, கொடுமையை

இறைவன் செய்யமாட்டார்;

நீதியை எல்லாம் வல்லவர் புரட்டமாட்டார்.

13பூவுலகை அவர் பொறுப்பில் விட்டவர் யார்?

உலகனைத்தையும் அவரிடம்

ஒப்படைத்தவர் யார்?

14அவர்தம் ஆவியைத்

தம்மிடமே எடுத்துக்கொள்வதாக இருந்தால்,

தம் உயிர் மூச்சை

மீண்டும் பெற்றுக் கொள்வதாய் இருந்தால்,

15ஊனுடம்பு எல்லாம் ஒருங்கே ஒழியும்;

மனிதர் மீண்டும் மண்ணுக்குத் திரும்புவர்;

16உமக்கு அறிவிருந்தால் இதைக் கேளும்;

என் சொற்களின் ஒலிக்குச் செவிகொடும்.

17உண்மையில், நீதியை வெறுப்பவரால்

ஆட்சி செய்ய இயலுமா?

வாய்மையும் வல்லமையும் உடையவரை

நீர் பழிப்பீரோ?

18அவர் வேந்தனை நோக்கி

“வீணன்” என்றும்

கோமகனைப் பார்த்து ‘கொடியோன்’

என்றும் கூறுவார்.

19அவர் ஆளுநனை ஒருதலைச்சார்பாய்

நடத்த மாட்டார்; ஏழைகளை விடச்

செல்வரை உயர்வாய்க் கருதவுமாட்டார்;

ஏனெனில், அவர்கள் அனைவரும்

அவர் கைவேலைப்பாடுகள் அல்லவா?

20நொடிப்பொழுதில் அவர்கள் மடிவர்;

நள்ளிரவில் நடுக்கமுற்று அழிவர்;

ஆற்றல் மிக்காரும்

மனித உதவியின்றி அகற்றப்படுவர்.

21ஏனெனில், அவரின் விழிகள்

மனிதரின் வழிகள்மேல் உள்ளன;

அவர்களின் அடிச்சுவடுகளை

அவர் காண்கிறார்.

22கொடுமை புரிவோர்

தங்களை ஒளித்துக்கொள்ள

இருளும் இல்லை; இறப்பின் நிழலும் இல்லை.

23இறைவன்முன் சென்று கணக்குக் கொடுக்க,

எவருக்கும் அவர் நேரம் குறிக்கவில்லை.

24வலியோரை நொறுக்குவதற்கு அவர்

ஆய்ந்தறிவு செய்யத்தேவையில்லை,

அன்னார் இடத்தில் பிறரை அமர்த்துவார்.

25அவர்களின் செயலை அவர் அறிவார்;

ஆதலால் இரவில் அவர்களை வீழ்த்துவார்;

அவர்களும் நொறுக்கப்படுவர்.

26அவர்கள் கொடுஞ்செயலுக்காக அவர்

மக்கள் கண்முன் அவர்களை வீழ்த்துவார்.

27ஏனெனில், அவரைப் பின்பற்றாமல்

அவர்கள் விலகினர்;

அவர்தம் நெறியனைத்தையும்

அவர்கள் பொருட்படுத்தவில்லை;

28ஏழையின் குரல் அவருக்கு எட்டச் செய்தனர்;

அவரும் ஒடுக்கப்பட்டவர் குரலைக் கேட்டார்.

29அவர் பேசாதிருந்தால்,

யார் அவரைக் குறைகூற முடியும்?

அவர் தம் முகத்தை மறைத்துக் கொண்டால்,

யார்தான் அவரைக் காணமுடியும்?

நாட்டையும் தனி மனிதரையும்

அவரே கண்காணிக்கின்றார்.

30எனவே, இறைப்பற்றில்லாதவரோ

மக்களைக் கொடுமைப் படுத்துபவரோ

ஆளக்கூடாது.

31எவராவது இறைவனிடம்

இவ்வாறு கேட்பதுண்டா;

‘நான் தண்டனை பெற்றுக் கொண்டேன்;

இனி நான் தவறு செய்யமாட்டேன்.

32தெரியாமல் செய்ததை

எனக்குத் தெளிவாக்கும்;

தீங்கு செய்திருந்தாலும்,

இனி அதை நான் செய்யேன்.’

33நீர் உம் தவற்றை உணர மறுக்கும்போது,

கடவுள் உம் கருத்துக்கேற்ப

கைம்மாறு வழங்கவேண்டுமா?

நீர் தான் இதைத் தீர்மானிக்க வேண்டும்;

நான் அல்ல; ஆகையால்

உமக்குத் தெரிந்ததைக் கூறும்.

34புரிந்துகொள்ளும் திறன் உடையவரும்

எனக்குச் செவி சாய்ப்பவர்களில்

ஞானம் உள்ளவரும் இவ்வாறு சொல்வர்;

35யோபு புரியாமல் பேசுகின்றார்;

அவர் சொற்களும் பொருளற்றவை.

36யோபு இறுதிவரை சோதிக்கப்படவேண்டுமா?

ஏனெனில், அவரின் மொழிகள்

தீயோருடையவைபோல் உள்ளன.

37யோபு தாம் பாவம் செய்ததோடு

கிளர்ச்சியும் செய்கின்றார்;

ஏளனமாய் நம்மிடையே அவர்

கை தட்டுகின்றார்; இறைவனுக்கு எதிராக

வார்த்தைகளைக் கொட்டுகின்றார்.


34:3 யோபு 12:11. 34:11 திபா 62:12.


அதிகாரம் 35

அனைத்தையும் கடந்தவர் கடவுள்


1எலிகூ தொடர்ந்து கூறினான்:

2‘நான் இறைவன்முன் நேர்மை

யானவன்’ என நீர் சொல்வது

சரியென நினைக்கின்றீரா?

3‘நான் பாவம் செய்யாததனால்



எனக்கு என்ன ஆதாயம்?

எனக்கு என்ன நன்மை?” என நீர் கேட்கின்றீர்.

4உமக்கும் உம் நண்பர்களுக்கும் சேர்த்து

நான் பதில் அளிக்கின்றேன்;

5வானங்களைப் பாரும்; கவனியும்; இதோ!

உம்மைவிட உயரேயிருக்கும் முகில்கள்!

6நீர் பாவம் செய்தால்,

அவருக்கெதிராய் என்ன சாதிக்கின்றீர்?

நீர் மிகுதியான குற்றங்களைச் செய்வதால்

அவருக்கு என்ன செய்து விடுகின்றீர்?

7நீர் நேர்மையாய் இருப்பதால்

இவருக்கு நீர் அளிப்பதென்ன?

அல்லது உம் கையிலிருந்து அவர் பெறுவதென்ன?

8உம் கொடுமை உம்மைப்போன்ற

மனிதரைக் துன்புறுத்துகின்றது;

உம் நேர்மையும் மானிடர்க்கே

நன்மை பயக்கின்றது.

9கொடுமைகள் குவிய அவர்கள் கூக்குரலிடுவர்;

வலியவர் கைவன்மையால் கத்திக் கதறுவர்.

10ஆனால் இவ்வாறு எவரும் சொல்வதில்லை;

‘எங்கே என்னைப் படைத்த கடவுள்?

இரவில் பாடச் செய்பவர் எங்கே?

11நானிலத்தின் விலங்குகளைவிட

நமக்கு அதிகமாய்க் கற்பிக்கின்றவரும்

வானத்துப் புள்ளினங்களை விட

நம்மை ஞானி ஆக்குகின்றவரும் அவரன்றோ?”

12அங்கே அவர்கள் கூக்குரலிடுகின்றனர்;

பொல்லார் செருக்கின் பொருட்டு

அவர் பதில் ஒன்றும் சொல்லார்.

13வீண் வேண்டலை

இறைவன் கண்டிப்பாய்க் கேளார்;

எல்லாம் வல்லவர் அதைக்

கவனிக்கவும் மாட்டார்.

14இப்படியிருக்க,

‘நான் அவரைப் பார்க்கவில்லை;

தீர்ப்பு அவரிடம் இருக்கின்றது.

நான் அவருக்காகக் காத்திருக்கின்றேன்;’

என்று நீர் கூறும்போது,

எப்படி உமக்குச்செவிகொடுப்பார்?

15இப்பொழுதோ,

‘கடவுளின் சினம் தண்டிப்பதில்லை;

மனிதனின் மடமையை அவ்வளவாய்

அவர் நோக்குவதில்லை’ என எண்ணி,

16யோபு வெற்றுரை விளம்புகின்றார்;

அறிவில்லாமல் சொற்களைக் கொட்டுகின்றார்.


35:6-8 யோபு 22:2-3.


அதிகாரம் 36

யோபினுடைய துன்பங்களின் உட்பொருள்


1எலிகூ தொடர்ந்து பேசலானான்:

2சற்றுப் பொறும்;

காட்டுவேன் உமக்கு கடவுள் சார்பாய்

நான் கூற வேண்டியவற்றை.

3தொலையிலிருந்து

என் அறிவைக் கொணர்வேன்;

எனை உண்டாக்கியவர்க்கு

நேர்மையை உரித்தாக்குவேன்.

4ஏனெனில், மெய்யாகவே

பொய்யன்று என் சொற்கள்;

அறிவுநிறைந்த நான் உம் நடுவே உள்ளேன்.

5இதோ! இறைவன் வல்லவர்;

எவரையும் புறக்கணியார்;

அவர் வல்லமையும் ஞானமும் கொண்டவர்.

6கொடியவரை அவர் வாழவிடார்;

ஒடுக்கப்படுவோர்க்கு உரிமையை வழங்குவார்;

7நேர்மையாளர்மீது கொண்ட

பார்வையை அகற்றார்;

அரசர்களை அரியணையில் அமர்த்துகின்றார்;

என்றென்றும் அவர்கள் ஏற்றமடைவர்.

8ஆனால் அவர்கள்

சங்கிலியால் கட்டுண்டாரெனில்,

வேதனையின் கயிற்றில் அகப்பட்டாரெனில்,

9அவர்கள் செய்ததையும் மீறியதையும்,

இறுமாப்புடன் நடந்ததையும்

எடுத்து இயம்புவார்.

10அறிவுரைகளுக்கு

அவர்கள் செவியைத் திறப்பார்;

தீச்செயலிலிருந்து திரும்புமாறு

ஆணையிடுவார்.

11அவர்கள் கேட்டு, அவர்க்குப் பணி புரிந்தால்,

வளமாய்த் தங்கள் நாள்களையும்

இன்பமாய்த் தங்கள் ஆண்டுகளையும் கழிப்பர்.

12செவிகொடுக்காவிடில் வாளால் மடிவர்.

அறிவின்றி அவர்கள் அழிந்துபோவர்.

13தீயமனத்தோர் வெஞ்சினம் வளர்ப்பர்;

அவர்களை அவர் கட்டிப்போடுகையில்

உதவிக்காகக் கதறமாட்டார்.

14அவர்கள் இளமையில் மடிவர்;

காமுகரோடு அவர்கள் வாழ்வு முடியும்.

15துன்புற்றோரைத் துன்பத்தால் காப்பார்;

வேதனையால் அவர்கள் காதைத் திறப்பார்.

16இடுக்கண் வாயினின்று

உங்களை இழுத்துக் காத்தார்;

ஒடுக்கமற்ற பரந்த வெளியில் சேர்த்தார்.

உங்கள் பந்தியை ஊட்டமுள உணவால் நிரப்பினார்.

17பொல்லார்க்குரிய தீர்ப்பு உங்கள்மீது வந்தது;

தீர்ப்பும் நீதியும் உங்களைப் பற்றிப் பிடித்தன.

18வளமையால் வழிபிறழாமல்

பார்த்துக்கொள்ளும்;

நிறைந்த கையூட்டால் நெறிதவறாதேயும்.

19உம் நிறைந்த செல்வமும்

வல்லமையின் முழு ஆற்றலும்

இன்னலில் உமக்கு உதவுமா?

20இருந்த இடத்திலேயே மக்கள் மடியும்

இரவுக்காக ஏங்காதீர்.

21துன்பத்தைவிட தீச்செயலையே

நீர் தேர்ந்துகொண்டீர்; எனவே

அதற்குத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்.


கடவுளின் ஆற்றலுக்குப் புகழ்ப்பாடல்


22இதோ! ஆற்றலில் இறைவன் உயர்ந்தவர்;

அவருக்கு நிகரான ஆசிரியர் உளரோ?

23அவர் நெறியை அவர்க்கு வகுத்தவர் யார்?

அவர்க்கு ‘நீர் வழிதவறினிர்” எனச்

சொல்ல வல்லவர் யார்?

24அவர் செயலைப் புகழ்வதில் கருத்தாயிரும்.

மாந்தர் அதனைப் பாடிப்போயினர்.

25மனித இனம் முழுவதும் அதைக் கண்டது;

மனிதன் தொலையிலிருந்தே

அதை நோக்குவான்.

26இதோ! இறைவன் பெருமை மிக்கவர்;

நம் அறிவுக்கு அப்பாற்பட்டவர்;

அவர்தம் ஆண்டுகள் எண்ணற்றவை;

கணக்கிட முடியாதவை.

27நீர்த்துளிகளை அவர்

ஆவியாக இழுக்கின்றார்; அவற்றை

மழையாக வடித்துக் கொடுக்கின்றார்.

28முகில்கள் அவற்றைப் பொழிகின்றன;

மாந்தர்மேல் அவற்றை

மிகுதியாகப் பெய்கின்றன.

29பரவும் முகில்களையும்

அவர்தம் மணிப்பந்தலின்

ஆர்ப்பரிப்பினையும் ஆய்ந்தறிபவர் யார்?

30இதோ! தம்மைச் சுற்றி

மின்னல் ஒளிரச் செய்கின்றார்.

கடலின் அடித்தளத்தை மூடுகின்றார்.

31இவற்றால், மக்களினங்கள்மீது

தீர்ப்பளிக்கின்றார்;

அதிகமாய் உணவினை அளிக்கின்றார்.

32மின்னலைத் தம் கைக்குள் வைக்கின்றார்;

இலக்கினைத் தாக்க ஆணை இடுகின்றார்.

33இடிமுழக்கம் அவரைப்பற்றி எடுத்துரைக்கும்;

புயல் காற்று அவர் சீற்றத்தைப் புகலும்.


அதிகாரம் 37

1இதைக்கண்டு நடுங்குகிறது

என் இதயம்;

தன் இடம் பெயர்ந்து அது துடிக்கின்றது.

2அவரது குரலின் இடியோசையையும்

அவர் வாயினின்று வரும் முழக்கத்தையும்

கவனமுடன் கேளுங்கள்.

3விசும்பின்கீழ் மின்னலை

மிளிரச் செய்கின்றார்; மண்ணகத்தின்

எல்லைவரை செல்ல வைக்கின்றார்.

4அதனை அடுத்து அதிரும் அவர் குரல்;

பேரொலியில் அவர் முழங்கிடுவாரே;

மின்னலை நிறுத்தார்

அவர்தம் குரல் ஒலிக்கையிலே.

5கடவுள் வியத்தகு முறையில்

தம் குரலால் முழங்குகின்றார்;

நம் அறிவுக்கு எட்டாத

பெரியனவற்றைச் செய்கின்றார்.

6ஏனெனில், உறைபனியை

‘மண்மிசை விழு” என்பார்;

மாரியையும் பெருமழையையும்

‘உரத்துப் பெய்க” என்பார்.

7எல்லா மனிதரும் அவரது கைத்திறனை அறிய,

எல்லா மாந்தரின் கையையும் கட்டிப்போடுவார்.

8பின்னர் விலங்கு தன் பொந்தினுள் நுழையும்;

தம் குகைக்குள் அது தங்கும்.

9அவர்தம் கிடங்கிலிருந்து சுழற்காற்றும்

வாடைக்காற்றிலிருந்து குளிரும் கிளம்பும்.

10கடவுளின் மூச்சால் பனிக்கட்டி உறையும்;

பரந்த நீர்நிலை உறைந்து போகும்.

11அவர் முகிலில் நீர்த்துளிகளைத் திணிப்பார்;

கொண்டல் அவர் ஒளியைத் தெறிக்கும்.

12மேகம் அவரது ஆணைப்படியே

சுழன்று ஆடும்;

அவர் ஆணையிடுவதை எல்லாம்

மண்மிசை செய்யும்.

13கண்டிக்கவோ, கருணைக்காட்டவோ

இவற்றை உலகில் அவர் நிகழச்செய்கின்றார்.

14யோபே! செவிகொடும்;

இறைவனின் வியத்தகு செயல்களை

நின்று நிதானித்துக் கவனியும்.

15கடவுள் எவ்வாறு அவற்றை

ஒழுங்குபடுத்துகின்றார் என்றோ,

அவர்தம் முகில்கள் எப்படி மின்னலைத்

தெறிக்கின்றன என்றோ அறிவீரா?

16முகில்கள் எவ்வாறு மிதக்கின்றன என

உமக்குத் தெரியுமா?

அவை நிறை அறிவுள்ளவரின்

வியத்தகு செயல்கள் அல்லவா!

17தென்திசைக் காற்றினால்

நிலம் இறுக்கப்படுகையில்

உம் உடையின் வெப்பத்தால்

நீவிர் புழுங்குகின்றீர்.

18வார்ப்படக் கண்ணாடியை ஒத்த

திண்ணிய விசும்பை

அவரோடு உம்மால் விரிக்கக்கூடுமோ?

19நாம் அவர்க்கு என்ன சொல்லக்கூடும்

என்று கற்பியும்; இருளின் முகத்தே

வகைதெரியாது உழல்கின்றோம்.

20‘நான் பேசுவேன்” என்று

எவர் அவரிடம் சொல்வார்?

அவ்வாறு பேசி எவர் அழிய ஆசிப்பார்?

21காற்று வீசி கார்முகிலைக் கலைத்தபின்

வானில் கதிரவன் ஒளிரும்போது,

மனிதர் அதனைப் பார்க்க ஒண்ணாதே!

22பொன்னொளி வடதிசையிலிருந்து வரும்;

அஞ்சுதற்குரிய மாட்சி கடவுளிடம் விளங்கும்.

23எல்லாம் வல்லவரை

நாம் கண்டுபிடிக்க முடியாது;

ஆற்றலிலும் நீதியிலும் உயர்ந்தவர் அவரே!

நிறைவான நீதியை மீறுபவர் அல்ல.

24ஆதலால், மாந்தர் அவர்க்கு அஞ்சுவர்;

எல்லாம் தெரியும் என்போரை

அவர் திரும்பியும் பாரார்.


அதிகாரம் 38

ஆண்டவரின் முதல் சொற்பொழிவு


1ஆண்டவர் சூறாவளியினின்று

யோபுக்கு அருளிய பதில்:

2அறிவற்ற சொற்களால் என் அறிவுரையை

இருட்டடிப்புச் செய்யும் இவன் யார்?

3வீரனைப்போல் இடையினை இறுக்கிக்கட்டு;

வினவுவேன் உன்னிடம்,

விடை எனக்களிப்பாய்.

4மண்ணகத்திற்கு நான்

கால்கோள் இடும்போது நீ எங்கு இருந்தாய்?

உனக்கு அறிவிருக்குமானால் அறிவிப்பாயா?

5அதற்கு அளவு குறித்தவர் யார்?

உனக்குத்தான் தெரியுமே!

அதன்மேல் நூல் பிடித்து அளந்தவர் யார்?

6எதன்மேல் அதன் தூண்கள்

ஊன்றப்பட்டன? அல்லது யார் அதன்

மூலைக் கல்லை நாட்டியவர்?

7அப்போது வைகறை விண்மீன்கள்

ஒன்றிணைந்து பாடின!

கடவுளின் புதல்வர் களிப்பால் ஆர்ப்பரித்தனர்!

8கருப்பையினின்று கடல்

உடைப்பெடுத்து ஓடியபொழுது

அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்?

9மேகத்தை அதற்கு மேலாடையாக்கி,

காரிருளைப் பொதிதுணியாக்கி,

10எல்லைகளை நான் அதற்குக் குறித்து

கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி

11‘இதுவரை வருவாய், இதற்குமேல் அல்ல;

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!”

என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?

12உன் வாழ்நாளில் காலைப்பொழுதுக்குக்

கட்டளையிட்டதுண்டா?

வைகறையைத் தன் இடமறிய வைத்ததுண்டா?

13இவ்வாறு, அது வையக விளிம்பைத்

தொட்டிழுத்து, பொல்லாதவரை

அதனுளிருந்து உதறித்தள்ளுமே!

14முத்திரையால் களிமண் உருப்பெறுவதுபோல்

மண்ணகம் வண்ணம் ஏற்றிய ஆடையாயிற்று.

15அப்போது, கொடியவரிடமிருந்து

ஒளி பறிக்கப்படும்;

அடிக்க ஓங்கியகை முறிக்கப்படும்.

16கடலின் ஊற்றுவரை நீ போனதுண்டா?

ஆழியின் அடியில் நீ உலவினதுண்டோ?

17சாவின் வாயில்கள்

உனக்குக் காட்டப்பட்டனவோ?

இருள் உலகின் கதவுகளைக்

கண்டதுண்டோ நீ?

18அவனியின் பரப்பை நீ ஆய்ந்தறிந்ததுண்டா?

அறிவிப்பாய் அதிலுள்ள

அனைத்தையும் அறிந்திருந்தால்!

19ஒளி உறைவிடத்திற்கு வழி எதுவோ!

இருள் இருக்கும் இருப்பிடம் எங்கேயோ?

20அதன் எல்லைக்கு

அதனை அழைத்துப் போவாயோ?

அதனுறைவிடத்திற்கு நேர்வழி அறிவாயோ!

21ஆம், அறிவாய்;

அன்றே நீ பிறந்தவனன்றோ! ஆமாம்;

ஆண்டுகளும் உனக்கு அதிகமன்றோ!

22உறைபனிக் கிடங்கினுள் புகுந்ததுண்டோ?

23இடுக்கண் வேளைக்கு எனவும்

கடும் போர், சண்டை நாளுக்கு எனவும்

அவற்றை நான் சேர்த்து வைத்தேன்.

24ஒளி தோன்றும் இடத்திற்குப் பாதை எது?

கீழைக்காற்று அவனிமேல் வீசுவது எப்படி?

25வெள்ளத்திற்குக் கால்வாய் வெட்டியவர் யார்?

இடி மின்னலுக்கு வழி வகுத்தவர் யார்?

26மனிதர் வாழா மண்ணிலும்

மாந்தர் குடியிராப் பாலையிலும்

மழை பெய்வித்துப்

27பாழ்வெளிக்கும் வறண்ட

நிலத்திற்கும் நீர் பாய்ச்சிப்

பசும்புல் முளைக்கச் செய்தவர் யார்?

28மழைக்குத் தந்தை உண்டோ?

பனித்துளிகளைப் பிறப்பிப்பவர் யார்?

29பனிக்கட்டி யாருடைய உதரத்தில்

தோன்றுகின்றது? வானின் மூடுபனியை

ஈன்றெடுப்பவர் யார்?

30கல்லைப்போல் புனல் கட்டியாகிறது;

ஆழ்கடலின் பரப்பு உறைந்து போகிறது.

31கார்த்திகை மீனைக் கட்டி விலங்கிடுவாயோ?

மார்கழி மீனின் தலையை அவிழ்த்திடுவாயோ?✠

32குறித்த காலத்தில்

விடிவெள்ளியைக் கொணர்வாயோ?

வடதிசை விண்மீன் குழுவுக்கு

வழி காட்டுவாயோ?

33வானின் விதிமுறைகளை அறிந்திடுவாயோ?

அதன் ஒழுங்கை நானிலத்தில்

நிலைநாட்டிடுவாயோ?



34முகில்வரை உன் குரலை முழங்கிடுவாயோ?

தண்ணீர்ப் பெருக்கு

உன்னை மூடச் செய்வாயோ?

35புறப்படுக’ என மின்னலுக்கு

ஆணையிடுவாயோ?

‘இதோ! உள்ளோம்’ என

அவை உனக்கு இயம்புமோ?

36நாரைக்கு ஞானத்தை நல்கியவர் யார்?

சேவலுக்கு அறிவைக்கொடுத்தவர் யார்?

37ஞானத்தால் முகில்களை

எண்ணக் கூடியவர் யார்?

வானத்தின் நீர்க்குடங்களைக்

கவிழ்ப்பவர் யார்?

38துகள்களைச் சேர்த்துக்

கட்டியாக்குபவர் யார்? மண்கட்டிகளை

ஒட்டிக் கொள்ளச் செய்பவர் யார்?

39பெண் சிங்கத்திற்கு இரை தேடுவாயோ?

அரிமாக் குட்டியின் பசியை ஆற்றுவாயோ?

40குகைகளில் அவை குறுகி இருக்கையிலே,

குழிகளில் அவை பதுங்கி இருக்கையிலே.

41காக்கைக் குஞ்சுகள்

இறைவனை நோக்கிக் கரையும் போது,

அவை உணவின்றி ஏங்கும்போது,

காகத்திற்கு இரை அளிப்பவர் யார்?


38:8-11 எரே 5:22. 38:31 யோபு 9:9; ஆமோ 5:8.


அதிகாரம் 39

1வரையாடு ஈனும் பருவம் தெரியுமோ?

மான்குட்டியை ஈனுதலைப்

பார்த்தது உண்டா?

2எண்ணமுடியுமா

அவை சினையாயிருக்கும் மாதத்தை?

கணிக்க முடியுமா

அவை ஈனுகின்ற காலத்தை?,

3குனிந்து குட்டிகளை அவை தள்ளும்;

வேதனையில் அவற்றை வெளியேற்றும்.

4வெட்ட வெளியில் குட்டிகள் வளர்ந்து

வலிமைபெறும்; விட்டுப் பிரியும்;

அவைகளிடம் மீண்டும் வராது.

5காட்டுக் கழுதையைக்

கட்டற்று திரியச் செய்தவர் யார்?

கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?

6பாலைநிலத்தை அதற்கு வீடாக்கினேன்;

உவர் நிலத்தை அதற்கு உறைவிடமாக்கினேன்.

7நகர அமளியை அது நகைக்கும்;

ஓட்டுவோன் அதட்டலுக்கும் செவிகொடாது.

8குன்றுகள் எங்கும் தேடும் மேய்ச்சலை;

பசுமை அனைத்தையும் நாடி அலையும்.

9காட்டெருமை உனக்கு ஊழியம் செய்ய விரும்புமா?

உன் தொழுவத்தில் ஓர் இரவேனும் தங்குமா?

10காட்டெருமையைக் கலப்பையில் பூட்டி

உழுதிடுவாயோ? பள்ளத்தாக்கில் பரம்படிக்க

அது உன் பின்னே வருமோ?

11அது மிகுந்த வலிமை கொண்டதால்

அதனை நம்பியிருப்பாயோ?

எனவே, உன் வேலையை

அதனிடம் விடுவாயோ?

12அது திரும்பி வரும் என நீ நம்புவாயோ?

உன் களத்திலிருந்து

தானியத்தைக் கொணருமோ?

13தீக்கோழி சிறகடித்து நகைத்திடும்;

ஆனால், அதன் இறக்கையிலும்

சிறகுகளிலும் இரக்கம் உண்டோ?

14ஏனெனில், மண்மேலே

அது தன் முட்டையை இடும்;

புழுதிமேல் பொரிக்க விட்டுவிடும்.

15காலடி பட்டு அவை நொறுங்குமென்றோ

காட்டு விலங்கு அவைகளை மிதிக்குமென்றோ

அது நினைக்கவில்லை.

16தன்னுடையவை அல்லாதன போன்று

தன் குஞ்சுகளைக் கொடுமையாய் நடத்தும்;

தன் வேதனை வீணாயிற்று

என்று கூடப் பதறாமல்போம்.

17கடவுள் அதை மதிமறக்கச் செய்தார்;

அறிவினில் பங்கு அளித்தார் இல்லை.

18விரித்துச் சிறகடித்து எழும்பொழுது,

பரியோடு அதன் வீரனையும் பரிகசிக்குமே!

19குதிரைக்கு வலிமை கொடுத்தது நீயோ?

அதன் கழுத்தைப் பிடரியால்

உடுத்தியது நீயோ?

20அதனைத் தத்துக்கிளிபோல்

தாவச் செய்வது நீயோ?

அதன் செருக்குமிகு கனைப்பு

நடுங்க வைத்திடுமே?

21அது மண்ணைப் பறிக்கும்;

தன் வலிமையில் மகிழும்

போர்க்களத்தைச் சந்திக்கப்

புறப்பட்டுச் செல்லும்.

22>அது அச்சத்தை எள்ளி நகையாடும்;

அசையாது;

வாள் முனைக்கண்டு பின்வாங்காது.

23அதன்மேல்

அம்பறாத் தூணி கலகலக்கும்;

ஈட்டியும் வேலும் பளபளக்கும்;

24அது துள்ளும்; பொங்கி எழும்;

மண்ணை விழுங்கும்;

ஊதுகொம்பு ஓசையில் ஓய்ந்து நிற்காது;

25எக்காளம் முழங்கும்போதெல்லாம்

“ஐஇ” என்னும்; தளபதிகளின்

இடி முழக்கத்தையும் இரைச்சலையும்

அப்பால் போரினையும்

இப்பாலே மோப்பம் பிடிக்கும்.

26உன் அறிவினாலா வல்லூறு

பாய்ந்து இறங்குகின்றது?

தெற்கு நோக்கி

இறக்கையை விரிக்கின்றது?

27உனது கட்டளையாலா

கழுகு பறந்து ஏறுகின்றது?

உயர்ந்த இடத்தில்

தன் உறைவிடத்தைக் கட்டுகின்றது?

28பாறை உச்சியில்

கூடுகட்டித் தங்குகின்றது;

செங்குத்துப் பாறையை

அரணாகக் கொண்டுள்ளது.

29அங்கிருந்தே அது கூர்ந்து

இரையைப் பார்க்கும்;

தொலையிலிருந்தே அதன் கண்கள்

அதைக் காணும்.

30குருதியை உறிஞ்சும் அதன் குஞ்சுகள்;

எங்கே பிணமுண்டோ

அங்கே அது இருக்கும்.✠


39:30 மத் 24:28; லூக் 17;37.


அதிகாரம் 40

1பின்பு யோபைப் பார்த்து

ஆண்டவர் கூறினார்:

2குற்றம் காண்பவன்,

எல்லாம் வல்லவரோடு வழக்காடுவானா?

கடவுளோடுவாதாடுபவன்

விடையளிக்கட்டும்.

3யோபு ஆண்டவர்க்குக் கூறிய மறுமொழி:

4இதோ! எளியேன் யான்

இயம்புதற்குண்டோ? என் வாயைக்

கையால் பொத்திக் கொள்வேன்.

5ஒருமுறை பேசினேன்;

மறுமொழி உரையேன்; மீண்டும் பேசினேன்;

இனிப் பேசவேமாட்டேன்.


கடவுளின் இரண்டாம் சொற்பொழிவு


6ஆண்டவர் சூறாவளியினின்று

யோபுக்கு அருளிய பதில்:

7வீரனைப்போல்

இடையை இறுக்கிக் கட்டிக்கொள்;

வினவுவேன் உன்னிடம்;

விடையெனக்கு அளிப்பாய்.

8என் தீர்ப்பிலேயே நீ குற்றம் காண்பாயா?

உன்னைச் சரியெனக் காட்ட

என்மீது குற்றம் சாட்டுவாயா?

9இறைவனுக்கு உள்ளதுபோல்

உனக்குக் கையுண்டோ?

அவர்போன்று இடிக்குரலில் முழங்குவாயோ?

10சீர் சிறப்பினால்

உன்னை அணி செய்துகொள்;

மேன்மையையும், மாண்பினையும்

உடுத்திக்கொள்.

11கொட்டு உன் கோபப் பெருக்கை!

செருக்குற்ற ஒவ்வொருவரையும்

நோக்கிடு; தாழ்த்திடு!

12செருக்குற்ற எல்லாரையும்

நோக்கிடு; வீழ்த்திடு! தீயோரை

அவர்கள் இடத்திலேயே மிதித்திடு!

13புழுதியில் அவர்களை

ஒன்றாய்ப் புதைத்திடு!

காரிருளில் அவர் முகங்களை மூடிடு.

14அப்பொழுது, உனது வலக்கை

உன்னைக் காக்குமென்று

நானே ஒத்துக்கொள்வேன்.


பெகிமோத்து


15இதோ பார், உன்னைப் படைத்ததுபோல்

நான் உண்டாக்கிய பெகிமோத்து

காளைபோல் புல்லைத் தின்கின்றது.

16இதோ காண்,

அதன் ஆற்றல் அதன் இடுப்பில்;

அதன் வலிமை வயிற்றுத் தசைநாரில்.

17அது தன் வாலைக்

கேதுருமரம்போல் விரைக்கும்;

அதன் தொடை நரம்புகள்

கயிறுபோல் இறுகியிருக்கும்;

18அதன் எலும்புகள், வெண்கலக் குழாய்கள்;

அதன் உறுப்புகள் உருக்குக் கம்பிகள்.

19இறைவனின் படைப்புகளில்

தலையாயது அதுவே! படைத்தவரே

அதைப் பட்டயத்துடன் நெருக்க முடியும்.

20மலைகள் அதற்குப்

புற்பூண்டுகளை விளைவிக்கின்றன;

விலங்குகள் எல்லாம்

விளையாடுவதும் அங்கேதான்.

21அது நிழற்செடிக்கு அடியிலும்

நாணல் மறைவிலும் உளைச் சேற்றிலும்

படுத்துக் கிடக்கும்.

22அச்செடி தன் நிழலால் அதை மறைக்கும்;

ஓடையின் அலரி அதைச் சூழ்ந்து நிற்கும்.

23ஆறு புரண்டோடினும் அது மிரண்டோடாது;

அதன் முகத்தே யோர்தான் மோதினும்

அசைவுறாது.

24அதன் கண்காண அதனைக்

கட்டமுடியுமோ? கொக்கியால்

அதன் மூக்கைத் துளைக்க முடியுமோ?


அதிகாரம் 41

லிவியத்தான்


1தூண்டிலால் லிவியத்தனைத்

தூக்கிடுவாயோ? கயிற்றினால்

அதன் நாக்கினைக் கட்டிடுவாயோ?✠

2அதன் மூக்கிற்குச் கயிறு இட

உன்னால் முடியுமோ? அதன் தாடையில்

கொக்கியினால் குத்த முடியுமோ?

3வேண்டுகோள் பல

அது உன்னிடம் விடுக்குமோ?

கனிவாக உன்னிடம் கெஞ்சுமோ?

4என்றும் உனக்கு ஏவல்புரிய

உன்னுடன் அது

உடன்படிக்கை செய்யுமோ?

5பறவைபோல் துள்ளி அதனுடன்

ஆடுவாயா? உம் மகளிர்க்கென

அதனைக் கட்டிவைப்பாயா?

6மீனவர் குழுவினர்

அதன்மேல் பேரம் பேசுவார்களோ?

அவர்கள் வணிகரிடையே

அதைக் கூறுபோடுவார்களோ?

7கூரிய முட்களால் அதன் தோலையும்

மீன் எறி வேல்களால் அதன் தலையையும்

குத்தி நிரப்புவாயோ?

8உன் கையை அதன்மேல் வைத்துப்பார்;

எழும் போராட்டத்தை மறக்கமாட்டாய்.

மீண்டும் அதைச் செய்ய மாட்டோம்.

9இதோ! தொடுவோர் நம்பிக்கை

தொலைந்துபோம்; அதனைக் கண்டாலே

ஒருவர் கதிகலங்குவார்.

10அதை எழுப்பும் வீரம் எவருக்கும் இல்லை;

பின்பு அதன்முன் நிற்கத் துணிபவர் யார்?

11அதனை எதிர்த்து உயிரோடிருந்தவர்

எவராவது உண்டோ?

விண்ணகத்தின்கீழ்

அப்படிப்பட்டவர் யாருமில்லை!

12அதன் உறுப்புகள், அதன் ஆற்றல்

அதன் அமைப்பின் அழகு

அனைத்தையும் பற்றி

அறிவிக்காது விடேன்.

13அதன் மேல்தோலை உரிப்பவர் யார்?

அதன் தாடை இரண்டுக்குமிடையே

நுழைபவர் யார்?

14அதன் முகத்தில் வாயிலைத் திறப்பவன் யார்?

அதன் பற்களைச் சூழ்ந்து பேரச்சமே உள்ளது.

15அதன் முதுகு கேடய வரிசையாம்;

நெருங்க மூடி முத்திரை இடப்பட்டதாம்.

16ஒன்றோடு ஒன்று ஒட்டி உள்ளது.

காற்றும் அதனிடையே கடந்திடாது;

17ஒன்றோடு ஒன்றாய் இணைந்துள்ளன;

பிரிக்கமுடியாதவாறு

ஒன்றாய்ப் பிடித்துள்ளன.

18துலங்கும் மின்னல் அதன் தும்மல்;

வைகறை இமைகள் அதன் கண்கள்.

19அதன் வாயினின்று புறப்படுவது தீப்பிழம்பு;

அங்கிருந்து பறப்பது நெருப்புப் பொறிகளே.

20நாணல் நெருப்புக்

கொதிகலனின்று வருவதுபோல்

அதன் நாசியினின்று புகை கிளம்பும்.

21அதன் மூச்சு கரிகளைப் பற்றவைக்கும்;

அதன் வாயினின்று தீப்பிழம்பு கிளம்பிவரும்.

22அதன் கழுத்தில் வலிமை வதிகின்றது;

நடுக்கம் அதன்முன் துள்ளியாடுகின்றது.

23அதன் தசைமடிப்புகள் ஒட்டியிருக்கும்;

கெட்டியாயிருக்கும் அவற்றை

அசைக்க ஒண்ணாது.

24அதன் நெஞ்சம் கல்லைப்போல்

கடினமானது;

திரிகையின் அடிக்கல்போல்

திண்மையானது.

25அது எழும்பொழுதே

தெய்வங்கள் அஞ்சுகின்றன;

அது அறையவரும்போதே

நிலைகுலைகின்றன.

26வாள் அதைத் தாக்கிடினும், ஊடுருவாது;

ஈட்டியோ அம்போ, எறிவேலோ

உட்செல்லாது.

27இரும்பை அது துரும்பெனக் கருதும்;

வெண்கலத்தை உளுத்த கட்டையெனக்

கொள்ளும்.

28வில்வீரன் அதை விரட்ட முடியாது;

கவண் கல்லும் கூளம்போல் ஆகுமே.

29பெருந்தடியைத் தாளடி எனக்கருதும்;

எறிவேல் ஒலிகேட்டு எள்ளி நகைக்கும்.

30அதன் வயிற்றுப்புறம்

ஒட்டுத் துண்டுகளின் அடுக்கு;

அது சேற்றில் படுத்துக்கிடக்கையில்

பரம்புக் கட்டை.

31கொதிகலமென அது

கடலைப் பொங்கச் செய்யும்;

தைலச் சட்டியென அது

ஆழியைக் கொப்பளிக்கச் செய்யும்.

32அது போனபிறகு பாதை பளபளக்கும்;

கடலே நரைத்ததெனக் கருதத்தோன்றும்.

33அகிலத்தில் அதற்கு இணையானது இல்லை;

அச்சம் கொண்டிலாப் படைப்பு அதுவே.

34செருக்குற்ற படைப்பு

அனைத்தையும் ஏளனமாய் நோக்கும்;

வீறுகொண்ட விலங்குகட்கு

வேந்தனும் அதுவே.


41:1 திபா 74:14; 104:26; எசா 27:1.


அதிகாரம் 42

யோபின் இறுதி உறுதிமொழி


1அப்பொழுது யோபு ஆண்டவர்க்குக்

கூறிய பதில்:

2நீர் அனைத்தையும் ஆற்றவல்லவர்;

அறிவேன் அதனை;

நீர் நினைத்த எதையும்

தடுக்க இயலாது.

3‘அறிவில்லாமல் ஆலோசனையை

மறைப்பவன் எவன்?” என்று கேட்டீர்;

உண்மையில் நான்தான்

புரியாதவற்றைப் புகன்றேன்;

அவை எனக்கு விளங்கா

அளவுக்கு விந்தையானவை.✠.

4அருள்கூர்ந்து கேளும் அடியேன் பேசுவேன்;

வினவுவேன் உம்மை;

விளங்க வைப்பீர் எனக்கு.✠

5உம்மைப்பற்றிக்

காதால் மட்டுமே கேள்விப்பட்டேன்;

. ஆனால் இப்பொழுது,

என் கண்களே உம்மைக் காண்கின்றன.

6ஆகையால்,

என்னையே நொந்து கொள்ளுகின்றேன்;

புழுதியிலும் சாம்பலிலும் இருந்து

மனம் வருந்துகின்றேன்.


முடிவுரை


7ஆண்டவர் இவ்வாறு யோபிடம் பேசினபிறகு, தேமானியனான எலிப்பாசைப் பார்த்துக் கூறியது: “உன்மீதும், உன் இரு நண்பர்கள் மீதும் எனக்குச் சினம் பற்றி எரிகிறது. ஏனெனில் என் ஊழியன் யோபு போன்று நீங்கள் என்னைப்பற்றிச் சரியாகப் பேசவில்லை. 8ஆகவே இப்பொழுது, “ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக் கிடாய்களையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்; என் ஊழியன் யோபிடம் செல்லுங்கள்; உங்களுக்காக எரிபலியை ஒப்புக்கொடுங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக மன்றாடும் பொழுது, நானும் அவன் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்வேன். என் ஊழியன் யோபு போன்று என்னைப் பற்றிச் சரியாகப் பேசாத உங்கள் மடமைக்கு ஏற்றவாறு செய்யாது விடுவேன்”.


9அவ்வாறே தேமானியனான எலிப்பாசும், சூகாவியனான பில்தாதும், நாமானியனான சோப்பாரும் சென்று ஆண்டவர் அவர்களுக்குக் கட்டளை இட்டவாறே செய்தார்கள். ஆண்டவரும் யோபின் இறைஞ்சுதலை ஏற்றார்.


செல்வச் சிறப்புகளை ஆண்டவர் யோபுக்கு மீண்டும் அளித்தல்


10யோபு தம் நண்பர்களுக்காக மன்றாடின பிறகு, ஆண்டவர் செல்வங்களையெல்லாம் மீண்டும் நல்கினார். மேலும் அவர் யோபுக்கு இருந்தனவற்றை எல்லாம் இரண்டு மடங்கு ஆக்கினார்.✠ 11பின்னர் அவருடைய எல்லாச் சகோதரர்களும், சகோதரிகளும், அவரை முன்பு தெரிந்திருந்த அனைவரும் அவரிடம் வந்தனர்; அவரது இல்லத்தில் அவரோடு விருந்துண்டனர்; ஆண்டவர் அவருக்கு வரச்செய்த தீமை அனைத்திற்காகவும் ஆறுதல் கூறி அவரைத் தேற்றினர். ஒவ்வொருவரும் அவருக்கு வெள்ளியும் பொன்மோதிரமும் வழங்கினர்.


12யோபின் முன்னைய நாள்களில் இருந்ததைவிட, பின்னைய நாள்களில் ஆண்டவர் அதிகமாக ஆசிவழங்கினார். இப்பொழுது பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்மாடுகளும், ஆயிரம் பெட்டைக் கழுதைகளும் அவருக்கு இருந்தன. 13அவருக்கு ஏழு புதல்வர்களும் மூன்று புதல்வியரும் பிறந்தனர். 14மூத்த மகளுக்கு எமிமா என்றும், இரண்டாவது மகளுக்குக் கெட்டிசியா என்றும், மூன்றாவது மகளுக்குக் கெரென் அப்பூக்கு என்றும் பெயரிட்டார். 15யோபின் புதல்வியரைப் போல் அழகுவாய்ந்த நங்கையர் நாடெங்கும் இருந்ததில்லை. அவர்களின் தந்தை, அவர்களின் சகோதரர்களோடு அவர்களுக்கும் சொத்தில் உரிமை கொடுத்தார். 16அதன்பின் யோபு நூற்று நாற்பது ஆண்டுகள் வாழ்ந்தார்; தம் பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரை கண்டுகளித்தார். 17இவ்வாறு யோபு முதுமை அடைந்து, பல்லாண்டு வாழ்ந்து இறந்தார்.


42:3 யோபு 38:2. 42:4 யோபு 38:3. 42:10 யோபு 1:1-3.