யாக்கோபு


யாக்கோபு
முன்னுரை

இத்திருமுகம் உலகெங்கும் சிதறுண்டு வாழும் இஸ்ரயேலின் பன்னிரு குலத்தினருக்கும் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் யூதக் கிறிஸ்தவர்கள். ஆயினும் திருமுகம் தரும் போதனை யூதக் கிறிஸ்தவர்களுக்கும் பிற இனத்துக் கிறிஸ்தவர்களுக்கும் பொருந்தவே அமைந்துள்ளது.


இத்திருமுகம் கிறிஸ்தவ நடைமுறை வாழ்வுக்கான அறிவுரை எனினும், பழைய ஏற்பாட்டின் ஞானநூல்களின் தன்மையைக் கொண்டுள்ளது. இது எழுதப்பட்ட காலத்தைக் கணிப்பது கடினம். வெவ்வேறு விவிலிய அறிஞர்கள் கி.பி. 50லிருந்து 100 வரையுள்ள வெவ்வேறு காலக் கணிப்புகளைக் கொடுக்கிறார்கள்.


ஆசிரியர்


யாக்கோபு திருமுகத்தின் ஆசிரியர் தம்மைப் பற்றிக் “கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு” என்று குறிப்பிடுகிறார் (1:11). மரபுக் கருத்துப்படி யாக்கோபு ஆண்டவரின் சகோதரர்; எருசலேம் திருச்சபையின் தலைவர்; பவுலுடன் தொடர்பு கொண்டிருந்தவர் (கலா 1:19; 2:9,12; திப 15:13).


ஆனால் இக்கருத்துக்களைப் பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள்; ஏனெனில் கடிதத்தின் நடை, கருத்துக்கள், இயேசுவோடுள்ள நெருக்கமான உறவு பற்றிய குறிப்பின்மை போன்றவற்றின் அடிப்படையில் இத்திருமுகத்தின் ஆசிரியர் வேறு ஒரு யாக்கோபாக இருக்கலாம் என எண்ணுகிறார்கள்.


உள்ளடக்கம்


இத்திருமுகத்தின் முக்கியக் கருத்து கிறிஸ்தவர் ஒருவர் தம் அன்றாடக் கடமைகளைப் பிழையின்றிச் செய்து முடிக்க வேண்டும் என்பதாகும். உண்மையான கிறிஸ்தவ வாழ்வு தன்னல மறுப்பையும் தூய வாழ்வையும் உள்ளடக்கியது (1:1-27). நம்பிக்கை, பிறரன்பு போன்றவை செயல்களில் காட்டப்பட வேண்டும். செயலற்ற நம்பிக்கை செத்த நம்பிக்கை (2:1-26). நாவை அடக்குதல், அமைதி வாழ்விற்கான ஆர்வம் ஆகியவை ஒருவரை ஞானியாகவும், தூயவராகவும் மாற்றுகின்றன (3:1-18). பாவம் பிளவின் காரணம். திருமுகத்தின் இறுதியில் அனைவருக்கும் எழுச்சியுரை தரப்படுகிறது (4-5>


அமைப்பு


1. முன்னுரை (வாழ்த்து) 1:1 2. சோதனைகள் 1:2 - 18 3. அறிவுரையும் எச்சரிக்கைகளும் 1:19 - 5:20

அதிகாரம் 1

1. முன்னுரை

வாழ்த்து

1சிதறுண்டு வாழும் பன்னிரு குலத்தினருக்கு, கடவுளுக்கும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பணியாளனாகிய யாக்கோபு வாழ்த்துக் கூறி எழுதுவது:✠

2. சோதனைகள்

நம்பிக்கையும் ஞானமும்

2என் சகோதர சகோதரிகளே, பல வகையான சோதனைகளுக்கு உள்ளாகும்போது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டிருங்கள். 3உங்கள் நம்பிக்கை சோதிக்கப்படும்போது மனவுறுதி உண்டாகும் என்பது உங்களுக்குத் தெரியும். 4உங்கள் மனவுறுதி நிறைவான செயல்களால் விளங்கட்டும். அப்பொழுது எக்குறையுமின்றி முற்றும் நிறைவுள்ளவர்களாய் இருப்பீர்கள். 5உங்களிடையே குறைவான ஞானம் கொண்டிருப்போர் கடவுளிடத்தில் கேட்கட்டும் அப்பொழுது அவரும் ஞானத்தைக் கொடுப்பார். அவர் முகம் கோணாமல் தாராளமாய் எல்லாருக்கும் கொடுப்பவர். 6ஆனால், நம்பிக்கையோடு, ஐயப்பாடின்றிக் கேட்க வேண்டும். ஐயப்பாடு கொள்பவர்கள் காற்றினால் அலைக்கழிக்கப்படும் கடல் அலையைப் போன்றவர்கள். 7-8எனவே, இத்தகைய இருமனமுள்ள, நிலையற்ற போக்குடையவர்கள் ஆண்டவரிடம் ஏதாவது பெற முடியும் என நினைக்காதிருக்கட்டும்.


ஏழ்மையும் செல்வமும்


9தாழ்நிலையில் உள்ள சகோதரர் சகோதரிகள் தாங்கள் உயர்வுபெறும்போது மகிழ்ச்சியடைவார்களாக! 10செல்வச் செழிப்பில் இருப்பவர்கள் தாங்கள் தாழ்நிலை அடையும்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார்களாக! ஏனெனில், செல்வர்கள் புல்வெளிப் பூவைப்போல மறைந்தொழிவார்கள். 11கதிரவன் எழ, வெயில் ஏறிப் புல் உலர்ந்துபோம். அதன் பூ வதங்கி விழும்; அதன் அழகிய தோற்றமும் அழிந்துவிடும். அவ்வாறே செல்வரும் தம் அலுவல்களில் ஈடுபடும்போதே அழிவுறுவர்.


கடவுளும் சோதனையும்


12சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள். 13சோதனை வரும்போது, ‘இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது’ என்று யாரும் சொல்லக்கூடாது. ஏனெனில், கடவுள் தீமையின் தூண்டுதலுக்கு உள்ளாவதில்லை. அவரும் எவரையும் சோதிப்பதில்லை. 14ஒவ்வொருவரும் தம் சொந்தத் தீய நாட்டத்தினாலே சோதிக்கப்படுகின்றனர். அது அவர்களைக் கவர்ந்து மயக்கித் தன் வயப்படுத்துகிறது. 15பின்னர் தீய நாட்டம் கருக்கொண்டு பாவத்தைப் பெற்றெடுக்கிறது. பாவம் முழு வளர்ச்சியடைந்து சாவை விளைவிக்கிறது. 16என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, ஏமாந்துபோக வேண்டாம். 17நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல. 18தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.


3. அறிவுரையும் எச்சரிக்கையும்

இறைவார்த்தையைக் கேட்டலும் செயல்படுத்தலும்

19என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, இதைத் தெரிந்து கொள்ளுங்கள்; ஒவ்வொருவரும் கேட்பதில் வேகமும் பேசுவதிலும் சினங்கொள்வதிலும் தாமதமும் காட்டவேண்டும். 20ஏனெனில், மனிதரின் சினம் கடவுளுக்கு ஏற்புடைய செயல்கள் நிறைவேறத் தடையாயிருக்கிறது. 21எனவே, எல்லா வகையான அழுக்கையும், உங்களிடம் மிகுந்துள்ள தீமையையும் அகற்றி, உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. 22இறைவார்த்தையைக் கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள். 23-24ஏனென்றால் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடவாதோர், கண்ணாடியிலே தம் முகத்தைப் பார்த்துவிட்டுச் சென்று உடனே தாம் எவ்வாறு இருந்தார் என்பதை மறந்து விடும் ஒரு மனிதருக்கு ஒப்பாவர். 25ஆனால், நிறைவான விடுதலையளிக்கக் கூடிய சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதைத் தொடர்ந்து கற்போர் தாம் கேட்பதை மறந்துவிடுவதில்லை; அவர்கள் அதற்கேற்ற செயல்களைச் செய்வார்கள்; தம் செயல்களால் பேறு பெற்றவர் ஆவார்கள்.

26தாம் சமயப் பற்றுடையோர் என எண்ணிக்கொண்டிருப்போர் தம் நாவை அடக்காமலிப்பாரென்றால் தம்மையே ஏமாற்றிக்கொள்வர். இத்தகையோருடைய சமயப் பற்று பயனற்றது. 27தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான சமயவாழ்வு எதுவெனில், துன்புறும் அநாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலும் உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக்கொள்வதும் ஆகும்.


1:1 மத் 13:55; மாற் 6:3; திப 15:13; கலா 1:19. 1:10-11 எசா 40:6-7.


அதிகாரம் 2

ஏழைகளை மதித்தல்


1என் சகோதர சகோதரிகளே, மாட்சி மிக்க நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினிடம் நம்பிக்கை கொண்டுள்ள நீங்கள் ஆள்பார்த்துச் செயல்படாதீர்கள். 2பொன் மோதிரமும் பளபளப்பான ஆடையும் அணிந்த ஒருவரும் அழுக்குக் கந்தையணிந்த ஏழை ஒருவரும் உங்கள் தொழுகைக் கூடத்தினுள் வருகிறார்கள் என வைத்துக்கொள்வோம். 3அப்பொழுது நீங்கள் பளபளப்பான ஆடை அணிந்தவர்மீது தனிக் கவனம் செலுத்தி அவரைப் பார்த்து, “தயவுசெய்து இங்கே அமருங்கள்” என்று சொல்கிறீர்கள். ஏழையிடமோ, “அங்கே போய் நில்” என்றோ அல்லது “என் கால்பக்கம் தரையில் உட்கார்” என்றோ சொல்கிறீர்கள். 4இவ்வாறு, உங்களுக்குள்ளே வேறுபாடு காட்டி, தீய எண்ணத்தோடு மதிப்பிடுகிறீர்கள் அல்லவா?


5என் அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; உலகின் பார்வையில் ஏழைகளாய் இருப்பவர்களை, நம்பிக்கையில் செல்வர்களாகவும் தம்மீது அன்பு செலுத்துபவருக்கு வாக்களிக்கப்பட்ட அரசை உரிமைப்பேறாகப் பெறுபவர்களாகவும் கடவுள் தேர்ந்து கொள்ளவில்லையா? 6நீங்களோ ஏழைகளை அவமதிக்கிறீர்கள். உங்களைக் கொடுமைப்படுத்தி நீதிமன்றத்துக்கு இழுத்துச் செல்வோர் யார்? செல்வர் அல்லவா? 7கடவுள் உங்களுக்குக் கொடுத்துள்ள நற்பெயரைப் பழிப்பவர்களும் அவர்களல்லவா?


8“உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!”✠ என்னும் இறையாட்சியின் சட்டம் மறைநூலில் உள்ளது. இதை நீங்கள் கடைப்பிடித்தால் நல்லது. 9மாறாக, நீங்கள் ஆள்பார்த்துச் செயல்பட்டால் நீங்கள் செய்வது பாவம்; நீங்கள் குற்றவாளிகளென அச்சட்டமே உங்களுக்குத் தீர்ப்பளிக்கும். 10ஒருவர் சட்டம் ஒன்றில் மட்டும் தவறினாலும் அவர் அனைத்தையும் மீறிய குற்றத்துக்குள்ளாவார். 11ஏனெனில், “விபசாரம் செய்யாதே” என்று கூறியவர் “கொலை செய்யாதே” என்றும் கூறியுள்ளார். நீங்கள் விபசாரம் செய்யாவிட்டாலும் கொலை செய்வீர்களென்றால் சட்டத்தை மீறியவர்களாவீர்கள்.✠ 12விடுதலையளிக்கும் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்பட வேண்டியவர்களுக்கு ஏற்றதாய் உங்கள் பேச்சும் நடத்தையும் அமைதல் வேண்டும். 13ஏனெனில், இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும். இரக்கமே தீர்ப்பை வெல்லும்.


நம்பிக்கையும் நற்செயல்களும்


14என் சகோதர சகோதரிகளே, தம்மிடம் நம்பிக்கை உண்டு எனச்சொல்லும் ஒருவர் அதைச் செயல்களிலே காட்டாவிட்டால், அதனால் பயன் என்ன? அந்த நம்பிக்கை அவரை மீட்க முடியுமா? 15-16ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி போதிய உடையும் அன்றாட உணவும் இல்லாதிருக்கும்போது, அவர்கள் உடலுக்குத் தேவையானவை எவற்றையும் கொடாமல் உங்களுள் ஒருவர் அவர்களைப் பார்த்து, “நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியாற்றிக் கொள்ளுங்கள்;” என்பாரென்றால் அதனால் பயன் என்ன? 17அதைப் போலவே, நம்பிக்கையும் செயல் வடிவம் பெறாவிட்டால் தன்னிலே உயிரற்றதாயிருக்கும்.


18ஆனால், “ஒருவரிடம் நம்பிக்கை இருப்பதுபோல இன்னொருவரிடம் செயல்கள் இருக்கின்றன” என யாராவது சொல்லலாம். அதற்கு என் பதில்; செயல்கள் இன்றி எவ்வாறு நம்பிக்கை கொண்டிருக்க முடியும் எனக் காட்டுங்கள். நானோ என் செயல்களின் அடிப்படையில் நான் கொண்டுள்ள நம்பிக்கையை உங்களுக்குக் காட்டுகிறேன். 19கடவுள் ஒருவரே என்பதை நீங்கள் நம்புகிறீர்கள்; நல்லதுதான். பேய்களுங்கூட அவ்வாறு நம்பி அச்சத்தால் நடுங்குகின்றன. 20அறிவிலிகளே, செயலற்ற நம்பிக்கை பயனற்றது என நான் எடுத்துக்காட்ட வேண்டுமா? 21நம் மூதாதையாகிய ஆபிரகாமைப் பாருங்கள். தம் மகன் ஈசாக்கைப் பீடத்தின்மேல் பலிகொடுத்தபோது அவர் செய்த செயல்களினால் அல்லவோ கடவுளுக்கு ஏற்புடையவரானார்?✠ 22அவரது நம்பிக்கையும் செயல்களும் இணைந்து செயல்பட்டன என்றும், செயல்கள் நம்பிக்கையை நிறைவுபெறச் செய்தன என்றும் இதிலிருந்து புலப்படுகிறது அல்லவா?


23“ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்”✠ என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும், அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். 24எனவே, மனிதர் நம்பிக்கையினால் மட்டுமல்ல, செயல்களினாலும் கடவுளுக்கு ஏற்புடையவராகின்றனர் எனத் தெரிகிறது.


25அவ்வாறே, இராகாபு என்ற விலைமகள் தூதர்களை வரவேற்று வேறு வழியாக அனுப்பியபோது, செயல்களால் அல்லவா கடவுளுக்கு ஏற்புடையவரானார்!✠


26உயிர் இல்லாத உடல் போல, செயல்களில்லாத நம்பிக்கையும் செத்ததே.


< 2:8 லேவி 19:18. 2:11 விப 20:13,14; இச 5:17,18. 2:21 தொநூ 22:1-14. 2:23 தொநூ 15:6; 2 குறி 20:7; எசா 41:8. 2:25 யோசு 2:1-21.


அதிகாரம் 3

நாவடக்கம்


1என் சகோதர சகோதரிகளே, உங்களுள் பலர் போதகர் ஆக விரும்பவேண்டாம். போதகர்களாகிய நாங்கள் மிகக் கண்டிப்பான தீர்ப்புக்கு உள்ளாக வேண்டுமென உங்களுக்குத் தெரியும். 2நாம் எல்லாருமே அடிக்கடி தவறுகிறோம். பேச்சில் தவறாதோர் நிறைவு பெற்றவராவர். அவர்களே தம் முழு உடலையும் கட்டுப்படுத்தவல்லவர்கள். 3குதிரைகளை அடக்க அவற்றின் வாயில் கடிவாளத்தைப் போடுகிறோம். இவ்வாறு குதிரைகளை முழுவதுமாகக் கட்டுப்படுத்துகிறோம். 4கப்பல்களைப் பாருங்கள். அவை எத்துணை பெரியனவாக இருந்தாலும்ட, கடுங்காற்றால் அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலோட்டுவோர் சிறியதொரு சுக்கானைக் கொண்டு தாம் விரும்பும் திசையை நோக்கி அவற்றைச் செலுத்துகின்றனர். 5மனித நாவும் அதைப்போல ஒரு சிறிய உறுப்புதான். ஆனால், பெரிய காரியங்களைச் சாதிப்பதாக அது பெருமையடிக்கிறது. பாருங்கள், சிறியதொரு தீப்பொறி எத்துணை பெரிய காட்டைக் கொளுத்தி விடுகிறது. 6நாவும் தீயைப் போன்றதுதான். நெறிகெட்ட உலகின் உருவே அது. நம்முடைய உறுப்புகளுள் ஒன்றாக அமைந்திருக்கும் இந்த நா நம் உடல் முழுவதையும் கறைப்படுத்துகிறது. அது நம் வாழ்க்கைச் சக்கரம் முழுவதையும் எரித்துவிடுகிறது; எரிப்பதற்கான நெருப்பை நரகத்திலிருந்தே பெறுகிறது. 7காட்டில் வாழ்வன, பறப்பன, ஊர்வன, கடலில் வாழ்வன ஆகிய எல்லா உயிரினங்களையும் மனிதர் அடக்கிவிடலாம்; அடக்கியும் உள்ளனர். 8ஆனால், நாவை அடக்க யாராலும் முடிவதில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அது கொடியது; சாவை விளைவிக்கும் நஞ்சு நிறைந்தது. 9தந்தையாம் ஆண்டவரைப் போற்றுவது அந்நாவே; கடவுளின் சாயலாக உண்டாக்கப்பட்ட மனிதரைத் தூற்றுவதும் அந்நாவே.✠ 10போற்றலும் தூற்றலும் ஒரே வாயிலிருந்து வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, இவ்வாறு இருத்தலாகாது. 11ஒரே ஊற்றிலிருந்து நன்னீரும் உவர் நீரும் சுரக்குமா? 12என் அன்பர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும் திராட்சைச் செடி அத்திப் பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே, உப்பு நீர்ச் சுனையிலிருந்து நன்னீர் கிடைக்காது.


மெய்ஞ்ஞானம்


13உங்களிடையே ஞானமும் அறிவாற்றலும் உடையவர் யாராவது இருந்தால், ஞானம் தரும் பணிவாலும் நன்னடத்தையாலும் அவற்றைக் காட்டட்டும். 14உங்கள் உள்ளத்தில் பொறாமையும் மனக்கசப்பும் கட்சி மனப்பான்மையும் இருக்குமானால் அதைப்பற்றிப் பெருமை பாராட்ட வேண்டாம். உண்மையை எதிர்த்துப் பொய் பேசவேண்டாம். 15இத்தகைய ஞானம் விண்ணிலிருந்து வருவது அல்ல; மாறாக, மண்ணுலகைச் சார்ந்தது. அது மனித இயல்பு சார்ந்தது; 16பேய்த் தன்மை வாய்ந்தது. பொறாமையும் கட்சி மனப்பான்மையும் உள்ள இடத்தில் குழப்பமும் எல்லாக் கொடுஞ் செயல்களும் நடக்கும். 17விண்ணிலிருந்து வரும் ஞானத்தின் தலையாய பண்பு அதன் தூய்மையாகும். மேலும், அது அமைதியை நாடும்; பொறுமை கொள்ளும்; இணங்கிப் போகும் தன்மையுடையது; இரக்கமும் நற்செயல்களும் நிறைந்தது; நடுநிலை தவறாதது; வெளிவேடமற்றது. 18அமைதி ஏற்படுத்துவோர் விதைத்த அமைதி என்னும் விதையிலிருந்து நீதியென்னும் கனி விளைகிறது.


3:9 தொநூ 1:26.


அதிகாரம் 4

உலகத்தோடு நட்பு


1உங்களிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படக் காரணமென்ன? உங்களுக்குள்ளே போராடிக்கொண்டிருக்கும் சிற்றின்ப நாட்டங்கள் அல்லவா? 2நீங்கள் ஆசைப்படுவது கிடைக்காததால் கொலை செய்கிறீர்கள்; போராசை கொள்கிறீர்கள்; அதைப் பெற முடியாததால் சண்டை சச்சரவு உண்டாக்குகிறீர்கள். அதை நீங்கள் ஏன் பெறமுடிவதில்லை. நீங்கள் கடவுளிடம் கேட்பதில்லை. 3நீங்கள் கேட்டாலும் ஏன் அடைவதில்லை? ஏனெனில், நீங்கள் தீய எண்ணத்தோடு கேட்கிறீர்கள்; சிற்றின்ப நாட்டங்களை நிறைவேற்றவே கேட்கிறீர்கள். 4விபசாரர் போல செயல்படுவோரே, உலகத்தோடு நட்புக்கொள்வது கடவுளைப் பகைப்பது என்பது உங்களுக்குத் தெரியாதா? உலகுக்கு நண்பராக விரும்பும் எவரும் கடவுளைப் பகைப்பவர் ஆவார். 5-6அல்லது “மனித உள்ளத்திற்காகக் கடவுள் பேராவலோடு ஏங்குகிறார்.* அதற்கு அவர் அளிக்கும் அருளோ மேலானது” என மறைநூல் சொல்வது வீணென நினைக்கிறீர்களா? ஆகவே, “செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார். தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்” என்று மறைநூல் உரைக்கிறது.


7எனவே, கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்; அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். 8கடவுளை அணுகிச் செல்லுங்கள்; அவரும் உங்களை அணுகி வருவார். பாவிகளே, உங்கள் கைகளைத் தூய்மையாக்குங்கள். இரு மனத்தோரே, உங்கள் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துங்கள். 9உங்கள் நிலையை அறிந்து, துயருற்றுப் புலம்பி அழுங்கள். உங்கள் சிரிப்பு புலம்பலாகவும், மகிழ்ச்சி ஆழ் துயரமாகவும் மாறட்டும். 10ஆண்டவர்முன் உங்களைத் தாழ்த்துங்கள்; அவர் உங்களை உயர்த்துவார்.


பிறரிடம் குற்றம் காண்போருக்கு எச்சரிக்கை


11சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் மற்றவரைப் பழித்துரைக்க வேண்டாம். தம் சகோதரர் சகோதரிகளைப் பழித்துரைப்போர் அல்லது அவர்களுக்குத் தீர்ப்பு அளிப்போர் திருச்சட்டத்தைப் பழித்துரைக்கின்றனர்; அச்சட்டத்துக்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கின்றனர். சட்டத்துக்கு எதிராக நீங்கள் தீர்ப்பு அளிக்கும்போது நீங்கள் அதைக் கடைப்பிடிப்பவராக அல்ல, மாறாக அதற்கு எதிராகத் தீர்ப்பு அளிக்கும் நடுவர்களாக ஆகிவருகிறீர்கள். 12திருச்சட்டத்தைக் கொடுத்தவரும் தீர்ப்பு அளிப்பவரும் ஒருவரே. அவரே மீட்கவும் அழிக்கவும் வல்லவர். அவ்வாறிருக்க உங்களை அடுத்திருப்பவருக்குத் தீர்ப்பளிக்க நீங்கள் யார்?


வீம்பு பேசுவோருக்கு எச்சரிக்கை


13“இன்றோ நாளையோ குறிப்பிட்ட நகரத்துக்குப் போய் அங்கே ஓராண்டு தங்கி வாணிகம் செய்வோம்; பணம் ஈட்டுவோம்” எனச் சொல்லுகிறவர்களே சற்றுக் கேளுங்கள். 14 15ஆகவே, அவ்வாறு சொல்லாமல், “ஆண்டவருக்குத் திருவுளமானால், நாங்கள் உயிரோடிருப்போம்; இன்னின்ன செய்வோம்” என்று சொல்வதே முறை. 16இப்பொழுதோ நீங்கள் வீம்பு பாராட்டிப் பெருமை கொள்கிறீர்கள். இது போன்ற பெருமையெல்லாம் தீமையானது. 17நன்மை செய்ய ஒருவருக்குத் தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்யாவிட்டால், அது பாவம்.


4:6 நீமொ 3:34. 4:13-14 நீமொ 27:1. 4:5 இச்சொற்றொடரை ‘நம்முள் குடியிருக்கும் ஆவியார் பேரார்வத்துடன் நம்மீது ஏக்கமாயிருக்கிறார்’ எனவும் ‘மனித உள்ளம் பொறாமையால் துடிக்கிறது’ எனவும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 5

செல்வர்களுக்கு எச்சரிக்கை


1செல்வர்களே, சற்றுக் கேளுங்கள். உங்களுக்கு வரப்போகும் இழிநிலையை நினைத்து அலறி அழுங்கள். 2உங்கள் செல்வம் மக்கிப் போயிற்று. உங்கள் ஆடைகள் பூச்சிகளினால் அரிக்கப்பட்டுவிட்டன. 3உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அந்தத் துருவே உங்களுக்கு எதிர்ச் சான்றாக இருக்கும்; அது நெருப்புப்போல உங்கள் சதையை அழித்துவிடும். இந்த இறுதி நாள்களில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கின்றீர்களே! 4உங்கள் வயலில் அறுவடை செய்த வேலையாள்களுக்குரிய கூலியைப் பிடித்துக் கொண்டீர்கள்; அது கூக்குரலிடுகிறது. அறுவடை செய்தவர்களின் கூக்குரல் படைகளின் ஆண்டவருடைய செவிக்கு எட்டியுள்ளது.✠ 5இவ்வுலகில் ஆடம்பரமாகவும் இன்பமாகவும் வாழ்ந்தீர்கள். கொல்லப்படும் நாளுக்காக உங்கள் உள்ளங்களைக் கொழுக்க வைத்தீர்கள். 6நேர்மையானவரைக் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தீர்கள். ஆனால், அவர் உங்களை எதிர்த்து நிற்கவில்லை.


பொறுமையும் வேண்டுதலும்


7ஆகவே, சகோதர சகோதரிகளே, ஆண்டவரின் வருகைவரை பொறுமையோடிருங்கள். பயிரிடுபவரைப் பாருங்கள். அவர் நிலத்தின் நல்ல விளைச்சலை எதிர்பார்த்து முன்மாரியும் பின்மாரியும் பொழியுமளவும் பொறுமையோடு காத்திருக்கிறார். 8நீங்களும் பொறுமையோடிருங்கள். உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துங்கள். ஏனெனில், ஆண்டவரின் வருகை நெருங்கி வந்து விட்டது.


9சகோதர சகோதரிகளே, நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாகாதவாறு, ஒருவர் மற்றவருக்கு எதிராக முறையிடாதீர்கள். இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். 10அன்பர்களே, நீங்கள் துன்பத்தைத் தாங்குவதிலும் பொறுமையைக் கடைபிடிப்பதிலும் ஆண்டவரின் பெயரால் பேசிய இறைவாக்கினரை உங்களுக்கு மாதிரிகளாகக் கொள்ளுங்கள். 11தளரா மனமுடையோர் பேறுபெற்றோர் என்கிறோம். யோபுவின் தளரா மனத்தைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் ஆண்டவர் என்ன செய்தார் என்பதும் உங்களுக்குத் தெரியும். ஏனெனில், ஆண்டவர் மிகுந்த பரிவுள்ளமும் இரக்கமும் கொண்டவர்.✠


12எல்லாவற்றுக்கும் மேலாக, என் சகோதர சகோதரிகளே, நீங்கள் ஆணையிடவே வேண்டாம். விண்ணுலகின்மீதும் மண்ணுலகின்மீதும் வேறு எதன்மீதும் ஆணையிடாதீர்கள். நீங்கள் ஆம் என்றால் ஆம் எனவும் இல்லை என்றால் இல்லை எனவும் சொல்லுங்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் தண்டனைத் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள்.✠


13உங்களுள் யாரேனும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்; மகிழ்ச்சியாயிருந்தால் திருப்பாடல்களை இசைக்கட்டும். 14உங்களுள் யாரேனும் நோயுற்றிருந்தால், திருச்சபையின் மூப்பர்களை அழைத்து வாருங்கள். அவர்கள் ஆண்டவரது பெயரால் அவர்மீது எண்ணெய் பூசி இறைவனிடம் வேண்டுவார்கள்.✠ 15நம்பிக்கையோடு இறைவனிடம் வேண்டும்போது நோயுற்றவர் குணமாவார். ஆண்டவர் அவரை எழுப்பி விடுவார். அவர் பாவம் செய்திருந்தால் மன்னிப்புப் பெறுவார். 16ஆகவே, ஒருவருக்கொருவர் பாவங்களை அறிக்கை செய்து கொள்ளுங்கள். ஒருவர் மற்றவருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். அப்பொழுது குணமடைவீர்கள். நேர்மையாளருடைய வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். 17எலியா நம்மைப் போன்ற எளிமையான மனிதர்தாம். அவர் மழை பெய்யக்கூடாது என்று உருக்கமாக இறைவனிடம் வேண்டினார்; மூன்று ஆண்டு ஆறு மாதம் மழையில்லாது போயிற்று.✠ 18மீண்டும் அவர் இறைவனிடம் வேண்டினார்; வானம் பொழிந்தது, நிலம் விளைந்தது.


19-20என் சகோதர சகோதரிகளே, உங்களுள் ஒருவர் உண்மையை விட்டு நெறிதவறி அலையும்போது, வேறொருவர் அவரை மனந்திரும்பச் செய்தால், தவறான நெறியிலிருந்து மனந்திருப்புகிறவர் அவரை அழிவிலிருந்து மீட்பார் என்பதையும் திரளான பாவங்களைப் போக்குவார் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


5:2-3 மத் 6:19. 5:4 இச 24:14, 15. 5:11 யோபு 1:21, 22; 2:10; திபா 103:8. 5:12 மத் 5:34-37. 5:14 மாற் 6:13. 5:17 1 அர 17:1; 18:1. 5:20 நீமொ 10:12; 1 பேது 4:8.