திருவெளிப்பாடு


திருவெளிப்பாடு
முன்னுரை

புதிய ஏற்பாட்டின் இறுதி நூலாகிய திருவெளிப்பாடு வேறுபட்ட ஓர் இலக்கிய வகையைச் சார்ந்தது. இதில் அடையாளங்கள் மிகுதியாய் உள்ளன. இத்தகு இலக்கிய வகை கி.மு. 2ஆம் நூற்றாண்டையொட்டித் தோன்றி வளர்ந்ததாகத் தெரிகிறது. யூதர்கள் பிறஇனத்தாரால் துன்புறுத்தப்பட்ட காலத்தில் நம்பிக்கையும் ஊக்கமும் ஆறுதலும் ஊட்டுவதற்காகவும் அக்கால நிகழ்ச்சிகளை ஒரு குறிப்பிட்ட பார்வையில் புரிந்துகொள்ள உதவுவதற்காகவும் திருவெளிப்பாட்டு வகை நூல்கள் உருவாயின. தானியேல் நூல் இத்தன்மை கொண்டது.


ஆசிரியர்


இந்நூலின் ஆசிரியர் தம்மை யோவான் எனக் குறிப்பிடுகிறார் (1:1,4,9; 22:8). தாம் ஒரு திருத்தூதர் என்றோ இயேசுவின் சீடர் என்றோ அவர் தம்மைப் பற்றிக் கூறிக் கொள்ளவில்லை. மொழிநடை, இலக்கணம், இறையியல் கருத்துகள் ஆகியவற்றை ஆராய்ந்து பார்த்தால் இது நான்காம் நற்செய்தியை எழுதிய ஆசிரியரால் எழுதப்பட்டிருக்க இயலாது என்பது புலனாகும். தொடக்கக் காலத்திலிருந்தே கிறிஸ்தவ எழுத்தாளர்கள் இந்நூலின் ஆசிரியர் திருத்தூதர் யோவானே என்று கூறி வந்திருப்பது உண்மை எனினும், அகச்சான்று அடிப்படையில் பார்க்கும்போது இந்நூலாசிரியர் யோவான் என்னும் பெயருடைய தொடக்க கால மூப்பர் ஒருவராய் இருந்திருக்க வேண்டும் என்று சொல்வதே முறையாகத் தெரிகிறது.


சூழலும் நோக்கமும்


இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்கள் கொடிய துன்பங்களுக்கு இலக்காயினர். அது நீரோவின் காலம் (கி.பி. 54-68) எனச் சிலர் கூறுகின்றனர். ஆனால் தொமீசியன் காலமாக (கி.பி. 89-96) இருக்கும் எனக் கூறுவதே ஏற்புடையதாகத் தெரிகிறது. உரோமை அதிகாரிகள் அரச வணக்கத்தைப் பரப்பிய நேரத்தில் உரோமைப் பேரரசர் சீசரை வணங்க மறுத்த கிறிஸ்தவர்கள் வெறுப்புக்கும் இகழ்ச்சிக்கும் இன்னலுக்கும் உள்ளானார்கள். இந்நிலையில்தான் இதன் ஆசிரியர் பத்மு தீவிலிருந்து இதனை எழுதியிருக்க வேண்டும்.


உள்ளடக்கம்


வாசகர்கள் துணிச்சலோடு அரச வழிபாட்டை எதிர்க்க வேண்டும். கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையிலான இறுதிப் போர் விரைவில் வர இருக்கிறது. சாத்தான் கிறிஸ்துவின் சீடர்களுக்கு எதிராகத் துன்பங்களை மிகுதிப்படுத்துவான். ஆனால், கிறிஸ்தவர்கள் சாவுவரை உறுதியோடு இருக்க வேண்டும். அவர்களுக்கு அழிவு வராது என்பது உறுதி. கிறிஸ்து இயேசு வரும்போது அவர்கள் வெற்றி பெறுவார்கள். அப்போது கொடியவர்கள் என்றென்றைக்கும் அழிக்கப்படுவார்கள். கடவுளின் மக்களோ நிலைவாழ்வு பெறுவார்கள்.


அடையாளங்கள்


மேற்சொல்லப்பட்ட கருத்தை நேரடியாகச் சொல்வது ஆபத்தாக முடியும். எனவே இந்நூலில் பற்பல அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன; காட்சிகள் மூலமாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன.

7 என்னும் எண் 52 முறை இடம்பெறுகிறது. இது முழுமையைக் குறிக்கும் எண். ஒரு வேளை இது கடவுளையும் உலகையும் உள்ளடக்கும் எண்ணாக இருக்கலாம். ஏனெனில் மூன்று என்னும் எண் கடவுளைக் குறிக்கும்; நான்கு என்னும் எண் உலகைக் குறிக்கும். இவ்வாறு அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையைக் குறிக்கின்ற எண்ணாக ஏழு கருதப்பட்டிருக்கலாம். மேலும் 10, 1000 என்பவையும் முழுமையைக் குறிப்பனவாக உள்ளன.

144 என்னும் எண்ணும், 12000, 1,44,000 என்பவையும் திருச்சபையைக் குறித்து நிற்கின்றன. 7 என்னும் முழுமையில் பாதியான 3½ என்னும் எண்ணைப் பயன்படுத்தி, இன்னும் எத்தனை ஆண்டுகளுக்குத் துன்பங்கள் நிகழும் என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது என ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவர்களின் துன்பத்திற்குச் சின்னமாய் இருப்பவை ஏழு முத்திரைகள் (அதி 7,8), ஏழு எக்காளங்கள் (அதி 8,9), ஏழு கிண்ணங்கள் (அதி 16).

துன்புறுத்துவோருக்குச் சின்னங்களாய் இருப்பவை விலங்கு (அதி 13), விலைமகள் (அதி 17), பாபிலோன் (அதி 18). இங்கு பாபிலோன் எதிரிகளின் அரசான உரோமையைக் குறித்து நிற்கிறது.

இயேசு குரு என்றும் (1:12-16), சிங்கம் என்றும் (5:5), ஆட்டுக்குட்டி என்றும் (5:6), குழந்தை என்றும் (12:5), மணமகன் என்றும் (22:12), விண்மீன் என்றும் (21:13, 22:16) குறிப்பிடப்படுகிறார். கதிரவனை ஆடையாக உடுத்திய பெண் (12:1-16) புதிய இஸ்ரயேலாகிய திருச்சபையைக் குறித்து நிற்கிறார்.


அமைப்பு


1. முன்னுரை (நூன்முகம்) 1: 1 - 3
2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம் 1:4 - 3:22
3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு 4:1 - 8:1
4. ஏழு எக்காளங்கள் 8:2 - 11:19
5. அரக்கப் பாம்பும் இரு விலங்குகளும் 12:1 - 13:18
6. காட்சிகள் 14:1 - 15:8
7 .ஏழு கிண்ணங்கள் 16:1 - 21
8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும் 17:1 - 20:15
9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் 21:1 - 22:15
10. முடிவுரை 22:16 - 21

அதிகாரம் 1

1. முன்னுரை


நூன்முகம்


1இது இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார். அவர் தம் வானதூதரை அனுப்பித் தம் பணியாளராகிய யோவானுக்கு அவற்றைத் தெரிவித்தார். 2அவர் கடவுள் அருளிய வாக்குக்கும் இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய உண்மைக்கும், ஏன், தாம் கண்டவை அனைத்துக்குமே சான்று பகர்ந்தார். 3இந்த இறைவாக்குகளைப் படிப்போரும் இவற்றைக் கேட்போரும் இந்நூலில் எழுதியுள்ளவற்றைக் கடைப்பிடிப்போரும் பேறு பெற்றோர். இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது.


2. ஆசியாவிலுள்ள திருச்சபைகளுக்குக் கடிதம்


4-5ஆசியாவில்* உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும், அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும், இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக! இந்தக் கிறிஸ்துவே நம்பிக்கைக்குரிய சாட்சி; இறந்தோருள் முதலில் உயிர்பெற்று எழுந்தவர்; மண்ணுலக அரசர்களுக்குத் தலைவர். இவர் நம்மீது அன்புகூர்ந்தார்; தமது சாவு வாயிலாக நம் பாவங்களிலிருந்து நம்மை விடுவித்தார். 6ஆட்சி உரிமை பெற்றவர்களாக, அதாவது நம் கடவுளும் தந்தையுமானவருக்கு ஊழியம் புரியும் குருக்களாக நம்மை ஏற்படுத்தினார். இவருக்கே மாட்சியும் ஆற்றலும் என்றென்றும் உரியன. ஆமென்.✠


7இதோ! அவர் மேகங்கள் சூழ வருகின்றார். அனைவரும் அவரைக் காண்பர்; அவரை ஊடுருவக் குத்தியோரும் காண்பர்; அவர்பொருட்டு மண்ணுலகின் குலத்தார் அனைவரும் மாரடித்துப் புலம்புவர். இது உண்மை, ஆமென்!✠ 8“அகரமும் னகரமும் நானே”* என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் எல்லாம் வல்லவரும் அவரே.✠


கிறிஸ்துவின் காட்சி


9உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11“நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை” என்று அக்குரல் கூறியது.


12என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்.✠ 14அவருடைய தலைமுடி வெண் கம்பளிபோலும் உறைபனிபோலும் வெண்மையாய் இருந்தது. அவருடைய கண்கள் தீப்பிழம்புபோலச் சுடர் விட்டன.✠ 15அவருடைய காலடிகள் உலையிலிட்ட வெண்கலம்போலப் பளபளத்தன. அவரது குரல் பெரும் வெள்ளத்தின் இரைச்சலை ஒத்திருந்தது.✠ 16அவர் தம் வலக்கையில் ஏழு விண்மீன்களைக் கொண்டிருந்தார். இருபுறமும் கூர்மையான வாள் ஒன்று அவரது வாயிலிருந்து வெளியே வந்தது. அவரது முகம் நண்பகல் கதிரவன் போல் ஒளிர்ந்தது.


17நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; “அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. 18வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு.✠ 19எனவே, நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை. 20எனது வலக்கையில் நீ கண்ட ஏழு விண்மீன்கள், ஏழு பொன் விளக்குத்தண்டுகள் ஆகியவற்றின் மறைபொருள் இதுவே; ஏழு விண்மீன்கள் ஏழு திருச்சபைகளின் வான தூதர்களையும், ஏழு விளக்குத்தண்டுகள் ஏழு திருச்சபைகளையும் குறிக்கும்.


1:4 விப 3:14; திவெ 4:5. 1:5 எசா 55:4; திபா 89:27. 1:6 விப 19:6; திவெ 5:10. 1:7 தானி 7:13; செக் 12:10; மத் 24:30; மாற் 13:26; லூக் 21:27; யோவா 19:34,37; 1 தெச 4:17. 1:8 திவெ 22:13; விப 3:14. 1:13 தானி 7:13; 10:5. 1:14 தானி 7:9. 1:14-15 தானி 10:6. 1:15 எசே 1:24; 43:2. 1:18 எசா 44:6; 48:12; திவெ 2:8; 22:13.


>

1:4 * ஆசியா என்பது உரோமைமாநிலங்களுள் ஒன்று. இது இன்றைய துருக்கி நாட்டின்ஒரு பகுதி ஆகும். 1:8 கிரேக்க நெடுங்கணக்கில் முதல், கடைசி எழுத்துகளான ‘அல்பாவும் ஒமேகாவும் நானே’ என்பது மூலப்பாடம்.


அதிகாரம் 2

எபேசுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


1“எபேசில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தமது வலக்கையில் ஏழு விண்மீன்களை உறுதியாய்ப் பிடித்துக்கொண்டு, ஏழுபொன் விளக்குத்தண்டுகள் நடுவில் நடப்பவர் கூறுவது இதுவே: 2உன் செயல்களையும் கடின உழைப்பையும் மனவுறுதியையும் நான் அறிவேன். தீயவர்களை உன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்பதும், திருத்தூதர்களாய் இல்லாதிருந்தும் தங்களை அவ்வாறு திருத்தூதர்கள் என அழைத்துக் கொள்ளுகின்றவர்களை நீ சோதித்துப் பார்த்து, அவர்கள் பொய்யர்கள் என்று கண்டறிந்தாய் என்பதும் எனக்குத் தெரியும். 3நீ மனவுறுதி கொண்டுள்ளாய்; என் பெயரின்பொருட்டு எத்தனையோ துன்பங்களை நீ தாங்கிக் கொண்டுள்ளாய்; ஆயினும் சோர்வு அடையவில்லை என்பதும் எனக்குத் தெரியும். 4ஆனால், உன்னிடம் நான் காணும் குறை யாதெனில், முதலில் உன்னிடம் விளங்கிய அன்பு இப்போது இல்லை. 5ஆகையால், நீ எந்நிலையிலிருந்து தவறி விழுந்து விட்டாய் என்பதை நினைத்துப்பார்; மனம்மாறு; முதலில் நீ செய்து வந்த செயல்களை இப்பொழுதும் செய். நீ மனம் மாறத் தவறினால், நான் உன்னிடம் வந்து உனது விளக்குத்தண்டை அது இருக்கும் இடத்திலிருந்து அகற்றிவிடுவேன். 6இருப்பினும், உன்னிடம் நல்லது ஒன்றும் உண்டு. நான் வெறுக்கிற நிக்கொலாயரின் செயல்களை நீயும் வெறுக்கிறாய். 7கேட்கச்செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். கடவுளின் தோட்டத்தில் உள்ள வாழ்வு தரும் மரத்தினுடைய கனியை வெற்றி பெறுவோருக்கு உண்ணக் கொடுப்பேன்.’✠


சிமிர்னாவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


8“சிமிர்னாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘முதலும் முடிவும் ஆனவர், இறந்தும் வாழ்பவர் கூறுவது இதுவே: 9உன் துன்பத்தையும் ஏழ்மையையும் நான் அறிவேன். ஆனால், உண்மையில் நீ செல்வம் பெற்றிருக்கிறாய் அன்றோ! தாங்கள் யூதர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் உன்னைப் பழித்துப் பேசுவதும் எனக்குத் தெரியும். அவர்கள் யூதர்கள் அல்ல; சாத்தானுடைய கூட்டமே. 10உனக்கு வரவிருக்கின்ற துன்பத்தைப்பற்றி அஞ்சாதே. இதோ! சோதிப்பதற்காக அலகை உன்னைச் சேர்ந்தோருள் சிலரைச் சிறையில் தள்ளவிருக்கின்றது. பத்து நாள் நீ வேதனையுறுவாய். இறக்கும்வரை நம்பிக்கையோடு இரு. அவ்வாறாயின் வாழ்வை உனக்கு முடியாகச் சூட்டுவேன். 11கேட்கச் செவியுடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். வெற்றி பெறுவோரை இரண்டாவது சாவு தீண்டவே தீண்டாது.’”✠


பெர்காமுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


12“பெர்காமில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘இருபுறமும் கூர்மையான வாளைக் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: 13நீ எங்குக் குடியிருக்கிறாய் என நான் அறிவேன். அங்கேதான் சாத்தானின் அரியணை உள்ளது. நீ என் பெயர் மீது உறுதியான பற்றுக் கொண்டுள்ளாய்; சாத்தான் குடியிருக்கும் இடத்தில், நம்பிக்கையுள்ள என் சாட்சியான அந்திப்பா உங்கள் நடுவே கொலை செய்யப்பட்ட காலத்தில்கூட நீ என்மீது கொண்டிருந்த நம்பிக்கையை விட்டு விலகவில்லை. 14ஆயினும், உன்னிடம் நான் காணும் குறைகள் சில உண்டு; பிலயாமின் போதனையில் பிடிப்புள்ள சிலர் உன் நடுவே உள்ளனர். இந்தப் பிலயாம்தான் இஸ்ரயேல் மக்கள் இடறிவிழும்படி செய்யப் பாலாக்குக்குக் கற்றுக்கொடுத்தவன். அதனால் அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்டு பரத்தைமையில் ஈடுபட்டார்கள்.✠ 15இதுபோலவே நிக்கொலாயரின் போதனையில் பிடிப்புள்ள சிலரும் உன் நடுவில் உள்ளனர். 16ஆகவே, மனம்மாறு. இல்லையேல், நான் விரைவில் உன்னிடம் வருவேன்; என் வாயிலிருந்து வெளிவரும் வாள்கொண்டு அவர்களோடு போர்த்தொடுப்பேன்.


17கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும். மறைத்து வைக்கப்பட்டுள்ள மன்னாவை வெற்றி பெறுவோருக்கு அளிப்பேன்; வெள்ளைக் கல் ஒன்றையும் அவர்களுக்குக் கொடுப்பேன். அதில் ஒரு புதிய பெயர் பொறிக்கப்பட்டிருக்கும். அதைப் பெறுபவரேயன்றி வேறு யாரும் அப்பெயரை அறியார்.’


தியத்திராவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


18“தியத்திராவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தீப்பிழம்பு போன்ற கண்களும் வெண்கலம் போன்ற காலடிகளும் கொண்ட இறைமகன் கூறுவது இதுவே: 19உன் செயல்களை நான் அறிவேன். உன் அன்பு, நம்பிக்கை, திருத்தொண்டு, மனவுறுதி ஆகியவை எனக்குத் தெரியும்; நீ இப்பொழுது செய்துவரும் செயல்கள் முதலில் செய்தவற்றைவிட மிகுதியானவை என்பதும் தெரியும். 20ஆயினும், உன்னிடம் நான் காணும் குறை ஒன்று உண்டு. இசபேல் என்னும் பெண்ணை நீ கண்டிக்காமல் விட்டு வைத்திருக்கிறாய். தான் ஒரு இறைவாக்கினள் எனக் கூறிக்கொள்ளும் அவள் என் பணியாளர்களை நெறி பிறழச் செய்து அவர்கள் பரத்தைமையில் ஈடுபடவும் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்ணவும் போதித்து வருகிறாள்.✠ 21அவள் மனம் மாற வாய்ப்புக் கொடுத்தேன். அவளோ தன் பரத்தைமையை விட்டு மனம்மாற விரும்பவில்லை. 22இதோ, அவளைப் படுத்த படுக்கையாக்குவேன். அவளோடு விபசாரம் செய்வோர் அவள் தீச்செயல்களை விட்டுவிட்டு மனம் மாறாவிட்டால், அவர்களையும் கொடிய வேதனைக்கு உள்ளாக்குவேன்.23அவளுடைய பிள்ளைகளைக் கொன்றொழிப்பேன். அப்பொழுது உள்ளங்களையும் இதயங்களையும் துருவி ஆய்கிறவர் நானே என்பதை எல்லாத் திருச்சபைகளும் அறிந்துகொள்ளும். உங்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பக் கைம்மாறு அளிப்பேன்.✠


24தியத்திராவில் இருக்கும் ஏனையோரே, நீங்கள் இந்தப் போதனையை ஏற்கவில்லை. ‘சாத்தானின் ஆழ்ந்த ஞானம்’ எனச் சொல்லப்படுவதை நீங்கள் அறிய விரும்பவில்லை. எனவே, நான் உங்களுக்குச் சொல்வது: உங்கள்மீது வேறு எச்சுமையையும் நான் சுமத்தமாட்டேன். 25நீங்கள் பெற்றுக்கொண்ட போதனையில் நான் வரும்வரை பிடிப்புள்ளவர்களாய் இருங்கள். 26-28என் தந்தையிடமிருந்து நான் அதிகாரம் பெற்றிருப்பதுபோல, வெற்றி பெறுவோருக்கும் என் செயல்களை இறுதிவரை செய்வோருக்கும், “வேற்றினத்தார் மீது அதிகாரம் அளிப்பேன். அவர்கள் வேற்றினத்தாரை இருப்புக்கோலால் நடத்துவார்கள்; குயவர்கலத்தைப் போல நொறுக்குவார்கள்.’ விடிவெள்ளியையும் அவர்களுக்குக் கொடுப்பேன்.


29கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.”


2:7 தொநூ 2:9; நீமொ 3:18; திவெ 22:2. 2:11 திவெ 20:14; 21:8. 2:14 எண் 22:5,7; 25:1-3; 31:16; இச 23:4. 2:20 1 அர 16:31; 2 அர 9:22,30. 2:23 திபா 7:9; எரே 17:10; திபா 62:12. 2:26-27 திபா 2:8,9.


அதிகாரம் 3

சர்தைக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


1“சர்தையில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘கடவுளுடைய ஏழு ஆவிகளையும் ஏழு விண்மீன்களையும் கொண்டிருப்பவர் கூறுவது இதுவே: உன் செயல்களை நான் அறிவேன். நீ பெயரளவில்தான் உயிரோடிருக்கிறாய்; உண்மையில் இறந்துவிட்டாய். 2எனவே, விழிப்பாயிரு. உன்னில் எஞ்சியிருப்பதை உறுதிப்படுத்து. அது இறக்கும் தறுவாயில் உள்ளது. என் கடவுள் திருமுன் உன் செயல்கள் நிறைவற்றவையாய் இருக்கக் கண்டேன். 3நீ கற்றதையும் கேட்டதையும் நினைவில் கொள்; அவற்றைக் கடைப்பிடி; மனம் மாறு; நீ விழிப்பாயிரு. இல்லையேல் நான் திருடனைப் போல வருவேன். நான் எந்த நேரத்தில் உன்னிடம் வருவேன் என்பதை நீ அறியாய்.✠ 4ஆயினும், தங்கள் ஆடைகளைக் கறைப்படுத்திக்கொள்ளாத சிலர் சர்தையில் உள்ளனர். அவர்கள் வெண்ணாடை அணிந்து என்னுடன் நடந்து வருவார்கள். அவர்கள் அதற்குத் தகுதி பெற்றவர்களே. 5வெற்றிபெற்றோர் இவ்வாறு வெண்ணாடை அணிவிக்கப்பெறுவர். வாழ்வின் நூலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்கிவிட மாட்டேன். மாறாக, என் தந்தை முன்னிலையிலும் அவருடைய வானதூதர்கள் முன்னிலையிலும் அவர்களின் பெயர்களை அறிக்கையிடுவேன்.✠ 6கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’


பிலதெல்பியாவுக்கு விடுக்கப்பெற்ற மடல்


7“பிலதெல்பியாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘தூயவரும் உண்மையுள்ளவரும் தாவீதின் திறவுகோலைக் கொண்டிருப்பவரும் எவரும் பூட்ட முடியாதவாறு திறந்து விடுபவரும் எவரும் திறக்க முடியாதவாறு பூட்டிவிடுபவரும்’ கூறுவது இதுவே:✠

8உன் செயல்களை நான் அறிவேன். இதோ, எவராலும் பூட்ட முடியாத கதவை நான் உனக்குமுன் திறந்து வைத்திருக்கிறேன். சிறிதளவு வலிமைதான் உன்னிடம் இருக்கிறது. இருப்பினும், நீ என் வாக்கைக் கடைப்பிடித்தாய்; என் பெயரை மறுதலிக்கவில்லை. 9சாத்தானின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் யூதர்கள் எனக் கூறிக் கொள்கிறார்கள். அவர்கள் யூதர்களே அல்ல, பொய்யர்கள். அவர்கள் உன்னிடம் வந்து, உன் காலடியில் விழுந்து பணியச் செய்வேன்; நான் உன்மீது அன்பு செலுத்திவருகிறேன் என்பதையும் அறியச்செய்வேன்.✠ 10மனவுறுதி தரும் என் வாக்கை நீ கடைப்பிடித்ததால், மண்ணுலகில் வாழ்வோரைச் சோதிக்க உலகு அனைத்தின்மீதும் வரவிருக்கும் சோதனைக் காலத்தில் நான் உன்னைக் காப்பாற்றுவேன்.

11இதோ, விரைவில் வருகிறேன். உனக்குரிய மணிமுடியை வேறு யாரும் பறித்துக்கொள்ளாதபடி பார்த்துக் கொள். நீ பெற்றுக்கொண்டதை உறுதியாகப் பற்றிக்கொள். 12வெற்றி பெறுவோரை என் கடவுளின் கோவிலில் தூணாக நாட்டுவேன். அவர்கள் அதை விட்டு ஒருபொழுதும் நீங்கமாட்டார்கள். என் கடவுளின் பெயரையும் என் கடவுளுடைய நகரின் பெயரையும், அதாவது என் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருகின்ற புதிய எருசலேமின் பெயரையும் என் புதிய பெயரையும் அவர்கள்மீது பொறிப்பேன்.✠ 13கேட்கச் செவி உடையோர் திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’


இலவோதிக்கேயாவுக்கு விடுக்கப்பெற்ற திருமுகம்


14“இலவோதிக்கேயாவில் உள்ள திருச்சபையின் வானதூதருக்கு இவ்வாறு எழுது: ‘ஆமென் எனப்படுபவரும் நம்பிக்கைக்குரிய, உண்மையான சாட்சியும் கடவுளது படைப்பின் தொடக்கமும் ஆனவர் கூறுவது இதுவே:✠ 15உன் செயல்களை நான் அறிவேன். நீ குளிர்ச்சியாகவும் இல்லை, சூடாகவும் இல்லை. குளிர்ச்சியாகவோ சூடாகவோ இருந்திருந்தால் எத்துணை நலமாய் இருந்திருக்கும். 16இவ்வாறு, நீ குளிர்ச்சியாகவோ சூடாகவோ இல்லாமல் வெதுவெதுப்பாய் இருப்பதால் என் வாயிலிருந்து உன்னைக் கக்கிவிடுவேன். 17“எனக்குச் செல்வம் உண்டு, வளமை உண்டு, ஒரு குறையும் இல்லை” என நீ சொல்லிக்கொள்ளுகிறாய். ஆனால், நீ இழிந்த, இரங்கத்தக்க, வறிய, பார்வையற்ற, ஆடையற்ற நிலையில் இருக்கிறாய் என்பது உனக்குத் தெரியவில்லை. 18ஆகவே, நீ செல்வம் பெறும்பொருட்டு புடம்போட்ட பொன்னையும், ஆடையின்றி வெட்கி நிற்கும் உன் நிலையைப் பிறர் காணாதபடி அணிந்துகொள்ள வெண்ணாடையையும், நீ பார்வை பெறும்பொருட்டு உன் கண்களில் தடவிக்கொள்ள மருந்தையும் என்னிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுமாறு உனக்கு அறிவுரை வழங்குகிறேன். 19நான் யார் மீது அன்பு செலுத்துகிறேனோ அவர்களைக் கடிந்து தண்டித்துத் திருத்துகிறேன். ஆகவே, நீ ஆர்வம் கொண்டு மனம் மாறு.✠ 20இதோ, நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கிறேன். யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன்; அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். 21நான் வெற்றி பெற்று என் தந்தையின் அரியணையில் அவரோடு வீற்றிருப்பது போல, வெற்றி பெறும் எவருக்குமே எனது அரியணையில் என்னோடு வீற்றிருக்கும் உரிமை அளிப்பேன். 22கேட்கச் செவி உடையோர், திருச்சபைகளுக்குத் தூய ஆவியார் கூறுவதைக் கேட்கட்டும்.’


3:3 மத் 24:43,44; லூக் 12:39,40; திவெ 16:15. 3:5 விப 32:32,33; திபா 69:28; திவெ 20:12; மத் 10:32; லூக் 12:8. 3:7 எசா 22:22; யோபு 12:14. 3:9 எசா 49:23; 60:14; எசா 43:4. 3:12 எசா 62:2; 65:15. 3:14 நீமொ 8:22. 3:19 நீமொ 3:12; எபி 12:.


அதிகாரம் 4

3. ஏழு முத்திரைகளுள்ள சுருளேடு

விண்ணக வழிபாடு

1இதன்பின், நான் ஒரு காட்சி கண்டேன்; விண்ணகத்தில் ஒரு கதவு திறந்திருந்தது. நான் முதலில் கேட்ட அதே குரல் எக்காளம்போல முழங்கியது: ‟இவ்விடத்துக்கு ஏறி வா. இனி நடக்கவேண்டியதை உனக்குக் காட்டுவேன்” என்றது. 2உடனே தூய ஆவி என்னை ஆட்கொண்டது. விண்ணகத்தில் அரியணை ஒன்று இருந்தது. அதில் ஒருவர் வீற்றிருந்தார். 3அவரது தோற்றம் படிகக்கல் போலும் மாணிக்கம்போலும் இருந்தது. மரகதம் போன்ற வானவில் அந்த அரியணையைச் சூழ்ந்திருந்தது. 4அரியணையைச் சுற்றி இருபத்து நான்கு அரியணைகள் போடப்பட்டிருந்தன. அவற்றில் இருபத்து நான்கு மூப்பர்கள் வீற்றிருந்தார்கள். அவர்கள் வெண்ணாடை அணிந்திருந்தார்கள்; தலையில் பொன்முடி சூடியிருந்தார்கள். 5அரியணையிலிருந்து மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் கிளம்பின. அரியணைமுன் ஏழு தீவட்டிகள் எரிந்துகொண்டிருந்தன. அவை கடவுளின் ஏழு ஆவிகளே.✠ 6aஅரியணை முன் பளிங்கையொத்த தெளிந்த கடல் போன்ற ஒன்று தென்பட்டது.

6bநடுவில் அரியணையைச் சுற்றிலும் நான்கு உயிர்கள் காணப்பட்டன. முன்புறமும் பின்புறமும் அவற்றுக்குக் கண்கள் இருந்தன. 7அவ்வுயிர்களுள் முதலாவது சிங்கம் போலும், இரண்டாவது இளங்காளை போலும் தோன்றின. மூன்றாவதற்கு மனித முகம் இருந்தது, நான்காவது பறக்கும் கழுகை ஒத்திருந்தது. 8இந்த நான்கு உயிர்கள் ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன; உள்ளும் புறமும் கண்கள் நிறைந்திருந்தன.

‟தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர்; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவரும் இவரே”

என்று அந்த உயிர்கள் அல்லும் பகலும் இடையறாது பாடிக்கொண்டிருந்தன.✠ 9அரியணையில் வீற்றிருப்பவரை, என்றென்றும் வாழ்பவரை அவை போற்றிப் புகழ்ந்து அவருக்கு நன்றி செலுத்தியபோதெல்லாம், 10இருபத்து நான்கு மூப்பர்கள் அரியணையில் வீற்றிருந்தவர்முன் விழுந்து, என்றென்றும் வாழ்கின்ற அவரை வணங்கினார்கள். தங்கள் பொன் முடிகளை அரியணைமுன் வைத்து,

11“எங்கள் ஆண்டவரே, எங்கள் கடவுளே, மாட்சியும் மாண்பும் வல்லமையும் பெற நீர் தகுதி பெற்றவர்; ஏனெனில் அனைத்தையும் படைத்தவர் நீரே. உமது திருவுளப்படியே அவை உண்டாயின, படைக்கப்பட்டன” என்று பாடினார்கள்.


4:2-3 எசே 1:26-28; 10:1. 4:5 விப 19:16; திவெ 1:4; 8:5; 11:19; 16:18. 4:6 எசே 1:22. 4:8 எசே 1:18; 10:12; எசா 6:3.


அதிகாரம் 5

ஆட்டுக்குட்டியும் சுருளேடும்


1அரியணையில் வீற்றிருந்தவரது வலக்கையில் ஒரு சுருளேட்டைக் கண்டேன். அதில் உள்ளும் புறமும் எழுதியிருந்தது; அது ஏழு முத்திரை பொறிக்கப் பெற்று மூடப்பட்டிருந்தது.✠ 2“முத்திரைகளை உடைத்து, ஏட்டைப் பிரிக்கத் தகுதி பெற்றவர் யார்?” என்று வலிமைமிக்க வானதூதர் ஒருவர் உரத்த குரலில் முழங்கக் கண்டேன். 3நூலைத் திறந்து படிக்க விண்ணுலகிலோ மண்ணுலகிலோ கீழுலகிலோ இருந்த எவராலும் இயலவில்லை. 4சுருளேட்டைப் பிரித்துப் படிக்கத் தகுதி பெற்றவர் எவரையும் காணவில்லையே என்று நான் தேம்பி அழுதேன். 5அப்பொழுது மூப்பருள் ஒருவர் என்னிடம், “அழாதே, யூதா குலத்தின் சிங்கமும் தாவீதின் குலக்கொழுந்துமானவர் வெற்றி பெற்று விட்டார்; அவர் அந்த ஏழு முத்திரைகளையும் உடைத்து ஏட்டைப் பிரித்து விடுவார்” என்று கூறினார்.✠

6அந்த நான்கு உயிர்களும் மூப்பர்களும் புடை சூழ, அரியணை நடுவில் ஆட்டுக்குட்டி ஒன்று நிற்கக் கண்டேன். கொல்லப்பட்டதுபோல் அது காணப்பட்டது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அக்கண்கள் மண்ணுலகெங்கும் அனுப்பப்பெற்ற கடவுளின் ஏழு ஆவிகளே.✠ 7ஆட்டுக்குட்டி முன்சென்று, அரியணையில் வீற்றிருந்தவரின் வலக்கையிலிருந்து அந்த ஏட்டை எடுத்தது. 8அப்பொழுது அந்த நான்கு உயிர்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் ஆட்டுக்குட்டிமுன் வீழ்ந்தார்கள்; அவர்கள் ஒவ்வொருவரும் யாழும், சாம்பிராணி நிறைந்த பொற் கிண்ணங்களும் வைத்திருந்தார்கள். இறைமக்களின் வேண்டுதல்களே அக்கிண்ணங்கள்.✠ 9அவர்கள் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள்:

“ஏட்டை எடுக்கவும் அதன் முத்திரைகளை உடைத்துப் பிரிக்கவும் தகுதி பெற்றவர் நீரே. நீர் கொல்லப்பட்டீர்; உமது இரத்தத்தால் குலம், மொழி, நாடு, மக்களினம் ஆகிய அனைத்தினின்றும் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். ✠ 10ஆட்சியுரிமை பெற்றவர்களாகவும் குருக்களாகவும் அவர்களை எங்கள் கடவுளுக்காக ஏற்படுத்தினீர். அவர்கள் மண்ணுலகின்மீது ஆட்சி செலுத்துவார்கள்.”✠

11தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது, அரியணையையும் உயிர்களையும் மூப்பர்களையும் சுற்றி நின்ற கோடிக்கணக்கான வானதூதர்களின் குரலைக் கேட்டேன்:✠ 12“கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டி வல்லமையும் செல்வமும் ஞானமும் ஆற்றலும் மாண்பும் பெருமையும் புகழ்ச்சியும் பெறத் தகுதி பெற்றது”

என்று அவர்கள் உரத்த குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். 13பின்பு, விண்ணுலகு, மண்ணுலகு, கீழுலகு, கடல் எங்கும் இருந்த படைப்புகள் அனைத்தும், அவற்றில் இருந்த ஒவ்வொன்றும், “அரியணையில் வீற்றிருப்பவருக்கும் ஆட்டுக்குட்டிக்கும் புகழ்ச்சியும் மாண்பும் பெருமையும் ஆற்றலும் என்றென்றும் உரியன” என்று பாடக் கேட்டேன். 14அதற்கு அந்த நான்கு உயிர்களும், ‘ஆமென்’ என்றன. மூப்பர்கள் விழுந்து வணங்கினார்கள்.


5:1 எசே 2:9,10; எசா 29:11. 5:5 விப 49:9; எசா 11:1,10. 5:6 எசா 53:7. 5:8 திபா 141:2. 5:9 திபா 33:3; 98:1; எசா 42:10. 5:10 விப 19:6; திவெ 1:6. 5:11 தானி 7:10.


அதிகாரம் 6

ஏழு முத்திரைகள்


1பின்னர், ஆட்டுக்குட்டி ஏழு முத்திரைகளுள் முதலாவதை உடைக்கக் கண்டேன். அப்பொழுது நான்கு உயிர்களுள் முதலாவது “வா” என்று இடிமுழக்கம் போன்ற குரலில் அழைக்கக் கேட்டேன். 2உடனே, ஒரு வெள்ளைக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரிடம் ஒரு வில் இருந்தது. அவருக்கு வாகை சூட்டப்பட்டது. வெற்றிமேல் வெற்றி கொள்ள அவர் வெளியே புறப்பட்டுச் சென்றார்.✠

3ஆட்டுக்குட்டி இரண்டாவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் இரண்டாவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன். 4அப்பொழுது சிவப்புக் குதிரை ஒன்று வெளியே வந்தது. அதன்மேல் ஏறியிருந்தவருக்கு, உலகில் அமைதியைக் குலைக்க அதிகாரம் கொடுக்கப்பட்டது; பெரியதொரு வாளும் அளிக்கப்பட்டது. மனிதர் தம்முள் ஒருவரை ஒருவர் படுகொலை செய்ய வேண்டுமென்றே இவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.✠

5ஆட்டுக்குட்டி மூன்றாவது முத்திரையை உடைத்தபொழுது, அவ்வுயிர்களுள் மூன்றாவது “வா” என்று அழைக்கக் கேட்டேன்; தொடர்ந்து ஒரு கறுப்புக் குதிரையைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவருடைய கையில் ஒரு நிறைகோல் இருந்தது.✠ 6நான்கு உயிர்களின் நடுவில் மனிதக் குரல் போன்ற ஓசை ஒன்று கேட்டது. அது, “ஒரு தெனாரியத்துக்கு⁕ கோதுமை அரைப்படி; வாற்கோதுமை ஒன்றரைப் படி; எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் சேதப்படுத்தவேண்டாம்” என்றது.

7ஆட்டுக்குட்டி நான்காவது முத்திரையை உடைத்தபொழுது அவ்வுயிர்களுள் நான்காவது, “வா” என்று அழைக்கக் கேட்டேன். 8தொடர்ந்து வெளிறிய பச்சைக் குதிரை ஒன்றைக் கண்டேன். அதன்மேல் ஏறியிருந்தவரின் பெயர் சாவு. பாதாளமும் அவரோடு சென்றது. வாள், பஞ்சம், கொள்ளைநோய் ஆகியவற்றாலும் மண்ணுலகின் விலங்குகளாலும் உலகின் கால் பகுதியை அழிக்க சாவுக்கும் பாதாளத்துக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டது.✠

9ஆட்டுக்குட்டி ஐந்தாவது முத்திரையை உடைத்தபொழுது, கடவுளின் வாக்கை அறிவித்துச் சான்று பகர்ந்ததற்காகக் கொலை செய்யப்பட்டவர்களின் ஆன்மாக்களைப் பலிபீடத்தின் அடியில் கண்டேன். 10அவர்கள் உரத்த குரலில், “தூய்மையும் உண்மையும் உள்ள தலைவரே, எவ்வளவு காலம் உலகில் வாழ்வோருக்கு நீர் தீர்ப்பு அளிக்காமல் இருப்பீர்? எங்களைக் கொலை செய்ததன் பொருட்டு எவ்வளவு காலம் அவர்களைப் பழிவாங்காமல் இருப்பீர்?” என்று கேட்டார்கள். 11அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வெண்மையான தொங்கலாடை அளிக்கப்பட்டது. இன்னும் சிறிது நேரம், அதாவது அவர்களின் உடன் பணியாளர்களான சகோதரர் சகோதரிகளும் அவர்களைப்போலவே கொல்லப்படவிருந்த காலம் நிறைவேறும் வரை அவர்கள் பொறுத்திருக்குமாறு அவர்களுக்குச் சொல்லப்பட்டது.

12ஆட்டுக்குட்டி ஆறாவது முத்திரையை உடைக்கக் கண்டேன். அப்பொழுது பெரியதொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. கதிரவன் கறுப்புச் சாக்குத் துணி போலக் கறுத்தது. நிலவு முழுவதும் இரத்தம் போல் சிவந்தது.✠ 13பெரும் காற்று அடிக்கும்பொழுது அத்திமரத்திலிருந்து காய்கள் உதிர்வது போன்று விண்மீன்கள் நிலத்தின்மீது விழுந்தன. 14சுருளேடு சுருட்டப்படுவதுபோல வானமும் சுருட்டப்பட்டு மறைந்தது. மலைகள், தீவுகள் எல்லாம் நிலை பெயர்ந்துபோயின. 15மண்ணுலகில் அரசர்கள், உயர்குடி மக்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், செல்வர், வலியோர், அடிமைகள், உரிமைக் குடிமக்கள் ஆகிய அனைவரும் குகைகளிலும் மலைப் பாறைகளின் இடுக்குகளிலும் ஒளிந்து கொண்டார்கள்.✠ 16அவர்கள் அந்த மலைகளிடமும் பாறைகளிடமும், “எங்கள்மீது விழுங்கள், அரியணை மேல் வீற்றிருப்பவருடைய முகத்தினின்றும் ஆட்டுக்குட்டியின் சினத்தினின்றும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;✠ 17ஏனெனில், அவர்களது சினம் வெளிப்படும் கொடிய நாள் வந்துவிட்டது. அதற்குமுன் நிற்க யாரால் இயலும்?” என்று புலம்பினார்கள்.✠


6:2 செக் 1:8; 6:3,6. 6:4 செக் 1:8; 6:2. 6:5 செக் 6:2,6. 6:8 எசே 14:21. 6:12 எசா 13:10; யோவே 2:10,31; 3:15; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25. 6:13-14 எசா 34:4. 6:15 எசா 2:19,21. 6:16 ஓசே10:8; லூக் 23:30. 6:17 யோவே 2:11; மலா 3:2.


6:6 ‘தெனாரியம்’ என்பது ஒரு நாள் கூலிக்கு இணையான உரோமை வெள்ளி நாணயம்.


அதிகாரம் 7

புதிய இஸ்ரயேல்


1இதன்பின் உலகின் நான்கு மூலைகளிலும் நான்கு வானதூதர்கள் நிற்கக் கண்டேன். உலகின் மீதும் கடல்மீதும் மரத்தின்மீதும் காற்று வீசாதவாறு காற்று வகைகள் நான்கினையும் அவர்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.✠ 2கதிரவன் எழும் திசையிலிருந்து மற்றொரு வானதூதர் எழுந்து வரக் கண்டேன். வாழும் கடவுளின் முத்திரை அவரிடம் இருந்தது. நிலத்தையும் கடலையும் அழிக்க அதிகாரம் பெற்றிருந்த அந்த நான்கு வானதூதர்களையும் அவர் உரத்த குரலில் அழைத்து, 3“எங்கள் கடவுளுடைய பணியாளர்களின் நெற்றியில் நாங்கள் முத்திரையிடும்வரை நிலத்தையோ கடலையோ மரத்தையோ அழிக்க வேண்டாம்” என்று அவர்களிடம் கூறினார்.✠ 4முத்திரையிடப்பட்டவர்களின் எண்ணிக்கைபற்றிச் சொல்லக் கேட்டேன். இஸ்ரயேல் மக்களின் குலங்கள் அனைத்திலும் முத்திரையிடப்பட்டவர்கள் ஓர் இலட்சத்து நாற்பத்து நான்கு ஆயிரம்.

5யூதா குலத்தில் முத்திரையிடப் பட்டவர்கள் பன்னிரண்டு ஆயிரம், ரூபன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், காத்து குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், 6ஆசேர் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், நப்தலி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், மனாசே குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், 7சிமியோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், லேவி குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், இசக்கார் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், 8செபுலோன் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், யோசேப்பு குலத்தில் பன்னிரண்டு ஆயிரம், பென்யமின் குலத்தில் பன்னிரண்டு ஆயிரம்.

9இதன்பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன். அவர்கள் எல்லா நாட்டையும், குலத்தையும் மக்களினத்தையும் மொழியையும் சார்ந்தவர்கள்; அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்தார்கள்; வெண்மையான தொங்கலாடை அணிந்தவர்களாய்க் கையில் குருத்தோலைகளைப் பிடித்திருந்தார்கள்.

10அவர்கள், “அரியணையில் வீற்றிருக்கும் எங்கள் கடவுளிடமிருந்தும் ஆட்டுக் குட்டியிடமிருந்துமே மீட்பு வருகிறது” என்று உரத்த குரலில் பாடினார்கள்.

11அப்பொழுது வானதூதர்கள் அனைவரும் அரியணையையும் மூப்பர்களையும் நான்கு உயிர்களையும் சூழ்ந்து நின்றுகொண்டிருந்தார்கள்; பின் அரியணைமுன் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். 12“ஆமென், புகழ்ச்சியும் பெருமையும் ஞானமும் நன்றியும் மாண்பும் வல்லமையும் வலிமையும் எங்கள் கடவுளுக்கே என்றென்றும் உரியன; ஆமென்” என்று பாடினார்கள்.

13மூப்பர்களுள் ஒருவர், “வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?” என்று என்னை வினவினார். 14நான் அவரிடம், “என் தலைவரே, அது உமக்குத்தான் தெரியும்” என்றேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது: “இவர்கள் கொடிய வேதனையிலிருந்து மீண்டவர்கள்; தங்களின் தொங்கலாடைகளை ஆட்டுக்குட்டியின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கிக் கொண்டவர்கள்.✠

15இதனால்தான் கடவுளது அரியணைமுன் நின்றுகொண்டு அவரது கோவிலில் அல்லும் பகலும் அவரை வழிபட்டுவருகிறார்கள்; அரியணையில் வீற்றிருப்பவர் அவர்களிடையே குடிகொண்டு அவர்களைப் பாதுகாப்பார். 16இனி அவர்களுக்குப் பசியோ தாகமோ இரா; கதிரவனோ எவ்வகை வெப்பமோ அவர்களைத் தாக்கா.✠ 17ஏனெனில் அரியணை நடுவில் இருக்கும் ஆட்டுக்குட்டி அவர்களை மேய்க்கும்; வாழ்வு அளிக்கும் நீரூற்றுகளுக்கு வழிநடத்திச் செல்லும். கடவுள் அவர்களின் கண்ணீர் அனைத்தையும் துடைத்துவிடுவார்.”✠


7:1 எரே 49:36; தானி 7:2; செக் 6:5. 7:3 எசே 9:4,6. 7:14 தானி 12:1; மத் 24:21; மாற் 13:19. 7:16 எசா 49:10. 7:17 திபா 23:1-2; எசா 25:8; 49:10; எசே 34:23.


அதிகாரம் 8

ஏழாவது முத்திரை


1ஆட்டுக்குட்டி ஏழாவது முத்திரையை உடைத்தபொழுது விண்ணகத்தில் ஏறத்தாழ அரைமணி நேரம் அமைதி நிலவியது.


4. ஏழு எக்காளங்கள்


2பின் கடவுள்முன் நின்று கொண்டிருந்த ஏழு வானதூதர்களைக் கண்டேன். அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டன. 3மற்றொரு வானதூதர் பொன் தூபக் கிண்ணம் ஏந்தியவராய்ப் பலிபீடத்தின் அருகில் வந்து நின்றார். அரியணைமுன் இருந்த பொன் பலிபீடத்தின்மீது இறைமக்கள் அனைவரும் செய்த வேண்டுதல்களோடு படைக்குமாறு அவருக்கு மிகுதியான சாம்பிராணி வழங்கப்பட்டது.✠ 4அச்சாம்பிராணிப் புகை இறைமக்களின் வேண்டுதல்களோடு சேர்ந்து வானதூதரின் கையிலிருந்து கடவுள் திருமுன் எழும்பிச் சென்றது. 5பிறகு அந்த வானதூதர் தூபக் கிண்ணத்தை எடுத்து, பலிபீடத்தில் இருந்த நெருப்பினால் அதை நிரப்பி, மண்ணுலகின்மீது வீசியெறிந்தார். உடனே இடிமுழக்கமும் பேரிரைச்சலும் மின்னலும் நிலநடுக்கமும் உண்டாயின.✠


முதல் நான்கு எக்காளங்கள்


6அப்பொழுது ஏழு எக்காளங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் அவற்றை முழக்க ஆயத்தமானார்கள். 7முதல் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே இரத்தத்தோடு கலந்த கல்மழையும் நெருப்பும் நிலத்தின்மீது வந்து விழுந்தன. நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி எரிந்து போனது; மரங்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தீக்கிரையானது; பசும்புல் எல்லாமே சுட்டெரிக்கப்பட்டது.✠

8இரண்டாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீப்பற்றியெரிந்த பெரிய மலைபோன்ற ஒன்று கடலுக்குள் எறியப்பட்டது. இதனால் கடலின் மூன்றில் ஒரு பகுதி இரத்தமாக மாறியது. 9கடல்வாழ் உயிரினங்களுள் மூன்றில் ஒரு பகுதி மடிந்தது; கப்பல்களுள் மூன்றில் ஒரு பகுதி அழிந்தது.

10மூன்றாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே தீவட்டிபோன்று எரிந்துகொண்டிருந்த பெரிய விண்மீன் ஒன்று வானிலிருந்து பாய்ந்து வந்து ஆறுகளுள் மூன்றில் ஒருபகுதியிலும் நீரூற்றுகளிலும் விழுந்தது.✠ 11அந்த விண்மீனுக்கு ‘எட்டி’ என்பது பெயர். ஆகவே தண்ணீரில் மூன்றில் ஒரு பகுதி எட்டிபோலக் கசப்பானது. இவ்வாறு அந்தக் கசப்பான நீரைக் குடித்த மனிதர் பலர் இறந்தனர்.✠

12நான்காம் வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே கதிரவனின் மூன்றில் ஒரு பகுதியும் நிலாவின் மூன்றில் ஒரு பகுதியும் விண்மீன்களுள் மூன்றில் ஒரு பகுதியும் தாக்குண்டன. இதனால் அவற்றுள் மூன்றில் ஒரு பகுதி இருளடைந்தது; பகலின் மூன்றில் ஒரு பகுதி ஒளி குன்றியது. இரவுக்கும் அவ்வாறே ஆயிற்று.✠

13இதன்பின் நான் ஒரு காட்சி கண்டேன். நடுவானில் பறந்து கொண்டிருந்த கழுகு ஒன்று உரத்த குரலில், “மற்ற மூன்று வானதூதர்களும் எக்காளங்களை இதோ முழக்கவிருக்கிறார்கள். அந்தோ! உலகில் வாழ்வோர்க்கு கேடு வரும்! ஐயகோ!” என்று கத்தக் கேட்டேன்.


8:3 விப 30:1,3; ஆமோ 9:1. 8:5 விப 19:16; லேவி 16:12; எசே 10:2; திவெ 11:19; 16:18. 8:7 விப 9:23-25; எசே 38:32. 8:10 எசா 14:12. 8:11 எரே 9:15. 8:12 எசா 13:10; எசே 12:7; யோவே 2:10,31; 3:15.


அதிகாரம் 9

ஐந்தாம் எக்காளம்


1பிறகு, ஐந்தாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது வானிலிருந்து நிலத்தின்மீது விழுந்து கிடந்த ஒரு விண்மீனைக் கண்டேன். படுகுழி வாயிலின் திறவுகோல் அதற்குக் கொடுக்கப்பட்டது. 2அது படுகுழி வாயிலைத் திறக்கவே, பெரும் சூளையிலிருந்து புகை எழுவது போல் அக்குழியிலிருந்து புகை கிளம்பியது. அப்புகையால் கதிரவனும் வான்வெளியும் இருண்டு போயின.✠ 3புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் கிளம்பி நிலத்துக்கு வந்தன. நிலத்தில் ஊர்ந்து திரியும் தேள்களுக்கு உள்ள ஆற்றல் அவற்றுக்குக் கொடுக்கப்பட்டது.✠ 4நிலத்தின் புற்பூண்டுகளுக்கோ மரங்களுக்கோ தீங்கு இழைக்காமல், தங்கள் நெற்றியில் கடவுளின் முத்திரை இல்லாதவர்களுக்கு மட்டும் தீங்கு செய்யுமாறு அவற்றுக்குக் கட்டளையிடப்பட்டது.✠ 5ஆனால், அவர்களைக் கொல்லாமல் ஐந்து மாதம் வரை வதைக்க மட்டும் வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. தேள் மனிதரைக் கொட்டித் துன்புறுத்துவதுபோல் அவை அவர்களை வதைத்தன. 6அக்காலத்தில் மனிதர் சாவைத் தேடுவார்கள்; ஆனால், சாக மாட்டார்கள். சாக விரும்புவார்கள்; ஆனால், சாவு அவர்களை அணுகாது.✠

7போருக்கு ஆயத்தமாய் இருக்கும் குதிரைகளைப்போல் அந்த வெட்டுக்கிளிகள் காணப்பட்டன. அவற்றின் தலைகளில் பொன் முடிகள் போன்றவை தென்பட்டன. அவற்றின் முகங்கள் மனித முகங்கள்போல் இருந்தன.✠ 8அவற்றின் முடி பெண்களின் கூந்தலையும், பற்கள் சிங்கங்களின் பற்களையும் ஒத்திருந்தன.✠ 9அவற்றின் மார்பில் இரும்பாலான மார்புக் கவசம் அணிந்திருந்தது போலத் தோன்றியது. சிறகுகளின் இரைச்சல் போருக்கு விரையும் தேர்ப்படையின் இரைச்சல் போன்று இருந்தது.✠ 10தேள்களைப் போல் அவை வாலும், கொடுக்கும் கொண்டிருந்தன. ஐந்து மாதம் மனிதருக்குத் தீங்கு இழைக்கும் ஆற்றல் அவற்றின் வால்களில் இருந்தது. 11படுகுழியின் வானதூதரே அவற்றுக்கு அரசன். அவருக்கு எபிரேய மொழியில் ‘அபத்தோன்’⁕ என்றும், கிரேக்க மொழியில் ‘அப்பொல்லியோன்’ என்றும் பெயர். 12முதலாவது கேடு கடந்துவிட்டது. இதோ! இன்னும் இரண்டு கேடுகள் வரவிருக்கின்றன.


ஆறாம் எக்காளம்


13பிறகு, ஆறாம் வானதூதர் எக்காளம் முழக்கினார். அப்பொழுது கடவுள் திருமுன் இருந்த பொன் பலிபீடத்தின் நான்கு கொம்புகளிலிருந்தும் எழுந்த ஒரு குரலைக் கேட்டேன்.✠ 14அக்குரல் அந்த வானதூதரிடம், “யூப்பிரத்தீசு பேராற்றின் அருகில் கட்டப்பட்டுக் கிடக்கும் வானதூதர் நால்வரையும் அவிழ்த்துவிடு” என்றது. 15அவ்வாறே மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினரைக் கொல்லும்படி குறிக்கப்பட்டிருந்த ஆண்டு, மாதம், நாள், மணிக்காக ஆயத்தமாய் இருந்த அந்த நான்கு வானதூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 16குதிரைப்படையின் எண்ணிக்கையைச் சொல்லக் கேட்டேன். அது இருபது கோடி.

17நான் கண்ட காட்சியில், குதிரைகளையும் அவற்றின் மேல் ஏறியிருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் நெருப்பு, பதுமராகம், கந்தகம் ஆகியவற்றின் நிறங்களைக் கொண்ட மார்புக் கவசங்களை அணிந்திருந்தார்கள். அக்குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகள் போன்று இருந்தன; அவற்றின் வாயிலிருந்து நெருப்பும் புகையும் கந்தகமும் வெளிவந்தன. 18அவற்றின் வாயிலிருந்து வெளிப்பட்ட நெருப்பு, புகை, கந்தகம் ஆகிய இம்மூன்று வாதைகளால் மனிதருள் மூன்றில் ஒரு பகுதியினர் கொல்லப்பட்டனர். 19அக்குதிரைகளின் ஆற்றல் அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புபோன்று இருந்தன. அவை தங்கள் தலையைக்கொண்டு தீங்கு இழைத்து வந்தன.

20அந்த வாதைகளால் கொல்லப்படாமல் எஞ்சிய மனிதர்கள் தங்கள் செயல்களை விட்டு மனம் மாறவில்லை. பேய்களையும் பொன், வெள்ளி, வெண்கலம், கல், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாத சிலைகளையும் வணங்குவதை அவர்கள் விட்டுவிடவில்லை.✠ 21தாங்கள் செய்துவந்த கொலை, பில்லிசூனியம், பரத்தைமை, களவு ஆகியவற்றை விட்டு அவர்கள் மனம் மாறவில்லை.


9:2 தொநூ 19:28. 9:3 விப 10:12-15. 9:4 எசே 9:4. 9:6 யோபு 3:21; எரே 8:3. 9:7 யோவே 2:4. 9:8 யோவே 1:6. 9:9 யோவே 2:5. 9:13 விப 30:1-3. 9:20 திபா 115:4-7; 135:15-17; தானி 5:23.


9:11 ‘அபத்தோன்’ என்னும் சொல்லுக்கு ‘அழிப்போன்’ என்பது பொருள்.


அதிகாரம் 10

இறுதித் தண்டனை


1பின் வலிமைமிக்க வேறொரு வானதூதர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். அவர் மேகத்தை ஆடையாக அணிந்திருந்தார். அவரது தலைக்குமேல் ஒரு வானவில் இருந்தது; அவரது முகம் கதிரவன்போலவும் கால்கள் நெருப்புத் தூண்கள்போலவும் இருந்தன. 2திறக்கப்பட்ட ஒரு சிறிய சுருளேட்டை அவர் தம் கையில் வைத்திருந்தார். தம் வலது காலைக் கடலின் மீதும் இடது காலை நிலத்தின் மீதும் வைத்திருந்தார். 3சிங்கம் கர்ச்சிப்பது போல் உரத்த குரலில் கத்தினார். இவ்வாறு அவர் கத்தியபொழுது ஏழு இடிகள் முழங்கி எதிரொலித்தன. 4அந்த ஏழு இடிகளும் முழங்கியபொழுது நான் எழுத ஆயத்தமானேன். ஆனால் விண்ணகத்திலிருந்து வந்த ஒரு குரல், “ஏழு இடிகளும் சொன்னதை மறைத்து வை; எழுதாதே” என்று சொல்லக் கேட்டேன்.

5நான் கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கக் கண்ட வானதூதர் தம் வலக்கையை விண்ணகத்தை நோக்கி உயர்த்தினார். 6விண்ணையும் அதில் உள்ளவற்றையும், மண்ணையும் அதில் உள்ளவற்றையும், கடலையும் அதில் உள்ளவற்றையும் படைத்த என்றென்றும் வாழும் கடவுளின் பெயரால் ஆணையிட்டு, “இனித் தாமதம் கூடாது. 7ஏழாம் வானதூதர் எக்காளம் முழக்கப்போகும் காலத்தில், கடவுள் தம் பணியாளர்களான இறைவாக்கினர்களுக்கு அறிவித்திருந்தபடியே அவரது மறைவான திட்டம் நிறைவேறும்” என்றார்.

8விண்ணகத்திலிருந்து நான் கேட்ட குரல் என்னிடம் மீண்டும் பேசி, “கடலின்மீதும் நிலத்தின்மீதும் நிற்கின்ற வானதூதரின் கையில் உள்ள பிரிக்கப்பட்ட சுருளேட்டை நீ போய் வாங்கிக்கொள்” என்றது.

9நானும் அந்த வானதூதரிடம் சென்று, அந்தச் சிற்றேட்டை என்னிடம் தரும்படி கேட்டேன். அவரோ, “இதை எடுத்துத் தின்றுவிடு; இது உன் வயிற்றில் கசக்கும், ஆனால் வாயில் தேனைப்போல் இனிக்கும்” என்று என்னிடம் சொன்னார்.

10உடனே வானதூதரின் கையிலிருந்து அந்தச் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். அது என் வாயில் தேனைப்போல் இனித்தது; ஆனால் அதைத் தின்றபொழுது என் வயிற்றில் கசந்தது. 11“பல்வேறு மக்களினத்தார், நாட்டினர், மொழியினர், மன்னர்பற்றி நீ மீண்டும் இறைவாக்குரைக்க வேண்டும்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.


10:5-7 விப 20:11; இச 32:40; தானி 12:7; ஆமோ 3:7. 10:8-10 எசே 2:8-3:3.


அதிகாரம் 11

இரு சாட்சிகள்


1பின்பு குச்சிபோன்ற ஓர் அளவு கோல் என்னிடம் கொடுக்கப்பட்டது. “எழுந்து, கடவுளின் கோவிலையும் பலிபீடத்தையும் அளவிடு; அங்கு வழிபடுவோரைக் கணக்கிடு. 2ஆனால், கோவிலுக்கு வெளியே உள்ள முற்றத்தை அளக்காமல் விட்டுவிடு; ஏனெனில், அது வேற்றினத்தாருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. திருநகரை அவர்கள் நாற்பத்திரண்டு மாதம் மிதித்துச் சீரழிப்பார்கள். 3நான் என் சாட்சிகளுள் இருவரை அனுப்புவேன். அவர்கள் சாக்கு உடை உடுத்தி, ஆயிரத்து இருநூற்று அறுபது நாளும் இறைவாக்குரைப்பார்கள்” என்று எனக்குச் சொல்லப்பட்டது.

4மண்ணுலகின் ஆண்டவர் திருமுன் நிற்கும் இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளுமே அந்த இரு சாட்சிகள். 5யாராவது அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்பினால் அவர்களது வாயிலிருந்து தீ கிளம்பி அந்தப் பகைவர்களைச் சுட்டெரித்துவிடும். அவர்களுக்குத் தீங்கு இழைக்க விரும்புவோர் இவ்வாறு கொல்லப்படுவது உறுதி. 6தாங்கள் இறைவாக்குரைக்கும் காலத்தில் மழை பொழியாதவாறு வானத்தை அடைத்து விட அவர்களுக்கு அதிகாரம் உண்டு; தாங்கள் விரும்பும்பொழுதெல்லாம் தண்ணீரை இரத்தமாக மாற்றவும், மண்ணுலகை எல்லாவகை வாதைகளாலும் தாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் உண்டு.

7அவர்கள் சான்று பகர்ந்து முடித்தபின் படுகுழியிலிருந்து வெளியே வரும் விலங்கு அவர்களோடு போர் தொடுத்து, அவர்களை வென்று கொன்றுவிடும். 8சோதோம் எனவும் எகிப்து எனவும் உருவகமாக அழைக்கப்படும் அம்மாநகரின் தெருக்களில் அவர்களுடைய பிணங்கள் கிடக்கும். அங்கேதான் அவர்களின் ஆண்டவர் சிலுவையில் அறையப்பட்டார். 9பல்வேறு மக்களினத்தார், குலத்தினர், மொழியினர், நாட்டினர் மூன்றரை நாள் அவர்களுடைய பிணங்கள் அங்குக் கிடக்கக் காண்பார்கள்; அவற்றை அடக்கம் செய்யவிடமாட்டார்கள். 10மண்ணுலகில் வாழ்வோர் அவற்றைக் குறித்து மிகவே மகிழ்ந்து திளைப்பர்; ஒருவருக்கு ஒருவர் அன்பளிப்புகள் வழங்கிக்கொள்வர்; ஏனெனில், இந்த இரண்டு இறைவாக்கினரும் மண்ணுலகில் வாழ்வோர்க்குத் தொல்லை கொடுத்திருந்தனர். 11அந்த மூன்றரை நாளுக்குப் பின் கடவுளிடமிருந்து வந்த உயிர்மூச்சு அவற்றுக்குள் நுழைந்ததும், அவர்கள் எழுந்து நின்றார்கள். அதைப் பார்த்தவர்களைப் பேரச்சம் ஆட்கொண்டது. 12அப்பொழுது விண்ணத்திலிருந்து எழுந்த ஓர் உரத்தகுரல், “இவ்விடத்திற்கு ஏறி வாருங்கள்” என்று தங்களுக்குச் சொன்னதை அந்த இறைவாக்கினர்கள் இருவரும் கேட்டார்கள். அவர்களுடைய பகைவர்கள் பார்த்துக் கொண்டிருக்க அவர்கள் மேகத்தின்மீது விண்ணகத்துக்குச் சென்றார்கள்.✠ 13அந்நேரத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. நகரின் பத்தில் ஒரு பகுதி வீழ்ந்தது. அதனால் ஏழாயிரம் பேர் இறந்தனர். எஞ்சினோர், அச்சம் மேலிட்டவர்களாய் விண்ணகக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.✠ 14இவ்வாறு இரண்டாவது கேடு கடந்து விட்டது; இதோ, மூன்றாவது கேடு விரைவில் வரவிருக்கிறது.


ஏழாவது எக்காளம்


15பின்னர் ஏழாவது வானதூதர் எக்காளம் முழக்கினார். உடனே விண்ணகத்தில் உரத்த குரல் ஒன்று எழுந்தது: “உலகின் ஆட்சி உரிமை நம் ஆண்டவருக்கும் அவருடைய மெசியாவுக்கும் உரியதாயிற்று. அவரே என்றென்றும் ஆட்சி புரிவார்” என்று முழக்கம் கேட்டது.✠ 16கடவுள் திருமுன் தங்கள் அரியணைகளில் அமர்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகம் குப்புற விழுந்து கடவுளை வணங்கினார்கள். 17“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, இருக்கின்றவரும் இருந்தவருமான உமக்கு நன்றி செலுத்துகின்றோம்; ஏனெனில், நீர் உமது பெரும் வல்லமையை வெளிப்படுத்தி ஆட்சி செலுத்தலானீர். 18வேற்றினத்தார் சினந்தெழுந்தனர். உமது சினமும் வெளிப்பட்டது. இறந்தோருக்குத் தீர்ப்பளிக்கவும் உம் பணியாளர்களாகிய இறைவாக்கினர்கள், இறைமக்கள், உமக்கு அஞ்சும் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருக்கும் கைம்மாறு அளிக்கவும் உலகை அழிப்பவர்களை அழிக்கவும் காலம் வந்து விட்டது”✠

என்று பாடினார்கள். 19அப்பொழுது விண்ணகத்தில் கடவுளின் கோவில் திறக்கப்பட்டது. அந்தக் கோவிலில் உடன்படிக்கைப் பேழை காணப்பட்டது. மின்னலும் பேரிரைச்சலும் இடிமுழக்கமும் நிலநடுக்கமும் கனத்த கல்மழையும் உண்டாயின.✠


11:12 2 அர 2:11. 11:13 திவெ 6:12; 16:18. 11:15 விப 15:18; தானி 2:44; 7:14,27. 11:18 திபா 2:5; 110:5; 115:13. 11:19 திவெ 8:5; 16:18,21.


அதிகாரம் 12

5. அரக்கப்பாம்பும் இரு விலங்குகளும்

பெண்ணும் அரக்கப் பாம்பும்

1வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார். 2அவர் கருவுற்றிருந்தார்; பேறுகால வேதனைப்பட்டுக் கடும் துயருடன் கதறினார். 3வானில் வேறோர் அடையாளமும் தோன்றியது; இதோ நெருப்புமயமான பெரிய அரக்கப் பாம்பு ஒன்று காணப்பட்டது. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன. அதன் தலைகளில் ஏழு மணி முடிகள் இருந்தன.✠ 4அது தன் வாலால் விண்மீன்களின் மூன்றில் ஒரு பகுதியை நிலத்தின்மீது இழுத்துப் போட்டது. பேறுகால வேதனையிலிருந்த அப்பெண் பிள்ளை பெற்றவுடன் அதை விழுங்கிவிடுமாறு அரக்கப் பாம்பு அவர்முன் நின்று கொண்டிருந்தது.✠ 5எல்லா நாடுகளையும் இருப்புக்கோல் கொண்டு நடத்தவிருந்த ஓர் ஆண் குழந்தையை அவர் பெற்றெடுத்தார். அக்குழந்தையோ கடவுளிடம் அவரது அரியணை இருந்த இடத்துக்குப் பறித்துச் செல்லப்பெற்றது.✠ 6அப்பெண் பாலைநிலத்துக்கு ஓடிப்போனார்; அங்கு ஆயிரத்து இருநூற்று அறுபது நாள் அவரைப் பேணுமாறு கடவுள் அவருக்கென ஓர் இடத்தை ஏற்பாடு செய்திருந்தார்.

7பின்னர், விண்ணகத்தில் போர் மூண்டது. மிக்கேலும் அவருடைய தூதர்களும் அரக்கப் பாம்போடு போர் தொடுத்தார்கள்; அரக்கப் பாம்பும் அதன் தூதர்களும் அவர்களை எதிர்த்துப் போரிட்டார்கள்.✠ 8அரக்கப் பாம்பு தோல்வியுற்றது. விண்ணகத்தில் அதற்கும் அதன் தூதர்களுக்கும் இடமே இல்லாது போயிற்று. 9அப்பெரிய அரக்கப் பாம்பு வெளியே தள்ளப்பட்டது. அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப் பெற்ற அதுவே தொடக்கத்தில் தோன்றிய பாம்பு. உலகு முழுவதையும் ஏமாற்றிய அது மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டது; அதன் தூதர்களும் அதனுடன் வெளியே தள்ளப்பட்டார்கள்.✠

10பின்பு விண்ணகத்தில் ஒலித்த பெரியதொரு குரலைக் கேட்டேன். அது சொன்னது: “இதோ, மீட்பு, வல்லமை, நம் கடவுளின் ஆட்சி, அவருடைய மெசியாவின் அதிகாரம் ஆகிய அனைத்தும் வந்துவிட்டன. நம் சகோதரர் சகோதரிகள் மீது குற்றம் சுமத்தியவன், நம் கடவுள் திருமுன் அல்லும் பகலும் அவர்கள்மீது குற்றம் சாட்டியவன் வெளியே தள்ளப்பட்டான். ✠ 11ஆட்டுக்குட்டி சிந்திய இரத்தத்தாலும் தாங்கள் பகர்ந்த சான்றாலும் அவர்கள் அவனை வென்றார்கள். அவர்கள் தங்கள் உயிர்மீது ஆசை வைக்கவில்லை; இறக்கவும் தயங்கவில்லை. 12இதன்பொருட்டு விண்ணுலகே, அதில் குடியிருப்போரே, மகிழ்ந்து கொண்டாடுங்கள். மண்ணுலகே, கடலே, ஐயோ! உங்களுக்குக் கேடு! தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது; அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது.”

13தான் மண்ணுலகுக்குத் தள்ளப்பட்டதைக் கண்ட அரக்கப் பாம்பு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த அப்பெண்ணைத் துரத்திச் சென்றது. 14ஆனால், அப்பாம்பிடமிருந்து தப்பித்துப் பாலைநிலத்தில் அவருக்கெனக் குறிக்கபட்டிருந்த இடத்துக்குப் பறந்து செல்லுமாறு, பெரும் கழுகின் இரு சிறகுகள் அவருக்கு அளிக்கப்பட்டன. அங்கு அவர் மூன்றரை ஆண்டுக் காலம் பேணப்படுவார்.✠ 15அப்பெண்ணை வெள்ளம் அடித்துச் செல்லும்பொருட்டு, அவர் பின்னால் அப்பாம்பு தன் வாயிலிருந்து ஆறுபோலத் தண்ணீர் பாய்ந்தோடச் செய்தது. 16ஆனால், நிலம் அப்பெண்ணுக்குத் துணை நின்றது. அது தன் வாயைத் திறந்து, அரக்கப்பாம்பின் வாயிலிருந்து பாய்ந்த வெள்ளத்தைக் குடித்துவிட்டது. 17இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.⁕ 18அரக்கப்பாம்பு கடற்கரையில் நின்றுகொண்டிருந்தது.⁕


12:3 தானி 7:7. 12:4 தானி 8:10. 12:5 எசா 66:7; திபா 2:9. 12:7 தானி 10:13; 12:1; யூதா 9. 12:9 தொநூ 3:1; லூக் 10:18. 12:10 யோபு 1:9-11; செக் 3:1. 12:14 தானி 7:25; 12:7.
12:17 ‘இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்’ என்றும் மொழிபெயர்க்கலாம். 12:18 ‘நான் கடற்கரையில் நின்றுகொண்டிருந்தேன்’ என்னும் பாடம் சில முக்கிய கையெழுத்துப் படிகளில் காணப்படுகிறது. இவ்வாறு இவ்வசனம் 13:1 உடன் தொடர்புப் படுத்தப்படுகிறது.
அதிகாரம் 13

கடலிலிருந்து வெளியே வந்த விலங்கு


1அப்பொழுது ஒரு விலங்கு கடலிலிருந்து வெளியே வரக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் கொம்புகளில் பத்து மணிமுடிகளும் தலைகளில் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்களும் காணப்பட்டன.✠ 2நான் கண்ட அந்த விலங்கு சிறுத்தைபோல் இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்கள்போன்றும் வாய் சிங்கத்தின் வாய்போன்றும் இருந்தன. அந்த அரக்கப்பாம்பு தன் வல்லமையையும் அரியணையையும் பேரதிகாரத்தையும் அதற்கு அளித்தது.✠ 3அந்த விலங்கின் தலைகளுள் ஒன்று உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய அளவுக்குப் படுகாயப்பட்டிருந்ததுபோல் தோன்றியது; ஆனால், அந்தப் படுகாயம் குணமாகியிருந்தது. மண்ணுலகு முழுவதும் வியப்புற்று அவ்விலங்கைப் பின் தொடர்ந்தது. 4அரக்கப்பாம்பு அவ்விலங்குக்குத் தன் அதிகாரத்தை அளித்திருந்ததால், மக்கள் அப்பாம்பை வணங்கினார்கள்; “விலங்குக்கு ஒப்பானவர் யார்? அதனுடன் போரிடக் கூடியவர் யார்?” என்று கூறி அவ்விலங்கையும் வணங்கினார்கள்.

5ஆணவப் பேச்சுப் பேசவும் கடவுளைப் பழித்துரைக்கவும் அவ்விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது; நாற்பத்திரண்டு மாதம் அது அதிகாரம் செலுத்த விடப்பட்டது; 6கடவுளையும் அவரது பெயரையும் உறைவிடத்தையும் விண்ணகத்தில் குடியிருப்போரையும் பழித்துரைக்கத் தொடங்கியது. 7இறைமக்களோடு போர்தொடுக்கவும் அவர்களை வெல்லவும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டது; குலத்தினர், மக்களினத்தினர், மொழியினர், நாட்டினர் ஆகிய அனைவர்மீதும் அதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.✠ 8மண்ணுலகில் வாழ்வோர் அனைவரும் அதை வணங்குவர். இவர்கள் கொலை செய்யப்பட்ட ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் உலகம் தோன்றியது முதல் பெயர் எழுதப்படாதோர்.✠

9கேட்கச் செவி உடையோர் கேட்கட்டும்; 10“சிறையிலிடப்பட வேண்டியவர் சிறையிலிடப்படுவர்; வாளால் கொல்லப்பட வேண்டியவர் வாளால் மடிவர்.” ஆகவே இறைமக்களுக்கு மனவுறுதியும் நம்பிக்கையும் தேவை.✠


மண்ணிலிருந்து வெளியே வந்த விலங்கு


11பின்னர், மற்றொரு விலங்கு மண்ணிலிருந்து வெளியே வரக் கண்டேன். ஆட்டுக்கிடாயின் கொம்புகளைப் போன்று இரு கொம்புகள் அதற்கு இருந்தன. ஆனால், அது அரக்கப்பாம்பு போன்று பேசியது. 12அவ்விலங்கு முதலாம் விலங்கின் முழு அதிகாரத்தையும் அதன் முன்னிலையில் செயல்படுத்தியது. உயிருக்கே ஊறு விளைவிக்கக்கூடிய படு காயத்தினின்று குணம் பெற்றிருந்த முதல் விலங்கை மண்ணுலகும் அதில் வாழ்வோரும் வணங்கும்படி செய்தது. 13அது பெரிய அடையாளச் செயல்கள் செய்தது; மனிதர் பார்க்க விண்ணிலிருந்து மண்மீது நெருப்பு விழும்படியும் செய்தது. 14இவ்வாறு முதல் விலங்கின் முன்னிலையில் அது செய்யும்படி அனுமதிக்கப்பட்டிருந்த அந்த அரும் அடையாளங்களால் மண்ணுலகில் வாழ்வோரை ஏமாற்றியது; வாளால் படுகாயப்பட்டிருந்தும் உயிர் வாழ்ந்த அவ்விலங்குக்குச் சிலை ஒன்று செய்யுமாறு அவர்களிடம் கூறியது. 15அச்சிலையைப் பேசவைக்கவும் அதனை வணங்காதவர்களைக் கொலை செய்யவும் அதற்கு உயிர் கொடுக்குமாறு இரண்டாம் விலங்குக்கு அனுமதி வழங்கப்பட்டது. 16சிறியோர், பெரியோர், செல்வர், வறியவர், உரிமைக் குடிமக்கள், அடிமைகள் ஆகிய அனைவரும் அவரவர் வலக் கையிலாவது நெற்றியிலாவது குறி ஒன்று இட்டுக் கொள்ளுமாறு செய்தது. 17இவ்வாறு, அந்த விலங்கின் பெயரையோ அப்பெயருக்குரிய எண்ணையோ குறியாக இட்டுக்கொள்ளாத எவராலும் விற்கவோ வாங்கவோ முடியவில்லை.

18இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை. புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டோர் அவ்விலங்குக்குரிய எண்ணைக் கணித்துப் புரிந்து கொள்ளட்டும். அந்த எண் ஓர் ஆளைக் குறிக்கும். அது அறுநூற்று அறுபத்தாறு.


13:1 தானி 7:3; திவெ 17:3,7-12. 13:2 தானி 7:4-6. 13:5-6 தானி 7:8,25; 11:36. 13:7 தானி 7:21. 13:8 திபா 69:28. 13:10 எரே 15:2; 43:11.


அதிகாரம் 14

6. காட்சிகள்

ஆட்டுக்குட்டியின் தோழர்

1மேலும், சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன். அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம்பேர் அதனுடன் இருந்தனர்.✠ 2பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம்போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசைபோலும் ஒலித்தது. 3அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில் நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப் பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை. 4அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளாமல் கற்பைக் காத்துக்கொண்டவர்கள்; ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்டவர்கள். 5அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை; ஏனெனில், அவர்கள் மாசற்றவர்கள்.✠


மூன்று வானதூதர் விடுத்த செய்தி


6பின்பு,வேறொரு வானதூதர் நடுவானில் பறந்துகொண்டிருக்கக் கண்டேன். அவர் மண்ணுலகில் வாழ்வோருக்கு, அதாவது நாடு, குலம், மொழி, மக்களினம் ஆகிய அனைத்துக்கும் அறிவிக்கும் பொருட்டு எக்காலத்துக்கும் உரிய நற்செய்தியை வைத்திருந்தார். 7“கடவுளுக்கு அஞ்சுங்கள்; அவரைப் போற்றிப் புகழுங்கள். ஏனெனில், அவர் தீர்ப்பளிக்கும் நேரம் வந்துவிட்டது. மண், கடல், நீரூற்றுகள் ஆகியவற்றைப் படைத்தவரை வணங்குங்கள்” என்று அவர் உரத்த குரலில் கூறினார்.

8மற்றொரு வானதூதர் அவரைத் தொடர்ந்து வந்தார். இந்த இரண்டாம் தூதர், “வீழ்ந்தது! பரத்தைமை என்னும் தன் மதுவை எல்லா நாட்டினரும் குடித்து வெறிகொள்ளச் செய்த பாபிலோன் மாநகர் வீழ்ந்தது!” என்றார்.✠

9வேறொரு வானதூதர் அவர்களைத் தொடர்ந்து வந்தார். அந்த மூன்றாம் வானதூதர் உரத்த குரலில் கூறியது: “விலங்கையும் அதன் சிலையையும் வணங்கி, தங்கள் நெற்றியிலோ கையிலோ குறி இட்டுக்கொண்டோர் அனைவரும் 10கடவுளின் சீற்றம் என்னும் மதுவை — அவர்தம் சினம் என்னும் கிண்ணத்தில் கலப்பின்றி ஊற்றப்பட்ட அந்த மதுவை — குடித்தே தீர வேண்டும். அவர்கள் தூய வானதூதர் முன்னிலையிலும் ஆட்டுக்குட்டியின் முன்னிலையிலும் நெருப்பாலும் கந்தகத்தாலும் வதைக்கப்படுவார்கள்.✠ 11அவர்களை வதைத்த நெருப்பிலிருந்து எழுந்த புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது. அந்த விலங்கையும் அதன் சிலையையும் வணங்குவோருக்கும் அதனுடைய பெயரைக் குறியாக இட்டுக்கொண்டோருக்கும் அல்லும் பகலும் ஓய்வே இராது.✠

12ஆகவே, கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கும் இறைமக்களுக்கு மனவுறுதி தேவை.” 13பின்பு, விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன்: “‘இது முதல் ஆண்டவரோடு இணைந்த நிலையில் இறப்போர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று அது ஒலித்தது. அதற்குத் தூய ஆவியார், “ஆம், அவர்கள் தங்கள் உழைப்பிலிருந்து ஓய்வு பெறுவார்கள்; ஏனெனில், அவர்களின் செயல்கள் அவர்களைப் பின்தொடரும்” என்று கூறினார்.


நாடுகள் ஒன்றுதிரட்டப்படல்


14பின்பு, ஒரு வெண் மேகத்தைக் கண்டேன். அதன்மீது மானிட மகனைப்போன்ற ஒருவர் வீற்றிருந்தார். அவரது தலையில் பொன் முடியும் கையில் கூர்மையான அரிவாளும் காணப்பட்டன.✠ 15மற்றொரு வானதூதர் கோவிலிருந்து வெளியே வந்து, மேகத்தின்மீது வீற்றிருந்தவரை நோக்கி, “உமது அரிவாளை எடுத்து அறுவடை செய்யும்; ஏனெனில் ,அறுவடைக் காலம் வந்துவிட்டது; மண்ணுலகம் என்னும் பயிர் முற்றிவிட்டது” என்று உரத்த குரலில் கத்தினார்.✠ 16உடனே மேகத்தின்மீது வீற்றிருந்தவர் மண்ணுலகெங்கும் தமது அரிவாளை வீசி அறுவடை செய்தார். 17மற்றொரு வானதூதரும் விண்ணகத்தில் உள்ள கோவிலிருந்து வெளியே வந்தார். அவரிடமும் கூர்மையான அரிவாள் ஒன்று இருந்தது.

18நெருப்பின்மேல் அதிகாரம் கொண்டிருந்த இன்னுமொரு வானதூதர் பலிபீடத்திலிருந்து வெளியே வந்தார். அவர் கூர்மையான அரிவாளை வைத்திருந்தவரிடம், “உமது கூர்மையான அரிவாளை எடுத்து மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்திடும்; ஏனெனில், திராட்சை கனிந்துவிட்டது” என்று உரத்த குரலில் கூறினார். 19ஆகவே, அந்த வானதூதர் மண்ணுலகின்மீது தம் அரிவாளை வீசி மண்ணுலகின் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்த்தார்; கடவுளின் சீற்றம் என்னும் பெரிய பிழிவுக்குழியில் அவற்றைப் போட்டார். 20நகருக்கு வெளியே இருந்த அந்தப் பிழிவுக்குழியில் அவை மிதிக்கப்பட்டன. அந்தப் பிழிவுக்குழியிலிருந்து இரத்த வெள்ளம் ஏறத்தாழ இரண்டு மீட்டர் ஆழம்,* முந்நூறு கிலோ மீட்டர்** தொலைக்குப் பாய்ந்தோடியது.✠✠✠


14:1 எசே 9:4; திவெ 7:3. 14:5 செப் 3:13. 14:8 எசா 21:9; எரே 51:8; திவெ 18:2. 14:10 எசா 51:17; தொநூ 18:24; எசா 38:22. 14:11 எசா 34:10. 14:14 தானி 7:13. 14:15 யோவே 3:13. 14:20 எசா 63:3; புல 1:15; திவெ 9:15.


14:20 * ‘குதிரையின் கடிவாள உயர அளவு’ என்பது என்பது கிரேக்க பாடம். 14:20 ** ‘ஆயிரத்து அறுநூறு ஸ்தாதியம்’ என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 15

ஏழு வாதைகள்


1பின்பு, பெரியதும் வியப்புக்குரியதுமான மற்றோர் அடையாளத்தை விண்ணகத்தில் கண்டேன்; ஏழு வானதூதர்கள் ஏழு வாதைகளைக் கொண்டிருந்தார்கள். இறுதியான அந்த வாதைகளோடு கடவுளின் சீற்றம் முற்றிலும் தணியும். 2நெருப்போடு கலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒன்றையும் கண்டேன். தொடர்ந்து, விலங்கின்மீது அதன் சிலைமீதும் எண்ணால் குறிக்கப்பெற்ற அந்த ஆள்மீதும் வெற்றி பெற்றவர்கள், கடவுள் கொடுத்திருந்த யாழ்களை ஏந்திய வண்ணம் கண்ணாடிக்கடல் அருகே நின்று கொண்டிருக்கக் கண்டேன். 3அவர்கள் கடவுளின் பணியாளரான மோசேயின் பாடலையும் ஆட்டுக்குட்டியின் பாடலையும் பாடிக் கொண்டிருந்தார்கள்:

“கடவுளாகிய ஆண்டவரே, எல்லாம் வல்லவரே, உம் செயல்கள் பெரியன, வியப்புக்குரியன. மக்களினங்களின் மன்னரே, உம் வழிகள் நேரியவை, உண்மையுள்ளவை. ✠ 4ஆண்டவரே, உமக்கு அஞ்சாதவர் யார்? உமது பெயரைப் போற்றிப் புகழாதவர் யார்? நீர் ஒருவரே தூயவர், எல்லா மக்களினங்களும் உம் திருமுன் வந்து வணங்கும். ஏனெனில் உம் நீதிச் செயல்கள் வெளிப்படையாயின.”✠

5இதன் பின் விண்ணகத்தில் உள்ள கோவில், அதாவது சந்திப்புக் கூடாரம் திறக்கக் கண்டேன்.✠ 6அப்பொழுது ஏழு வாதைகளைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களும் கோவிலிலிருந்து வெளியே வந்தார்கள்; அவர்கள் தூய்மையான, பளபளப்பான மெல்லிய ஆடையும் மார்பில் பொன்பட்டையும் அணிந்திருந்தார்கள். 7அந்த நான்கு உயிர்களுள் ஒன்று என்றென்றும் வாழும் கடவுளின் சீற்றத்தால் நிறைந்த ஏழு பொன் கிண்ணங்களை அந்த ஏழு வானதூதர்களுக்கும் அளித்தது. 8கடவுளின் மாட்சியும் வல்லமையும் கோவிலைப் புகையால் நிரப்பின. அதனால் அந்த ஏழு தூதர்களும் கொண்டிருந்த ஏழு வாதைகளும் முடிவுறும்வரை ஒருவரும் கோவிலுள் நுழைய முடியவில்லை.✠


15:3 விப 15:1. 15:4 எரே 10:7. 15:5 விப 38:21. 15:8 விப 40:34; 1 அர 8:10-11; 2 குறி 5:13-14; எசா 6:4; விப 9:10.


அதிகாரம் 16
abcd
அதிகாரம் 17

8. பாபிலோனின் அழிவும் எதிரிகளின் தோல்வியும்

பேர்போன விலைமகளும் கருஞ்சிவப்பு விலங்கும்

1ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வான தூதர்களுள் ஒருவர் வந்து என்னோடு பேசி, “வா, நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்கும் பேர் போன விலைமகளுக்கு வரவிருக்கும் தண்டனையை உனக்குக் காட்டுவேன்.✠ 2மண்ணுலகின் அரசர்கள் அவளோடு பரத்தைமையில் ஈடுபட்டார்கள். மண்ணுலகில் வாழ்வோர் அவளது பரத்தைமை என்னும் மதுவினால் வெறிகொண்டிருக்கிறார்கள்” என்றார்.✠

3அப்பொழுது தூய ஆவியால் ஆட்கொள்ளப்பெற்ற என்னை அந்த வானதூதர் பாலைநிலத்துக்குக் கொண்டு சென்றார். அங்கே கருஞ்சிவப்பு விலங்கின்மீது அமர்ந்திருந்த ஒரு பெண்ணைக் கண்டேன். அவ்விலங்கின் உடல் முழுதும் கடவுளைப் பழித்துரைக்கும் பெயர்கள் நிறைந்திருந்தன. அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன.✠ 4அப்பெண் செந்நிற கருஞ்சிவப்பு ஆடைகளை அணிந்திருந்தாள்; பொன், விலையுயர்ந்த கல், முத்து ஆகியவற்றால் அணி செய்யப்பட்டிருந்தாள். அவளது பரத்தைமையின் அருவருப்பும் அழுக்கும் நிறைந்த பொன் கிண்ணம் அவளது கையில் இருந்தது. 5மறைபொருள் கொண்ட பெயர் ஒன்று அவளது நெற்றியில் எழுதப்பட்டிருந்தது; “பாபிலோன் மாநகர் விலைமகளிருக்கும் மண்ணுலகின் அருவருப்புகள் அனைத்துக்குமே தாய்” என்பதே அதன் பொருள். 6அப்பெண் இறைமக்களின் இரத்தத்தையும் இயேசுவின் சாட்சிகளுடைய இரத்தத்தையும் குடித்து வெறி கொண்டிருக்கக் கண்டேன்.

நான் அவளைக் கண்டபோது பெரும் வியப்பில் ஆழ்ந்தேன். 7அதற்கு அந்த வானதூதர் என்னிடம் கூறியது: “நீ வியப்பு அடைவது ஏன்? அப்பெண்ணைப்பற்றிய மறைபொருளையும், ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் கொண்டதாய் அவளைச் சுமந்து செல்லும் விலங்கின் மறைபொருளையும் உனக்குச் சொல்கிறேன். 8நீ கண்ட விலங்கு முன்பு உயிரோடு இருந்தது; இப்போது இல்லை. படுகுழியிலிருந்து அது ஏறிவரவிருக்கிறது; ஆனால், அழிந்துவிடும். உலகம் தோன்றியதுமுதல் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாத மண்ணுலகுவாழ் மக்கள் அனைவரும் அந்த விலங்கைக் கண்டு வியப்பு அடைவார்கள்; ஏனெனில், அது முன்பு உயிரோடு இருந்தது, இப்பொழுது இல்லை. ஆனால், மீண்டும் உயிர் பெற்று வரும்.✠

9இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவைப்படுகிறது; அந்த ஏழு தலைகளும் அப்பெண் அமர்ந்திருக்கும் ஏழு மலைகளைக் குறிக்கும்; ஏழு அரசர்களையும் குறிக்கும். 10இந்த அரசர்களுள் ஐவர் வீழ்ச்சியுற்றவர். இப்போது ஒருவர் ஆட்சி செலுத்துகிறார். இன்னொருவர் இன்னும் தோன்றவில்லை. அவர் தோன்றிச் சிறிது காலமே ஆட்சி புரிய முடியும். 11முன்பு உயிரோடு இருந்து இப்போது இல்லாத அந்த விலங்கு எட்டாவது அரசரைக் குறிக்கும். அந்த ஏழு அரசர்களுள் ஒருவரான அவரும் அழிந்துவிடுவார்.

12நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து அரசர்களைக் குறிக்கும். அவர்கள் இன்னும் ஆட்சியுரிமை பெறவில்லை. ஆனால், அவர்கள் விலங்கோடு சேர்ந்து ஒரு மணி அளவு அரசாள அதிகாரம் பெறுவார்கள்.✠ 13அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் அவ்விலங்கிடம் ஒப்படைத்தார்கள். 14அவர்கள் ஆட்டுக்குட்டியோடு போர் புரிவார்கள். ஆனால், அது அவர்களை வென்றுவிடும்; கடவுளால் அழைக்கப்பெற்று, தேர்ந்தெடுக்கப் பெற்று உண்மை உள்ளவர்களாய் ஆட்டுக்குட்டியோடு இருப்பவர்களும் வெற்றி கொள்வார்கள்; ஏனெனில், ஆட்டுக் குட்டி ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அரசருக்கெல்லாம் அரசர்.”

15வானதூதர் தொடர்ந்து என்னிடம் சொன்னது: “அந்த விலைமகள் நீர்த்திரள்மேல் அமர்ந்திருக்க நீ கண்டாய். அந்த நீர்த்திரள் பல்வேறு இனத்தினர், மக்கள் கூட்டத்தினர், நாட்டினர், மொழியினர் ஆகியோரைக் குறிக்கும்.

16நீ கண்ட பத்துக் கொம்புகளும் விலங்கும் அந்த விலைமகள்மீது வெறுப்புக் கொண்டு, அவளிடமிருந்து அனைத்தையும் பறித்துவிட்டு, அவளைப் பிறந்தமேனி ஆக்கும்; அவளது சதையைத் தின்று, அவளை நெருப்பினால் சுட்டெரிக்கும். 17ஏனெனில், கடவுள் தமது நோக்கத்தை நிறைவேற்றவே அந்நாட்டினரின் உள்ளங்களைத் தூண்டிவிட்டார். அவரது வாக்கு நிறைவேறும்வரை, அவர்கள் ஒருமனப்பட்டவராய்த் தங்களது ஆட்சியை விலங்கிடம் ஒப்படைத்ததும் அதே காரணத்தினால்தான். 18நீ கண்ட பெண் மண்ணுலக அரசர்கள்மீது ஆட்சி செலுத்தும் மாநகர் ஆகும்.


17:1 எரே 51:13. 17:2 எசா 23:17; எரே 51:7. 17:3 திவெ 13:1. 17:8 தானி 7:17; திவெ 11:7; திபா 69:28. 17:12 தானி 7:24.


அதிகாரம் 18
abcd
அதிகாரம் 19

விண்ணகத்தில் எழுந்த வெற்றி முழக்கம்


1இதன்பின், பெருந்திரளான மக்களின் கூச்சல்போன்ற ஒலி விண்ணகத்தில் எழக் கேட்டேன். அது பின்வருமாறு முழங்கியது:

“அல்லேலூயா!⁕ மீட்பும் மாட்சியும் வல்லமையும் நம் கடவுளுக்கே உரியன. 2ஏனெனில் அவருடைய தீர்ப்புகள் உண்மை உள்ளவை, நீதியானவை. தன் பரத்தைமையால் மண்ணுலகை அழிவுக்குட்படுத்திய பேர்போன அந்த விலைமகளுக்கு அவர் தீர்ப்பு வழங்கினார்; தம் பணியாளர்களைக் கொன்றதற்காக அவளைப் பழிவாங்கினார்.”✠ 3மீண்டும் அந்த மக்கள், “அல்லேலூயா! அந்த நகர் நடுவிலிருந்து புகை என்றென்றும் மேலே எழுந்த வண்ணம் உள்ளது”✠ என்றார்கள்.

4அந்த இருபத்து நான்கு மூப்பர்களும் நான்கு உயிர்களும் அரியணையில் வீற்றிருந்த கடவுள்முன் விழுந்து வணங்கி, “ஆமென், அல்லேலூயா” என்று பாடினார்கள்.


ஆட்டுக்குட்டியின் திருமண விருந்து


5அரியணையிலிருந்து எழுந்த ஒரு குரல், “கடவுளின் பணியாளர்களே, அவருக்கு அஞ்சி நடப்பவர்களே, சிறியோர்களே, பெரியோர்களே, நீங்கள் அனைவரும் நம் கடவுளைப் புகழுங்கள்” என்று ஒலித்தது.✠ 6பின்னர் பெருந்திரளான மக்களின் கூச்சல்போலும் பெரும் வெள்ளத்தின் இரைச்சல்போலும் பேரிடி முழக்கம் போலும் எழுந்த போரொலியைக் கேட்டேன். அது சொன்னது: “அல்லேலூயா! நம் கடவுளாகிய ஆண்டவர், எல்லாம் வல்லவர்; அவர் ஆட்சி செலுத்துகின்றார். ✠ 7எனவே மகிழ்வோம், பேருவகையுடன் அவரைப் போற்றிப் புகழ்வோம். ஏனெனில், ஆட்டுக்குட்டியின் திருமண விழா வந்துவிட்டது. மணமகளும் விழாவுக்கு ஆயத்தமாய் இருக்கிறார். 8மணமகள் அணியுமாறு பளபளப்பான, தூய்மையான, விலையுயர்ந்த மெல்லிய ஆடை அவருக்கு அளிக்கப்பட்டது. அந்த ஆடை இறைமக்களின் நீதிச் செயல்களே.” 9அந்த வானதூதர் என்னிடம், “‘ஆட்டுக்குட்டியின் திருமண விருந்துக்கு அழைக்கப்பெற்றோர் பேறுபெற்றோர்’ என எழுது” என்று கூறினார். தொடர்ந்து, “இவை கடவுளின் உண்மையுள்ள சொற்கள்” என்று சொன்னார்.✠ 10நான் வானதூதரை வணங்கும் பொருட்டு அவரது காலடியில் விழுந்தேன். ஆனால் அவரோ என்னிடம், “வேண்டாம். இயேசுவுக்குச் சான்று பகர்ந்த⁕ உனக்கும் உன் உடன்பிறப்புகளுக்கும் நான் உடன்பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். ஏனெனில், இயேசு பகர்ந்த சான்றே இறைவாக்குகளுக்கு உயிர்மூச்சு.


வெண் குதிரைமீது அமர்ந்திருந்தவர்


11பின்னர், நான் விண்ணகம் திறந்திருக்கக் கண்டேன். அங்கே ஒரு வெண்குதிரை காணப்பட்டது. அதன்மேல் ஒருவர் அமர்ந்திருந்தார். ‘நம்பிக்கைக்குரியவர், உண்மையுள்ளவர்’ என்பது அவருடைய பெயர். அவர் நீதியோடு தீர்ப்பளித்துப் போர் தொடுப்பார்.✠ 12அவருடைய கண்கள் தீப்பிழம்பு போலத் தென்பட்டன. அவரது தலைமேல் பல மணிமுடிகள் இருந்தன. அவரைத்தவிர வேறு எவருக்கும் தெரிந்திராத பெயர் ஒன்று அவர்மீது எழுதப்பட்டிருந்தது.✠ 13இரத்தம் தோய்ந்த ஆடையை அவர் அணிந்திருந்தார். ‘கடவுளின் வாக்கு’ என்பது அவரது பெயர். 14வெண்மையும் தூய்மையுமான விலையுயர்ந்த மெல்லிய ஆடை அணிந்த விண்ணகப்படைகள் வெண் குதிரைகளில் அவரைப்பின் தொடர்ந்தன. 15நாடுகளைத் தாக்குவதற்காக அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் ஒன்று வெளியே வந்தது. அவர் இருப்புக்கோல் கொண்டு அவர்களை நடத்துவார்; எல்லாம் வல்ல கடவுளின் கடும் சீற்றம் என்னும் பிழிவுக்குழியில் திராட்சை இரசத்தை அவர் பிழிந்தெடுப்பார்.✠

16‘அரசர்க்கெல்லாம் அரசர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்’ என்ற பெயர் அவருடைய ஆடையிலும் தொடையிலும் எழுதப்பட்டிருந்தது. 17பின்னர், ஒரு வானதூதர் கதிரவன்மீது நிற்பதை நான் கண்டேன். அவர் நடுவானில் பறந்துகொண்டிருந்த எல்லாப் பறவைகளையும் பார்த்து, உரத்த குரலில் கத்தி, “வாருங்கள், கடவுள் அளிக்கும் பெரும் விருந்துக்கு வந்துகூடுங்கள்.

18அரசர்கள், ஆயிரத்தவர் தலைவர்கள், வலியோர், படைவீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், உரிமைக்குடிமக்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர் ஆகிய அனைவருடைய சதையையும் தின்ன வாருங்கள்” என்றார். 19அந்த விலங்கும் மண்ணுலக அரசர்களும் அவர்களுடைய படைகளும் குதிரைமீது அமர்ந்திருந்தவரோடும் அவருடைய படைகளோடும் போர் தொடுக்குமாறு கூடியிருக்கக் கண்டேன்.

20அவ்விலங்கு பிடிபட்டது. அதன் முன்னிலையில் அரும் அடையாளங்கள் செய்திருந்த போலி இறைவாக்கினனும் அதனோடு சேர்ந்து பிடிபட்டான். தான் செய்த அரும் அடையாளங்களால் அந்த விலங்குக்குரிய குறி இட்டுக்கொண்டவர்களையும் அதன் சிலையை வணங்கி வந்தவர்களையும் ஏமாற்றியவன் அவனே. அந்தப் போலி இறைவாக்கினனும் விலங்கும் கந்தகம் எரிந்துகொண்டிருந்த நெருப்பு ஏரியில் உயிரோடு எறியப்பட்டார்கள்.✠ 21மற்றவர்கள் குதிரைமீது அமர்ந்திருந்தவருடைய வாயினின்று வெளியே வந்த வாளால் கொல்லப்பட்டார்கள். பறவைகளெல்லாம் அவர்களின் சதையை வயிறாரத் தின்றன.


19:2 இச 32:43; 2 அர 9:7. 19:3 எசா 34:10. 19:5 திபா 115:13. 19:6 எசே 1:24; திபா 93:1; 97:1; 99:1. 19:9 மத் 22:2,3. 19:11 எசே 1:1; திபா 96:13; எசா 11:4. 19:12 தானி 10:6. 19:15 திபா 2:9; எசா 63:3; யோவே 3:13; திவெ 14:20. 19:17-18 எசே 39:17-20. 19:20 திவெ 13:1-18.


19:1 ‘அல்லேலூயா’ என்ற எபிரேயச் சொல்லுக்கு ‘ஆண்டவரைப் போற்றுங்கள்’ என்பது பொருள். 19:10 ‘இயேசுவுக்குச் சான்று பகர்ந்த’ என்னும் சொற்றொடரை ‘இயேசு அளித்த சாட்சியத்தை ஏற்றுக்கொண்டவர்கள்’ எனவும் மொழிபெயர்க்கலாம்.


அதிகாரம் 20

ஆயிரம் ஆண்டு ஆட்சி


1பின்னர், வானதூதர் ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கிவரக் கண்டேன். படுகுழியின் திறவுகோலும் முரட்டுச் சங்கிலியும் அவர் கையில் இருந்தன.

2அலகை என்றும் சாத்தான் என்றும் அழைக்கப்பட்ட அரக்கப் பாம்பை அவர் பிடித்தார். அதுவே தொடக்கத்தில் இருந்த பாம்பு. வானதூதர் ஆயிரம் ஆண்டுகளுக்கு அதைக் கட்டிவைத்தார்;✠ 3பின்னர் அதைப் படுகுழியில் தள்ளி, குழியை அடைத்து, முத்திரையிட்டார்; இவ்வாறு அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை நாடுகளை அது ஏமாற்றாதவாறு செய்தார். இதன்பின் சிறிது காலத்துக்கு அது கட்டவிழ்த்து விடப்பட வேண்டும்.

4பின்பு, நான் அரியணைகளைக் கண்டேன். தீர்ப்பளிக்கும் அதிகாரம் பெற்றிருந்த சிலர் அவற்றின்மீது வீற்றிருந்தனர். கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததற்காகத் தலை கொடுத்தவர்களின் ஆன்மாக்களையும் கண்டேன். அவர்கள் அந்த விலங்கையோ அதன் சிலையையோ வணங்கியதில்லை; அதற்குரிய குறியைத் தங்கள் நெற்றியிலோ கையிலோ இட்டுக்கொண்டதுமில்லை. அவர்கள் மீண்டும் உயிர்பெற்று, ஆயிரம் ஆண்டுகள் கிறிஸ்துவோடு ஆட்சி புரிந்தார்கள்.✠

5இறந்த ஏனையோர் அந்த ஆயிரம் ஆண்டுகள் முடியும்வரை உயிர் பெறவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.

6இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறுவோர் பேறுபெற்றோர்; அவர்கள் தூயோர் ஆவர். அவர்கள் மீது இரண்டாம் சாவுக்கு அதிகாரம் இல்லை. அவர்கள் கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் பணிபுரியும் குருக்களாய் இருப்பார்கள்; கிறிஸ்துவோடு ஆயிரம் ஆண்டுகள் ஆட்சிபுரிவார்கள்.


சாத்தானின் தோல்வி


7அந்த ஆயிரம் ஆண்டுகள் முடிந்ததும் சாத்தான் சிறையிலிருந்து கட்டவிழ்த்து விடப்படுவான். 8மண்ணகத்தின் நான்கு திக்குகளிலும் உள்ள நாடுகளை, அதாவது கோகு, மாகோகு என்பவற்றை ஏமாற்றவும், அங்கிருந்து கடல் மணல் போன்ற பெருந் தொகையினரைப் போருக்கு ஒன்று திரட்டவும் அவன் புறப்பட்டுச் செல்வான்.✠

9அவர்கள் மண்ணுலகெங்கும் பரவிச் சென்று, இறைமக்களின் பாசறையையும் கடவுளின் அன்புக்குரிய நகரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஆனால், நெருப்பு வானத்திலிருந்து வந்து அவர்களைச் சுட்டெரித்தது.

10பின்பு, அவர்களை ஏமாற்றி வந்த அலகை கந்தக, நெருப்பு ஏரியில் எறியப்பட்டது. அங்கேதான் அந்த விலங்கும் அதன் போலி இறைவாக்கினனும் எறியப்பட்டிருந்தார்கள். அவர்கள் இரவு பகலாக என்றென்றும் வதைக்கப்படுவார்கள்.


இறுதித் தீர்ப்பு


11பின்பு, பெரிய, வெண்மையான ஓர் அரியணையைக் கண்டேன். அதில் ஒருவர் வீற்றிருந்தார். அவர் முன்னிலையில் மண்ணகமும் விண்ணகமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன.

12இறந்தோருள் சிறியோர், பெரியோர் ஆகிய அனைவரும் அந்த அரியணைமுன் நிற்கக் கண்டேன். அப்பொழுது நூல்கள் திறந்து வைக்கப்பட்டன. வேறொரு நூலும் திறந்து வைக்கப்பட்டது. அது வாழ்வின் நூல். இறந்தோரின் செயல்கள் அந்நூல்களில் எழுதப்பட்டிருந்தன. அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 13பின்னர், கடல் தன்னகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றியது. அதுபோலச் சாவும், பாதாளமும் தம்மகத்தே இருந்த இறந்தோரை வெளியேற்றின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கு ஏற்பத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

14சாவும் பாதாளமும் நெருப்பு ஏரியில் எறியப்பட்டன. இந்த நெருப்பு ஏரியே இரண்டாம் சாவு. 15வாழ்வின் நூலில் பெயர் எழுதப்படாதோர் நெருப்பு ஏரியில் எறியப்பட்டார்கள்.


20:2 தொநூ 3:1. 20:4 தானி 7:9,22. 20:8 எசே 7:2; 38:2,9,15. 20:11-12 தானி 7:9,10.


அதிகாரம் 21

9. புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும்


1பின்பு, நான் புதியதொரு விண்ணகத்தையும் புதியதொரு மண்ணகத்தையும் கண்டேன். முன்பு இருந்த விண்ணகமும் மண்ணகமும் மறைந்துவிட்டன. கடலும் இல்லாமற் போயிற்று.✠ 2அப்பொழுது புதிய எருசலேம் என்னும் திருநகர் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவரக் கண்டேன். தன் மணமகனுக்காகத் தன்னையே அணி செய்து கொண்ட மணமகளைப்போல் அது ஆயத்தமாய் இருந்தது.✠

3பின்பு விண்ணகத்திலிருந்து எழுந்த பெரும் குரல் ஒன்றைக் கேட்டேன். அது, “இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார்; அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார்.✠

4அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது; முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன” என்றது.✠

..

5அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்” என்று கூறினார். மேலும், “‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’ என எழுது” என்றார்.

6பின்னர், அவர் என்னிடம் கூறியது: “எல்லாம் நிறைவேறிவிட்டது; அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன்.✠

7வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள்.✠

8ஆனால் கோழைகள், நம்பிக்கை இல்லாதோர், அருவருப்புக்குரியோர், கொலையாளிகள், பரத்தைமையில் ஈடுபடுவோர், சூனியக்காரர் சிலைவழிபாட்டினர், பொய்யர் ஆகிய அனைவருக்கும், நெருப்பும் கந்தகமும் எரியும் ஏரியே உரிய பங்கு ஆகும். இதுவே இரண்டாம் சாவு.”


புதிய எருசலேம்


9இறுதியான அந்த ஏழு வாதைகள் நிறைந்த ஏழு கிண்ணங்களைக் கொண்டிருந்த ஏழு வானதூதர்களுள் ஒருவர் வந்து, “வா, ஆட்டுக்குட்டி மணந்துகொண்ட மணமகளை உனக்குக் காட்டுவேன்” என்று என்னிடம் கூறினார். 10தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார்.✠ 11அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று; விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. 12அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. 13கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. 14நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன. 15என்னோடு பேசியவர் நகரையும் அதன் மதிலையும் வாயில்களையும் அளக்கும்பொருட்டுப் பொன்னாலான ஓர் அளவுகோலை வைத்திருந்தார். 16அந்நகரம் சதுரமாய் இருந்தது; அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்த அளவுகோலைக் கொண்டு நகரை அளந்தார். அதன் அளவு இரண்டாயிரத்து நானூறு கிலோ மீட்டர். அதன் நீளம், அகலம், உயரம் எல்லாமே ஒரே அளவுதான்.✠ 17பின் அவர் மதிலை அளந்தார். அதன் உயரம் இருநூற்றுப் பதினாறு அடி. மனிதரிடையே வழக்கில் இருந்த அளவைகளையே அவரும் பயன்படுத்தினார். 18அதன் மதில் படிகக் கற்களால் கட்டப்பட்டிருந்தது. அந்நகரோ தூய்மையான, கண்ணாடி போன்ற பசும்பொன்னால் ஆனது. 19நகர மதிலின் அடிக்கற்கள் விலையுயர்ந்த எல்லாவித கற்களாலும் அணிசெய்யப்பட்டிருந்தன; முதலாவது படிகக் கல், இரண்டாவது நீலமணி, மூன்றாவது பலவண்ணப்படிகம், நான்காவது மரகதம்; 20ஐந்தாவது கோமேதகம், ஆறாவது மாணிக்கம், ஏழாவது பொற்கல், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புட்பராகம், பத்தாவது வைடூரியம், பதினொன்றாவது பதுமராகம், பன்னிரண்டாவது சுகந்தி. 21பன்னிரண்டு வாயில்களும் பன்னிரண்டு முத்துகளால் ஆனவை. ஒவ்வொரு வாயிலும் ஒவ்வொரு வகையான முத்தால் ஆனது. நகரின் தெரு தெள்ளத் தெளிவான கண்ணாடிபோன்ற பசும்பொன்னால் ஆனது.

22நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். 23அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு. 24மக்களினத்தார் அதன் ஒளியில் நடப்பர்; மண்ணுலக அரசர்கள் தங்களுக்குப் பெருமை சேர்ப்பவற்றையெல்லாம் அங்குக் கொண்டு செல்வார்கள். 25அதன் வாயில்கள் நாள் முழுவதும் திறந்திருக்கும். அங்கு இரவே இராது. 26உலகின் பெருமையும் மாண்பும் எல்லாம் அங்குக் கொண்டு செல்லப்படும். 27ஆனால், தீட்டுப்பட்டது எதுவும் ஒருபோதும் அதில் நுழையாது. அதுபோல் அருவருப்பானதைச் செய்வோரும் பொய்யரும் அதில் நுழையமாட்டார்கள். ஆட்டுக்குட்டி வைத்திருக்கும் வாழ்வின் நூலில் பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டுமே அதில் நுழைவார்கள்.


21:1 எசா 65:17; 66:22; 2 பேது 3:13. 21:2 திவெ 3:12; எசா 61:10. 21:3 எசே 37:27; லேவி 26:11,12. 21:4 எசா 25:8; 35:10; 65:19. 21:6 எசா 55:1. 21:7 2 சாமு 7:14; திபா 89:26,27. 21:10 எசே 40:2. 21:12-13 எசே 48:30-35.


21:16 ‘பன்னிரண்டு ஆயிரம் ஸ்தாதியம்’ என்பது கிரேக்க பாடம்.


அதிகாரம் 22

1பின்பு, அந்த வானதூதர் வாழ்வு அளிக்கும் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஓர் ஆற்றை எனக்குக் காட்டினார். அது பளிங்குபோல் ஒளிர்ந்தது. அது கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருந்த அரியணையிலிருந்து புறப்பட்டு,✠ 2நகரின் தெரு நடுவே பாய்ந்தோடியது. ஆற்றின் இரு மருங்கும் வாழ்வுதரும் மரம் இருந்தது.⁕ மாதத்திற்கு ஒருமுறையாக அது ஆண்டுதோறும் பன்னிரு முறை கனி தரும். அதன் இலைகள் மக்களினங்களைக் குணப்படுத்தக் கூடியவை.✠ 3சாபத்துக்கு உள்ளானது எதுவும் நகரில் இராது. கடவுளும் ஆட்டுக்குட்டியும் வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும். கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள்;✠ 4அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். 5இனி இரவே இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ அவர்களுக்குத் தேவைப்படாது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் அவர்கள் மீது ஒளி வீசுவார்; அவர்கள் என்றென்றும் ஆட்சிபுரிவார்கள்.✠


கிறிஸ்துவின் வருகை


6பின்னர், அந்த வானதூதர் என்னிடம், “இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை. விரைவில் நிகழவேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு, இறைவாக்கினரைத் தூண்டியெழுப்பும் கடவுளாகிய ஆண்டவர் தம் வானதூதரை அனுப்பினார்.

7இதோ! நான் விரைவில் வருகிறேன்” என்றார். இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கடைப்பிடிப்போர் பேறுபெற்றோர்.

8யோவானாகிய நானே இவற்றையெல்லாம் கண்டேன், கேட்டேன். அப்பொழுது இவற்றை எனக்குக் காட்டிய வானதூதரை வணங்கும் பொருட்டு அவருடைய காலடியில் விழுந்தேன். 9அவரோ என்னிடம், “வேண்டாம். உனக்கும் இறைவாக்கினர்களான உன் சகோதரர் சகோதரிகளுக்கும், இந்த நூலில் உள்ள வாக்குகளைக் கடைப்பிடிப்போருக்கும் நான் உடன் பணியாளனே. கடவுளை மட்டுமே நீ வணங்க வேண்டும்” என்றார். 10அவர் தொடர்ந்து என்னிடம் பின்வருமாறு கூறினார்: “இந்த நூலில் உள்ள இறைவாக்குகளை முத்திரையிட்டு வைக்காதே; இதோ! காலம் நெருங்கி வந்துவிட்டது. 11இதற்கிடையில், தீங்குபுரிவோர் தீங்குபுரிந்து கொண்டே இருக்கட்டும்; இழுக்கானவற்றைச் செய்வோர் இழுக்கானவற்றைச் செய்து கொண்டே இருக்கட்டும்; தூயோர் தூய்மையானவற்றைச் செய்துகொண்டே இருக்கட்டும்.✠

12“இதோ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கவிருக்கின்ற கைம்மாறு என்னிடம் உள்ளது.✠ 13அகரமும் னகரமும், முதலும் இறுதியும், தொடக்கமும் முடிவும் நானே.✠ 14“தங்கள் ஆடைகளைத் துவைத்துக் கொண்டோர் பேறுபெற்றோர். வாழ்வு தரும் மரத்தின்மீது அவர்களுக்கு உரிமை உண்டு. அவர்கள் வாயில்கள் வழியாக நகருள் நுழைவார்கள். 15நடத்தைகெட்டோர்,⁕ சூனியக்காரர், பரத்தைமையில் ஈடுபடுவோர், கொலையாளிகள், சிலைவழிபாட்டினர், பொய்ம்மை நாடி அதன்படி நடப்போர் ஆகிய அனைவரும் அதில் நுழைய மாட்டார்கள்.


10. முடிவுரை


16“திருச்சபைகளுக்காக உங்கள்முன் இவ்வாறு சான்று பகருமாறு இயேசுவாகிய நான் என் வானதூதரை அனுப்பியுள்ளேன். தாவீதின் குலக்கொழுந்தும், வழித்தோன்றலும் நானே! ஒளிபடைத்த விடிவெள்ளியும் நானே!”✠ 17தூய ஆவியாரும் ஆட்டுக்குட்டியின் மணமகளும் சேர்ந்து, “வருக! வருக!” என்கிறார்கள். இதைக் கேட்போரும், “வருக! வருக!” எனச் சொல்லட்டும். தாகமாய் இருப்போர் என்னிடம் வரட்டும்; விருப்பம் உள்ளோர் வாழ்வு தரும் தண்ணீரை இலவசமாய்க் குடிக்கட்டும்.”✠

18இந்த நூலில் உள்ள இறைவாக்குகளைக் கேட்போர் அனைவரையும் யோவானாகிய நான் எச்சரிப்பது யாதெனில்: இந்த இறைவாக்குகளோடு எதையாவது யாரேனும் சேர்த்தால், இந்நூலில் எழுதப்பட்டுள்ள வாதைகள் அவர்களை வந்தடையுமாறு கடவுள் செய்வார். 19இந்த நூலில் உள்ள இறைவாக்குகளுள் எதையாவது யாரேனும் எடுத்து விட்டால், இந்த நூலில் எழுதப்பட்டுள்ள வாழ்வு தரும் மரத்தினின்றும் திருநகரினின்றும் அவர்களுக்குரிய பங்கைக் கடவுள் எடுத்துவிடுவார்.

20இவற்றுக்குச் சான்று பகர்பவர், “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும். 21ஆண்டவராகிய இயேசுவின் அருள் அனைவரோடும் இருப்பதாக!


22:1 எசே 47:1; செக் 14:8. 22:2 தொநூ 2:9. 22:3 செக் 14:11. 22:5 எசா 60:19; தானி 7:18. 22:11 தானி 12:10. 22:12 எசா 40:10; 62:11; திபா 28:4; எரே 17:10. 22:13 திவெ 1:8, 17; 2:8; எசா 44:6; 48:12. 22:16 எசா 11:1, 10. 22:17 எசா 55:1. 22:18-19 இச 4:2, 12:32.


22:2 * ‘நகரின் தெரு நடுவிலும் ஆற்றின் இரு மருங்கிலும் வாழ்வு தரும் மரங்கள் இருந்தன’ என்றும் மொழிபெயர்க்கலாம். 22:15 ‘நாய்கள்’ என்பது மூலப்பாடம்.